என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

அட்சரம்

 

எஸ்.ராமகிருஷ்ணனால் துவங்கப் பெற்று சில ஆண்டுகள் பயணித்த அட்சரம் இதழின் முக்கியப் பதிவுகள் இங்கே இடம் பெறும்

 

இதழ் – 1 : மிலன் குந்தேரா


(1980-88 இடையில் பல்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டிகளிலிருந்து)

தமிழில் - ஹரிபிரசாத்

கே: இந்த உலகத்தின் அழிவு சீக்கிரமாகவே வந்துவிடும் என நினைக்கிறீர்களா

குந்தேரா: சீக்கிரம் என்பதை என்ன அளவில் என குறிக்கிறீர்கள் என்தைப் பொறுத்து அது. 

கே: நாளை அல்லது அடுத்த நாள்

குந்தேரா: உலகம் தன் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக நினைப்பது ஒரு புராதன நம்பிக்கை. 

கே: அதற்கு கவலைப்பட வேண்டாம் என்கிறீர்களா

குந்தேரா: அப்படியில்லை, காலம் காலமாக மக்கள் மனதில் இப்படியொரு பயம் இருக்குமானால், அது நிஜமாகவும் நடக்ககூடும். 

கே: பிராக்கில் நீங்கள் இருந்தபோது, வெளியிட்ட புத்தகங்கள் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்றன.ஆனால் ருஷ்ய ஆக்ரமிப்பிற்குப் பிறகு, நீங்கள் திரைப்பட பயிற்சி கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டீர்கள். பொதுவாக புத்தக அடுக்கிலிருந்து உங்கள் புத்தகங்கள் வெளியே எடுத்து வீசப்பட்டன. ஏழு வருடங்களுக்குப் பிறகு, நீங்களும் உங்கள் மனைவியுமாக கொஞ்சம் புத்தகங்கள், உடைகளுடன் பிரான்ஸ் தேசத்திற்குள் அடைக்கலமானீர்கள். இப்போது மிக அதிகமாகப் பேசப்படும் ஐரோப்பிய எழுத்தாளர் நீங்கள். இந்த அந்நியமாதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

குந்தேரா: ஒரு எழுத்தாளன் என்ற முறையில் பல்வேறு தேசங்களில் வாழ்வது ஒரு வரமே. பல்முனைகள் வழி உலகை காணவும், புரிந்துகொள்ளவும் இது ஒரு சந்தர்ப்பம். என் சமீபத்திய புத்தகம், பிரான்ஸிற்கு வந்த பிறகு எழுதப்பட்டது. ஒரு தனித்துவ விசேஷ நிலைமையை முன் வைத்திருக்கிறேன்.பிரான்ஸ் நூற்றாண்டுகளாக உலகத்தின் மையமாக இருந்திருக்கிறது. தற்போது அது எவ்வித முக்கிய வரலாற்று நிகழ்வுமின்றி வெறுமையோடு உள்ளது. 

கே: ஒரு நாவலை எது நாவலாக உருமாற்றுகிறது அத்தகைய விசேஷகுறி ஏதாவது உங்களால் அறியமுடிகிறதா

குந்தேரா: ஒரு நாவல் என்பது ஒரு நீண்ட ஒருமை கொண்ட உரைநடை, கதாபாத்திரங்களால் உருவாக்கப்படுகிறது.

கே: உங்கள் கதைகளின் பின்புலம் ஏன் எப்போதும் ஒருவித மயக்கமூட்டும் சித்தரிப்புகள் தொடர்கின்றன

குந்தேரா: நான் சிறுவனாக இருந்தபோது யாராவது என்னிடம், ஒரு நாள் உனது தேசம் இந்த உலகத்திலிருந்து மறைந்து போய்விடும் என சொல்லி இருப்பார்களேயாயின், அது முட்டாள்தனமான கற்பனை என மறுத்திருப்பேன். என்னால் அதை கற்பனைகூட செய்ய முடியாமல் போயிருக்கும். எந்த ஒரு மனிதனும் தான் அநித்யமானவன் என உணர்ந்தே இருக்கிறான். ஆனால் அவனது தேசம் நிலையானது, நித்யமானது என்றே கருதிவருவான். ஆனால் 1968ல் ருஷ்ய ஆக்ரமிப்பு செக் நாட்டில் நிகழ்ந்தபோது, தனது தேசம் ஐரோப்பாவிலிருந்து மெல்ல துடைத்து அழிக்கப்படப்போகின்றதா என்பது பலரும் உணர்ந்தது. சரித்திரத்தில் 40 மில்லியன் உக்ரேனியர்களுக்கு இப்படி நிலைதானே உருவானது. லிதுவேனியர்கள் 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கோலோச்சிய குடி. அவர்களை ருஷ்யா பாதி அழிந்துபோன ஒரு தொல்குடி போலதான் வைத்திருக்கின்றது.

 

கே: சிரிப்பு எப்போதும் உங்களுக்கு நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றது. உங்கள் புத்தகங்களில் கேலியும் , பரிகாசமும் நிரம்பியே காணப்படுகின்றது. உலகில் சிரிப்பு குறையும்போதுதான் உங்கள் கதாபாத்திரங்கள் துயரமடைகிறார்களே

குந்தேரா: சிரிப்புக்கு முக்கியத்துவத்தை நான் ஸ்டாலினிய பயங்கரவாத நாட்களில்தான் உணர்ந்தேன். அப்போது எனக்கு 20 வயதிருக்கும். அப்போது ஒரு புன்னகைதான் பரஸ்பர நம்பிக்கைக்குறிய வெளிப்பபாடு, பயத்திலிருந்து விடுபடக்கூடிய சைகை. உலகம் தனது பரிகாச குணத்தை மெல்ல இழந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். 

கே: உங்கள் புத்தகமொன்றில் தேவதைகளின் சிரிப்பையும், சாத்தானின் சிரிப்பையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். சாத்தானின் சிரிப்பு கடவுள் உருவாக்கிய உலகம் அர்த்தமற்றதாக இருக்கிறது என்பதில் பிறக்கிறது. தேவதைகளின் சிரிப்பு உலகம் கடவுளால் கேளிக்கையூட்டுவதாக இருப்பதால் பிறப்பதாக சொல்கிறீர்களே

குந்தேரா: ஆமாம். சிரிப்பு இருவேறு மனதளங்களைக் கொண்டது. அதன் மெய்யியல் வேட்கையும் மாறுபாடு கொண்டவை. ஒரு சவக்குழியில் புதிய தொப்பியொன்று நழுவி வீழ்வதாக கண்டால் மரணத்திலும் பலருக்கு சிரிப்பு வருகிறதல்லவா. இரு காதலர்கள் புல்வெளியில், மரத்தடியில் கை கோர்த்துக்கொண்டு சிரிக்கிறார்களே, அந்த சிரிப்பு எந்த விதமான முகாந்திரமற்றது. அது ஒரு தீவிரமான புன்னகை. இரு விதமான சிரிப்பும் வாழ்வின் தேவையே. இது போன்ற உற்சாகமூட்டும் சிரிப்பு , இதை அனுபவிக்க மறுப்பவனை தூக்கிலிடவும் தயங்காதது. இதற்கு இணையாக, உலகில் யாவும் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. அது குரூப்செக்ஸாக இருக்கலாம். மனிதவாழ்வு இருமுனை கொண்டிருக்கிறது. ஒன்று பயங்கரவாதம். மற்றது சந்தேகவாதம்.  

கே: தேவதைகளின் சிரிப்பை, வாழ்வின் மென்மையான பாட்டாக சொல்கிறீர்களே

குந்தேரா: சொர்க்கம் பற்றிய கனவு, நீண்ட நெடும் காலமாக நம்மோடு தொடர்ந்து வருகிறது. ஆந்த்ரேபிரேடன் கூட சொர்க்கத்தை ஒரு கண்ணாடி மாளிகையாக கற்பனை செய்தார். ஆனால் சொர்க்கத்தின் தோட்டத்திலும் சித்ரவதை கூடம் அமைக்கவே அரசாள்வோர் விரும்புகிறார்கள். நாளடைவில் இந்த சித்ரதை கூடம் பெரிதாகிப் பெரிதாகி, சொர்க்கம் மிகச் சிறியதாகிவிடும். 

கே: பிரான்சில் உங்கள் கதைகளுக்கு என்ன வரவேற்பிருக்கிறது

குந்தேரா: நான் ஒரு காதல் கதையை எழுதுகிறேன், அதில் மூன்று வரிகள் ஸ்டானைப் பற்றிருக்கும். மக்கள் அந்த மூன்று வரிகளை மட்டுமே பெரிதாக்கி பேசுகிறார்கள். மற்றதை மறந்துவிடுகிறார்கள் , அல்லது அரசியலின் உருவகமாக புரிந்துகொள்கிறார்கள். 

கே: பிரான்ஸ் வந்த பிறகும் உங்கள் வீடு குறித்தவை யாவும் ஜெர்மானியதன்மை கொண்டிருக்கிறதே

குந்தேரா: பிரஞ்சில் வீடு என்பதை குறிக்கும் தனி சொல் இல்லை. பிரஞ்சில் வீட்டை குறிக்கும் சொற்கள் அந்த தேசத்தை, மாநிலத்தை, அரசியலை தனது உறுப்பாக்கியே உள்ளது. ஆனால் வீடு என்பது இதோடு தொடர்பற்ற, அழகான ஓர் உணர்வு. யாராவது என்னிடம் எதை வீடு என்கிறீர்கள், வீட்டிலிருத்தல் என்பது எதை குறிக்கிறது எனக்கேட்டால் என்னால் விளக்க முடியாது. ஆனால் நான் பிராக்கில் இருந்ததை விடவும் பாரீசில் மிக அந்நியோன்யமாகதான் உணர்கிறேன். ஆனால் நான் வீட்டை துறந்து வரவில்லையா என யோசிக்கும்போது வீட்டை இழந்தே வந்திருக்கிறேன் என்ற உணர்ச்சிநிலை இருக்கிறது. அது என்னை தீவிரமாக கவலையடையச் செய்யவில்லை. 

 

கே: எது உங்களுக்கு முதலில் தோன்றுகிறது, உங்களது கதாமனிதர்களா அல்லது கதையம்சமா

குந்தேரா: கதையம்சம்தான், ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட கதையம்சத்தை அறிவதற்காகவே உருவாக்கப்படுகிறது, உதாரணமாக தெரசா என்ற ஒரு கதாபாத்திரம் ஒரு நாவலில் வருகிறது. அவளுக்கு தனது உடல் அருவருப்பூட்டுவதாக உள்ளது, ஏன் இந்த உடம்பு நமக்கு இருக்கிறது. எதற்காக இது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை அவள்வழி முன் வைக்கப்படுகின்றன. உடலால் இருப்பது நமது முதல் வன்முறை என்று தோன்றுகிறது. தெரசா போன்றவர்களுக்கு வாழ்வின் மையமே வன்முறைதான். இதன் பிறகுதான் அவள் யாரைப்போல இருப்பாள், யாரைப்போல உடையுடுத்துவாள், போன்றவை இருக்கிறது. இது எதுவுமற்று தாமஸ் என்றொரு காதாபாத்திரம் வருகிறது.

அதற்குரிய உடல் விவரணை எதுவும் தேவையற்றதால், அவசியமற்றதாகும். அந்த கதாம்சத்தை வெளிப்படுத்தும் வடிவமே தாமஸ். 

கே: எழுத்தாளர் என்ற முறையில் உங்களைப்பற்றி எப்படி விவரிப்பீர்கள்

குந்தேரா: அப்படி முயற்சி செய்தால், ஒன்றுமில்லை என்பதில்தான் முடியும். எல்லோர் வாழ்விலேயும் போல எனது வாழ்வும் நூற்றுக்கணக்கான காரணங்கள் , நூற்றுக்கணக்கான கதாம்சங்கள் கொண்டது. இதில் எது முக்கியமானதென எனக்கு தெரியாது. 

கே: காப்கா, மூசில், கோம்பிரோலச் மூவரையும் முக்கியமான எழுத்தாளராக மதிக்கிறீர்கள். இவர்கள் உங்களைப் பாதித்து இருக்கிறார்களா

குந்தேரா: பாதிப்பா? இல்லை, இது வேறுவிதமானது. அவர்கள் நின்றிருக்கும் அதே அழகியல் கூரையின் கீழேதான் நானும் இருக்கிறேன். ஹெமிங்வே, புரூட்ஸ், ஜாய்சின் தாழ்வாரங்களில் அல்ல. நான் குறிப்பிட்ட மூவரும் ஒருவரையொருவர் பாதித்து கொண்ட எழுத்தாளர்கள் அல்ல. சொல்லப் போனால், அவர்களை ஒருவரையொருவர் பிடிக்காது. மூசில் பிரோலச்சை நிராகரிப்பவர், நான் இந்த மூவரையும் ஒன்று சேர்த்துப் பேசுகிறேன். அந்த ஒற்றையடிப் பாதைதான் எனது தலைக்கு மேல் உள்ள கூரை. 

கே: ஐரோப்பிய நாவலை குறிப்பிடும்போது அமெரிக்க நாவல் பற்றி குறைவாக பேசுகிறீர்களே

குந்தேரா: எனக்கு சரியானதொரு வார்த்தை கிடைக்கவில்லை. மேற்கத்திய நாவல் பற்றி சொன்னால் ருஷ்ய நாவலை விடுபட வேண்டியிருக்கிறது. உலக நாவல் பற்றி சொன்னால், ஐரோப்பாவை மையம்கொண்ட எழுத்து என நான் நினைப்பது மறைந்துவிடுகிறது. அதனால்தான் ஐரோப்பிய நாவல் என்ற ஒரு பதத்தை பயன்படுத்துகிறேன். இது புவியியல் சார்ந்ததாக பயன்டுத்திவிடவில்லை. மாறாக நான் சொல்வது செர்வாண்டிஸிலிருந்து பாக்னர் வரை கணக்கில் கொண்ட நாவல் வகை. 

கே: நாவலில் சரித்திரத்தை முதன்மைப்படுத்தும் நீங்கள் எந்த பெண் எழுத்தாளரையும் பற்றி குறிப்பிடவே இல்லை. இதை எப்படி விளக்குவீர்கள்

குந்தேரா: புத்தகத்தின் பால்தன்மைதான் முக்கியமானதே தவிர, எழுத்தாளர் ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. எல்லா நாவல்களும் இருபால் தன்மையானது. உலகின்ஆண் தன்மையையும் பெண்தன்மையையும் இணைந்தே விவரிக்கின்றன. எழுத்தாளர் பெண்ணாக இருப்பது அவரது குறிப்பிட்ட விஷயம். 

கே: ருஷ்ய இலக்கியங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள், அதை தொடர்ந்து வாசிக்கிறீர்களா?

குந்தேரா: எனக்கு டால்ஸ்டாயை மிகவும் பிடிக்கிறது. அவர் தஸ்தாவெஸ்கியை விடவும் மிக நவீனமானவராக இருக்கிறார். மனித சுபாவத்தின் புதிர்த் தன்மையை டால்ஸ்டாய்தான் சரியாக உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அடக்கமுடியாத மனஉணர்ச்சிகளை எல்லாவிதமான தடையுமற்று ஆழ்மனதிலிருந்து பீறிட செய்கிறார் டால்ஸ்டாய். 

அன்னாகாரீனாவின் மரணத்திற்கு முந்தைய பத்திகளை படித்து பாருங்கள். எதற்காக அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். இந்த ஆசை எப்படி பிறந்தது, இதற்கு டால்ஸ்டாய் அன்னாகாரீனாவின் ஆழ்மனத்திலிருந்து நனவோடை வழியாக வெளிப்படுத்துகிறார். துண்டிக்கப்பட்ட காட்சிகளாக நகரமும் வீதிகளும் அவளது தலையினுள் தொடர்பற்று, குழம்பி நிரம்புகின்றன. முதலில் தனி மொழியை (Interior Monologue) பயன்படுத்தியவர் ஜேம்ஸ் ஜாய்ஸ் அல்ல, டால்ஸ்டாய்தான்.

 

கே: உங்கள் அப்பாவை பற்றி உங்களின் எழுத்தில் அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள் அவரின் நெருக்கத்தைப் பற்றி

குந்தேரா: எனது அப்பா ஒரு பியானோ கலைஞர். அவருக்கு நவீன இசையில் ஆர்வம் இருந்தது. ஸ்ட்ராவன்ஸ்சி, ஷோகன்பைர், ஜெனாக் போன்ற நவீன இசையமைப்பாளர்களிடம் ஈடுபாடு உள்ளவர். இவர் தஸ்தாவெஸ்கியின் மரண வீட்டின் குறிப்புகளை இசை வடிவாக்கியுள்ளது மிகவும் குறிப்பிடவேண்டும். இந்த இசை கோர்வையை எனது தந்தை யாருமற்ற அரங்கில் வாசித்துக்கொண்டிருப்பார். சிறு வயதில், நான் ஸ்ட்ராவன்ஸ்கியை கேட்க மக்கள் விரும்புவதை வெறுத்திருக்கிறேன். மொசார்ட், சைகோவ்ஸ்கிபோல் அவரை பிடிக்காததை தாங்க முடியாது. நான் இசை கலைஞனாவதை விரும்பவேயில்லை, பதிலாக நவீன ஓவியத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு எனது அப்பா ஒரு காரணம். எனக்கு இசையில் விருப்பமிருக்கிறது. இசைக்கலைஞர்களிடமல்ல.

நான் எனது நாட்டை பிரிந்து பிரான்ஸ் வரும்போது மிக சொற்பமான புத்தகங்களே எடுத்து வந்தேன். அதில் ஜான் அப்டைக் எழுதிய The Centour ஒன்று. இது என்னை மிக பாதித்த புத்தகம். இது ஆழமான, புறக்கணிக்கப்பட்ட தகப்பன் அன்பை பற்றியது. 

கே: உங்கள் நாவலில் சுயசரித தன்மை கலந்திருப்பது உங்கள் வாழ்வு அனுபவங்கள் கவர்ந்திருப்பதால்தானா

குந்தேரா: எனது எந்த கதாபாத்திரமும் எனது சுய உருவமல்ல. எனது கதாபாத்திரங்கள், புனைவு மனிதர்கள். அதில் சுயசரித தன்மை படிவதை நான் விரும்புவதில்லை.  

மிலன் குந்தேரா  

படைப்புகள் 

1)       Joke (a novel written in czech. 1965)

2)       Laughable Loves (short stories written in czech between 1958-68)

3)       Life is Elsewhere (a novel written in czech 1970)

4)       Farewell waltz  (a novel written in czech 1971)

5)       The Book of Laughter and forgetting (a novel written in czech 1978)

6)       The unbearable Lightness of being (a nove written in czech 1982)

7)       Jacques and His Master (a play written in czech 1971)

8)       The Art of Novel (an essay in seven parts written in French 1985)

9)       Immartality (a novel written in czech 1988)

10)     Testaments Batrayed (an essay in nine parts written in French 1992)

11)     Slowness (a novel written in Frech 1994)

12)     Identity (a novel written in French 1996)