என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

நேர்காணல்கள்
 
நேர்காணல் – 2
 
 

முதன்முதலில் புத்தகங்கள் உங்களுக்கு அறிமுகமான விதத்தை பற்றி சொல்லுங்கள்

எனக்கு அறிமுகமான முதல் புத்தகம் காமிக்ஸ். எங்கள் வீட்டில் ஒரு நுலகமிருந்தது. அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. வீட்டில் அனைவருமே படித்தவர்கள் என்பதால் புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே இருந்தது. அந்த நுலகத்தில் இருந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை பனிரெண்டு வயதில் வாசிக்க ஆரம்பித்த போது தான் புத்தகம் என்ற விசித்திர உலகினை அறிய துவங்கினேன்.   தேடித்தேடி காமிக்ஸ் புத்தங்களை படித்தேன். அதுவும்  சிவகாசி அருகில் இருந்த காரணத்தால் காமிக்ஸ் பிரிண்ட் ஆகும் இடத்திலே போய் வாங்கி படிப்பேன். பல நேரங்களில் அச்சிடப்பட்ட பாரங்களிலே காமிக்ஸ் படித்திருக்கிறேன்.

ரிப்கெர்பியும் ஜானி நீரோவும் இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என் உலகின் பிரிக்க முடியாத நண்பர்களானார்கள். அம்மா வழி தாத்தா தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நிறைய வாசிப்பவர். அவர் ஒரு கடமையை போல என்னையும் சகோதரிகளையும் சிறுசிறு புத்தகங்களை சப்தமாக வாசிக்க சொல்வார். அது போல ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து அதன் கதை சுருக்கத்தை சொல்ல செய்வார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த எனக்கு புத்தகங்கள் ஒரு கற்பனையான உலகை திறந்துவிட்டன.நான் படித்த காமிக்ஸ் புத்தகங்களில் உள்ள வாசகங்கள் யாவையும் வெள்ளை பேப்பர் வைத்து ஒட்டி அதில் பென்சிலால் நானே ஒரு கதை எழுதுவேன். ஒரே புத்தகத்தை பல தடவைகள் படிப்பேன். ஒரு நாள் இரும்புக்கை மாயாவி போல எப்படி மறைந்து போவது என்று மின்சாரத்தில் கையை வைத்து துக்கி எறிந்த சம்பவம் வரை நடந்திருக்கிறது. புத்தகம் ஒரு ஆக்டோபசை போல தன் அரூபமான கரங்களால் எப்போதுமே என்னை   இறுக்கி பிடித்து கொண்டுதானிருக்கின்றது. 

புத்தங்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

நினைவுகளை பதிந்து வைப்பதற்கு இதுவரை உலகில் கண்டுபிடிக்கபட்டவற்றில் மிக எளிய வழி புத்தங்கள் மட்டுமே. ஒவ்வொரு புத்தகமும் ஏதோவொரு நினைவின் சாட்சியே. கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு புத்தங்களை மட்டுமே துணையாக இருக்கின்றன. திருக்குறள் எழுதப்பட்டு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது. அந்த காலகட்டத்தை சேர்ந்த வேறு ஒரு பொருள் கூட இன்றில்லை. புத்தகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தமிழ்வாழ்வியலின் சாட்சிகளாக தான் சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் உள்ளன. புதைமேடுகளாக கூட காண முடியாத நம் மூதாதையர்களின் வாழ்க்கையும் அவர்களது சுக துக்கங்களும் யாரோ ஒரு எழுத்தாளரால் புத்தகங்களாக மட்டுமே பதிவு செய்யபடுகின்றன. மனிதனுக்கு கற்பனை செய்யும் சக்தி இருக்கும் வரை புத்தங்கள் இருக்கும்.

இந்நாள் வரை உலகில் கோடானகோடி புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் மனிதர்களை புத்தகங்களை தேடிப்தேடிப்படிக்கிறார்கள் என்றால் நம் வாழ்வனுபவங்களுக்கு வெளியில் உள்ள உலகை அறிந்து கொள்வதற்கும் , என்றைக்குமான மனித ஒழுக்கம், அறம். நன்மை தீமைபோன்றவற்றை அறிந்து கொள்ளவும் சகமனிதர்களின் வாழ்வின் மீது அக்கறை கொள்ளவும் தான் புத்தங்கள் வாசிக்க படுகின்றன.

அண்டை வீட்டில் உள்ள மனிதனுக்கு அடி விழுந்தாலும் கலங்காத நாம் புத்தகத்தில் நமக்கு பிடித்த ஒரு கதாபாத்திரத்தின் துயரத்திற்காக கண்ணீர் விடுகிறோம். அது தான் புத்தகத்தின் வலிமை.

உடற்பயிற்சிகள் எப்படி உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதோ அது போல மனதிற்கான பயிற்சி தான் புத்தகம் படிப்பது.

ஜன்னலை திறந்துவிட்டவுடன் அறைக்குள் காற்று நிரம்புவது போல புத்தகத்தை பிரித்தவுடன் மனது விகாசம் கொள்ள துவங்கிவிடுகிறது. கண்ணாடி நம் முகத்தை மட்டுமே காட்டுகிறது. புத்தங்கள் தான் நம் அகத்தை காட்டுகின்றன. நீங்கள் என்ன புத்தகம் படிக்கின்றீர்கள் என்பதை வைத்து நீங்கள் யார் என்ன வகையான இயல்பு கொண்டவர் என்று சொல்லிவிட முடியும்.

குழந்தைகளுக்கு புத்தகத்தை எப்படி அறிமுகம் செய்வது ? 

இன்றைய சூழலில் குழந்தைகள் படிக்க வேண்டுமானால் முதலில் பெரியவர்கள் படிக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வேண்டும். அவர்களால் மட்டுமே குழந்தையை வாசிக்க செய்ய இயலும். சாக்லெட் வாங்கி கொடுப்பதற்கு தினமும் ஐந்து ரூபாய் செலவு செய்யும் பெற்றோர்கள் மாதத்திற்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி தர ஆயிரம் முறை யோசிக்கிறார்கள். எந்த குழந்தையும் நான் படிக்க மாட்டேன் என்று சொல்வதில்லை. நாம் அதற்கு அறிமுகம் செய்ய தவறுகிறோம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விதமான ருசியிருக்கும். எனவே அதற்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக வேறுபட்ட சில புத்தகங்களை வாங்கி தருவதன் வழியே குழந்தையின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் மாதம் தோறும் பாக்கெட் மணியோடு புத்தகம் வாங்க என்று ஐந்து ருபாய் தருவார்கள். அதை சேமித்து வைத்து வருட இறுதியில் ஐம்பது ருபாய்க்கு புத்தகம் வாங்குவேன். இது போன்ற பழக்கம் குழந்தையை தனக்கு விருப்பமான புத்தகத்தை தேடி வாங்க செய்யும்.

ஐஸ்கிரீம் பார்லர். பிட்சா கார்னர், சினிமா தியேட்டருக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் நாம் காட்டும் அக்கறை புத்தக கடைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் ஏற்படுவதில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது. மாதம் ஒரு முறையாவது குழந்தைகளை புத்தககடைக்கு அழைத்து போக வேண்டும். அது போலவே கதைகளை வாசித்து காட்டும் பழக்கம் நமக்கு வர வேண்டும். பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தருவதோடு கட்டயாம் ஒரு புத்தகமும் வாங்கி தர வேண்டும். இவை யாவும் விட பாட புத்தங்களை மட்டும் படித்தால் போதாது என்ற மனப்பாங்கு பெற்றோர்க்கு இருக்க வேண்டும்.

 வாசிப்பு பழக்கம் இப்போது தகவல் தெரிந்து கொள்வதற்காகவும் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுகிறதே அது ஏன் ? 

அது உண்மையல்ல. அப்படி தோற்றம் தரும்படியாக உருவாக்கபட்டிருக்கிறது. எல்லா வணிகங்களை போலவே புத்தகமும் இன்று ஒரு வணிகப்பொருள். சந்தையின் பகட்டும் கவர்ச்சியும் புத்தகங்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு கம்ப்யூட்டர் வந்தபிறகு உலகில் உள்ள யாவுமே இணையத்தில் கிடைக்கும் என்ற பொய்யான கற்பிதமும் உருவாக்கபட்டிருக்கிறது. உண்மையில் இது எதுவும் நிஜமானதில்லை.

எல்லா புத்தகங்களுக்கும் இது பொருந்தாது. திருக்குறளை ஒருவன் ஆழ்ந்து வாசித்து உள்வாங்கி கொண்டால் அதை விட சிறந்த மேனேஜ்மெண்ட் புத்தகம் கிடையாது. அதே புத்தகத்தை தத்துவம் அறிந்து கொள்ளவும் , காதலை அறிந்து கொள்ளவும், ஏன் அரசாங்கத்தை எப்படி நிர்வகிப்பது என்று அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். புத்தகம் படிக்கும் நீங்கள் யார். எந்த நோக்கில் எந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் உருவாகும்.

இன்றைய பரபர