உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது.
அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும் விலக்கத்திலிருந்தே நவீன நாவல்கள் துவங்குகின்றன. சென்ற நுற்றாணடு வரை பேரின்பம் என்று மட்டுமே அடையாளப்படுத்த பட்ட பாலுறவு இந்த நுற்றாண்டில் அகப்பிரச்சனை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
தமிழ் உரைநடையில் பாலின்பம் குறித்த எழுத்து எப்போதுமே கலாச்சார தணிக்கையொன்றிற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இந்த தணிக்கையை எழுத்தாளனே மேற்கொண்டு விடுகிறான். அல்லது மதம், அறநெறி, சமூகக் கட்டுபாடு ஏற்படுத்தும் தடைகள் காரணமான பயம் அவனை நிர்பந்தபடுத்துகிறது.
தமிழில் நுற்றுக்கணக்கான குடும்ப நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் கூட கணவனும் மனைவியும் தங்களுக்குள் உடலின்பம் கொள்வது இயல்பாக எழுதப்படவில்லை. ஆனால் சங்கக் கவிதைகள் காமத்தைப் பாடியிருக்கின்றன. முற்றிய காமத்தின் காரணமாக உடல் கொள்ளும் மாற்றங்களும் மனப்போக்கில் ஏற்படும் கொந்தளிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.
ஆண்டாள் மிக இயல்பாக தன் காம உணர்வுகளை பாடலில் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளிவீதியார் கையில்லாதவன் முன்னால் வெயிலில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி போவதை போன்றதே காமம் என்று அடையாளம் காட்டுகிறார்.
காமப்பிரதி என்று தனித்து அடையாளமிட்டு வாசிக்கபடுவதற்கான தனிப்பிரதிகள் எதுவும் தமிழில் இல்லை. மாறாக காமம் குறித்து இலக்கிய தளத்தில் நடைபெற்ற பெரும்பான்மை சொல்லாடல்கள் ஒழுக்க கட்டுபாடுகளையும் அதை மீறும் போதும் அடையும் தண்டனையையுமே வலியுறுத்துகின்றன..
ஒரு நுற்றாண்டின் முன்பாக ஐரோப்பிய இலக்கியம் கடந்து சென்று விட்ட பாலுணர்ச்சிகளின் இயல்பான பதிவுகள் இன்றும் தமிழில் மிகுந்த சர்ச்சைக்கும், மிரட்டலுக்குமே உள்ளாகி வருகின்றன.
நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன.
நாவல் இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கி கொள்வதற்காக பீறிடும் காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம்பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பது பதிவு செய்யப்படுகிறது.
நாவலிலின் தனித்துவம் அதன் நுட்பமான கதை சொல்லும் முறை. மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு. சந்திரன் அவன் மனைவி ஷோபா, சந்திரனோடு நட்பு கொள்ளும் ஜீலியா என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் விவரிக்கபடுகிறது. பெரும்பாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். அதில் ஏற்படும் சிறு சிறு சந்தோஷங்கள் மற்றும் கசப்புணர்வுகள்
|