என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

படித்தவை
 
எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடர்ந்த வாசிப்பில் தான் வாசிக்கும் முக்கியப் புத்தகங்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறார்
 

The Women in Cages - Vilas Sarang

இந்தியாவின் சமகால இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதைகளில் தமிழே மிக முக்கிய இடத்தில் உள்ளது. இதை எனது வாசிப்பு அனுபவத்தில் நிறைய முறை உணர்ந்திருக்கிறேன். தமிழின் நவீன சிறுகதைகளைப் போல மாறுபட்ட கதைசொல்லல் மற்றும் கதைகளன்கள் கொண்ட சிறுகதைகள் வேறு மொழிகளில் வெளியாவதில்லை. ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தியச் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல கதைகள் தமிழில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டுவிட்டவை.

 

இன்று சிறுகதை மராத்தியிலும், உருதுவிலுமே முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவை ஆங்கிலத்தில் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கின்றன. அவற்றை வாசிக்கும் போது புதிய கதை எழுத்திற்கான வெளியை அறிந்து கொள்ள முடிகிறது

எனக்கு விருப்பமான மராத்திய சிறுகதையாசிரியர் விலா சரங். ஆங்கிலப் பேராசிரியரான இவர் போர்ஹே காப்கா என்று உலக இலக்கியங்களின் முக்கிய படைப்பாளிகளை அறிந்தவர். கற்றுத் தருபவர். இவரது கதையுலகம் புனைவின் புதிய சாத்தியங்களை முன்வைக்கின்றன.

இவரது கதைகள் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. விலா சரங்கின் கதைகளின் அடிநாதமாக நகர வாழ்வு சார்ந்த அபத்தங்களும் முரண்களுமே உள்ளது. சில வருடங்களுக்கு முன்பாக இவரது சிறுகதை ஒன்றை என்கவுண்டர் இதழில் வாசிக்க நேர்ந்தது. அக்கதையில் தீவு ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறான் ஒருவன். அந்தத் தீவில் பெண்களே கிடையாது. அதைப்பற்றி கேட்கும் போது அவனது அடையாள அட்டையை காட்டினால் அவனுக்குத் தேவையான பெண்ணைத் தருவார்கள் என்று ஒருவன் சொல்கிறான்.

தனக்கு உரிய பெண்ணைப் பெற்றுக் கொள்ளச் செல்பவனுக்கு அங்கே இரண்டு விதமான பெண் உடல்கள் இருப்பது வியப்பு அளிக்கிறது. ஒன்று இடுப்பிற்குள் கீழ் மட்டும் உள்ள பெண். மற்றது இடுப்பிற்கு மேல் மட்டும் உள்ள பெண் உடல்.

இடுப்பிற்குள் கீழ் உள்ள பெண் உடலைப் பெற்றுக் கொண்டால் தேவையான அளவு பாலுறவு கொள்ளலாம். உங்களை மகிழ்விக்கும் ஆனால் அது ஒரு வார்த்தை கூட பேசாது. என்கிறான் நிர்வாகி. அதைப் பெற்றுக் கொண்டு வந்து இன்பத்தில் முழ்கிக்கிடக்கிறான். ஆனால் வேலை நெருக்கடி. சிக்கல் அதிகமாகவே தன்னோடு ஆறுதலாகப் பேசக்கூடிய பெண் வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னிடம் உள்ள பெண்ணை மாற்றிக் கொள்ள செல்கிறான்.

இடுப்பிற்கு மேல் உள்ள பெண் கிடைக்கிறாள். இவள் அன்பாகப் பேசுகிறாள். ஆறுதல் தருகிறாள். ஆனால் அவளோடு பாலுறவு கொள்ள முடியாது. இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகிறது. ஏன் இந்த பேதம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டும் சேர்ந்த உடலுக்காக ஏங்கத் துவங்கி திருட முயற்சிக்கிறான். துரத்தப்படவே அங்கிருந்து தப்பி வெளியேறி வருகிறான். நேர்காணல் போலவே கதை அமைந்திருக்கிறது.

இந்திய சமூகம் பெண்களை இப்படி இரண்டு துண்டுகளாகவே வெட்டி வைத்து வைத்துள்ளது என்கிறார் விலாசரங். நவீன இந்திய சிறுகதைகளில் மிக முக்கியமானது இக்கதை. அதிலிருந்து அவரது கதைகளை தேடி வாசிக்க துவங்கினேன். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது சிறுகதை தொகுப்பு தி வுமன் இன் கேஜஸ்.

இத்தொகுப்பில் உள்ள கதைகளும் பகடி, மிகைபுனைவு மற்றும் அபத்த வகையைச் சேர்ந்தவை. குறிப்பாக இந்த தொகுப்பில் உள்ள இரண்டு ராணுவ உயரதிகாரிகள் என்ற கதையில் கர்னல் குருமா என்பவர் ஜனாதிபதி புலாவ் என்பவரை துக்கி எறிந்து அரசியல் சதி செய்கிறார் என்ற பகடி வகை கதை உள்ளது. நவீன அரசியல் விமர்சனமும் அங்கதமும் நிரம்பிய கதையிது. அவ்வகையில் நவீன சிறுகதை உலகில் மிக முக்கியமான சிறுகதை தொகுப்பு

 

Paroles - Poems of Jacques Prevert

பிரெஞ்சு நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற கவிஞர் ழாக் பிராவர். இவரது சொற்கள் என்ற கவிதைத் தொகுப்பு தமிழில் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்து வெளியாகிஉள்ளது.

பிராவரின் கவிதைகள் சர்ரியலிசத் தன்மை கொண்டவை. இவரது கவிதை ஒன்றில் இரண்டு நத்தைகள் குடிவெறியோடு துக்கம் கேட்கச் செல்கின்றன. வரைந்த கிளைகளுக்குள் பறவை வந்து சேர்கிறது, பிராவர் தினசரி வாழ்விலிருந்து தனது கவிதைக்கான கூறுகளை உருவாக்குகிறார். அதிகம் உருவகங்கள், படிமங்களை முன்வைப்பதில்லை. மாறாக எளிமையான, நேரடி மொழியில் அங்கதத் தொனியோடு அவரது கவிதைகள் வெளிப்படுகின்றன.

 

கவிதையின் வழியே உலகோடு நான் பேசுகிறேன். ஒரு வகையில் எனது கவிதைகள் எனது எதிரொலி போல என்று சொல்லும் பிராவர் பதினைந்து வயதோடு படிப்பை முடித்துவிட்டு சிறுசிறு வேலைகள் செய்யத்துவங்கி பின்பு ராணுவத்தில் சிலகாலம் பணியாற்றியுள்ளார். சர்ரியலிசம் உருவான சூழலில் ஆந்த்ரே பிரடனின் நண்பராக அறிமுகமாகி அவரது கவித்துவ கோட்பாடுகளால் ஈர்க்கபட்டு கவிதைகள் எழுதத் துவங்கியுள்ளார்.

1945ல் இவரது பரோல் என்ற முதல்கவிதை தொகுதி வெளிவந்த உடனே அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டது. பத்து வருடத்திற்குள் இந்தக் கவிதை தொகுதி ஒரு லட்சம் விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

நாடகம், சினிமா என்று விரிந்த தளங்களில் இயங்கிய பிராவர் நவீன பிரெஞ்சு கவிதைகளில் தனித்து அறியப்படுகிறார். இது அவரது முக்கிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

 
 

Surely You're Joking, Mr. Feynman! - Richard P. Feynman

ரிச்சர்ட் பெயின்மென் எனக்கு விரும்பமான இயற்பியலாளர். நோபல் பரிசு பெற்றவர். இவரது இயற்பியல் சொற்பொழிவுகள் மிகுந்த பிரசித்தமானவை. விஞ்ஞானிகள் என்றாலே அதிபுத்திசாலிகள் என்ற பொதுப்படிமத்தை உடைத்து தனது சொந்த வாழ்வைப் பகடி செய்தும் பல்வேறு தளங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். அணுஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல முக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர். கலகக்காரர்.

 
பெயின்மெனின் இந்தப் புத்தகம் அவரது சிறுவயதிலிருந்து விஞ்ஞானியானது வரை நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு. பெயின்மென் இசை கற்றுக் கொண்டது. பிக்பாக்கெட் அடிக்கப் பழகியது. கள்ளதமான பூட்டை திறக்கப் பழகியது, பெயிண்டிங் கற்றுக்கொண்டது. பெண்களோடு பழகுவதற்கு ஏற்பாடு செய்தது. ரௌடியை அடித்துப் பழிவாங்கியது என்று படித்து சிரிக்கும்படியான அருமையான கட்டுரைகள். இயற்பியல் அறிஞர்கள் என்றாலே இறுக்கமான மனிதர்கள் என்ற மனநிலையை முற்றிலும் துக்கி எறிந்துவிடும் அற்புதமான எழுத்து பெயின்மெனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.
 
Draupadi by Pratibha Ray
 

மகாபாரத்தின் மையமாக இருப்பவள் திரௌபதி. அவளுக்கு நேர்ந்த அவமானம் தான் குருசேத்திர யுத்தம் வரை காரணமாக விரிகிறது. திரௌபதியின் பார்வையில் மகாபாரதக் கதையை விவரிக்கும் இந்த ஒரிய நாவல் பிரதிபா ராயால் எழுதப்பட்டுள்ளது. திரௌபதியின் பெயர் கிருஷ்ணை. அவள் யாகத்தில் தோன்றியதாக ஐதீகம் என்பதால் யக்ஞசேனி என்ற பெயரும் உண்டு.

 

இந்த நாவல் திரௌபதி கிருஷ்ணருக்கு எழுதும் கடிதம் போல அமைந்திருக்கிறது. நாவலின் வழியே திரௌபதைக்கும் கிருஷ்ணனுக்குமான அன்பும், ஐந்து பேரை மணப்பது குறித்து திரௌபதி அடைந்த குழப்பங்களும், சபையில் அவமானப்படுத்தபட்ட போது அவள் அடைந்த மனத்துயரும் நன்றாக வெளிப்பட்டுள்ளது. நாவலில் குருசேத்திர யுத்தம் விவரிக்கபடவில்லை. சில பக்கங்களில் அதைப் பிரதிபா கடந்து போய்விடுகிறார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடையாளம் அழிக்கபட்ட ஒரு பெண்ணின் கதையை இன்னொரு பெண் எழுத்தாளரே எழுதியுள்ளது இந்த நாவலின் சிறப்பு. ஆனால் நாவல் என்ற அளவில் இது முழுமையானதாகயில்லை. திரௌபதியைப் பற்றிய அவதானிப்புகள் யாவும் மிக பழமையானதாகவும் முன் அறிந்ததாகவும் இருக்கின்றன.
பிரதிபா ராயின் பார்வைகளும் மரபான தளங்களை விட்டு வெளியே வரவில்லை. நாவல் நேர்கோட்டில் செல்வதால் படிப்பதில் அலுப்பு ஏற்படவே செய்கிறது.

மகாபாரதம் பற்றிய பைரப்பாவின் பர்வம் மற்றும் எம்.டி.வாசுதேவன்நாயரின் இரண்டாம் இடம் நாவலோடு ஒப்பிட்டால் இது மிக எளிமையானது என்றே சொல்ல முடியும்.
நான் உப பாண்டவத்தில் திரௌபதியைப் பற்றி இன்னும் அதிகமாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கிறேன் என்பதால் என்வரையில் இந்த நாவல் ஆர்வம் குறைந்த ஒன்றாகவே இருந்தது. பெண்ணிய நோக்கில் மகாபாரத்தினை அணுகுகிறது என்பதால் ஒரு முறை இதை வாசிக்கலாம்.

 
விடியலை நோக்கி  - பேபி ஹால்தார். தமிழில் எம்.எஸ் 

புகழ்பெற்ற அர்ஜென்டின எழுத்தாளரான போர்ஹேயின் வீட்டில் பணிப்பெண்ணாக முப்பது ஆண்டுகளாக  பணியாற்றிய எபிபீனியா என்ற பெண்
"El señor Borges" என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். எழுத்தாளரின் வீட்டில் வேலை செய்த பெண் தானும் ஒரு எழுத்தாளரானது வாசக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை நினைவுபடுத்துவது போல இந்தியாவில் பேபி ஹால்தாரின் வருகை நிகழ்ந்துள்ளது 
 

பேபி ஹால்தாரை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கும் வரை அப்படியொரு எழுத்தாளர் இருப்பதையே அறிந்திருக்கவில்லை. புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரான பிரேம்சந்தின் பேரனும் பேராசிரியருமான பிரபோத் குமார் தன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்த பேபி ஹால்தருக்கு புத்தகம் படிப்பதில் இருந்த விருப்பத்தை கண்டு அவரை படிக்க செய்து அவரது வாழ்க்கையை ஒரு கதையாக எழுதும்படியாக ஊக்கப்படுத்தியிருக்கிறார். 

பேபி ஹால்தரும் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் முயன்று தன்னுடைய வாழ்வை ஒரு நீள்கதை போல எழுதியிருக்கிறார். வங்காளத்தில் தொடராக வந்து பின்பு ஆலோ ஆந்தாரி என்ற பெயரில் தனி நுலானதின் தமிழாக்கமே விடியலை நோக்கி. இதை எம்.எஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார். 

பேபி ஹால்தர் தனது சொந்த வாழ்க்கையை எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி விவரிக்கிறார். குறிப்பாக அவரது பால்யநாட்களும் திருமணாகி கணவன் வீட்டு செல்லும் போது தனது சகோதரி ஒருத்தியை அழைத்து செல்வதும் புகுந்த வீட்டில் கணவனோடு ஏற்படும் சச்சரவும் , குழந்தைகளின் பிறப்பும். வேலை தேடி அலைந்த நாட்களும் துயரத்துடன் விவரிக்கபடுகின்றன. 

இவை எல்லாம் ஒரு பெண்ணுக்கு நடந்தவை என்று நினைக்கையில் மனதில் பெரும்பாரம் ஏறிக் கொள்கிறது. அந்த வகையில் பேபிஹால்தரின் எழுத்து தான் சொல்லவந்ததை நேரடியாகவும் எளிமையாகவும் வெற்றிபெற்றுள்ளது என்றே கூறுவேன். 

சென்னை சங்கமம் நிகழ்வின் ஒருபகுதியாக நான் கலந்து கொண்ட நிகழ்வில் தான் பேபி ஹால்தாரின் நுல் வெளியானது. மேடையில் பேசும்போது ஹால்தார் தனது நாவல் தற்போது ஆங்கிலம் சைனீஸ் பிரெஞ்சு உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டு அந்த நாடுகளுக்கு தான் பயணம் செய்ததாக குறிப்பிட்டார். அத்தோடு தன்னை ஒரு எழுத்தாளராக்கிய பிரேம்சந்தின் குடும்பத்தினரை பற்றி நன்றியோடு விவரித்தார். 

எழுத்தின் அறிமுகம் ஹால்தாருக்கு இன்னொரு உலகின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நேற்றுவரை வீடு. குழந்தை பிரச்சனைகள் என்று உழன்று கொண்டிருந்த ஹால்தார் தற்போது எழுத்து, சமூகம் என்று பரந்த பார்வையும், துணிச்சலும், படைப்பின் வசீகரமும் கொண்டவராக காணப்படுகிறார் 

இது ஏதோ ரட்சகரின் அருளால் ஏற்ப்ட்ட அதிசயமல்ல. எழுத்து யாவருக்கும் சாத்தியமானதே. வாசிப்பையும் எழுத்தையும் விரும்பி தொடர இயலுமாயின் அது தரும் சுதந்திரம் எல்லையற்றது என்பதற்கு பேபி ஹால்தார் ஒரு முன்உதாரணம்.

 

உனையே மயல் கொண்டு.   நாவல் - டாக்டர்  என். எஸ். நடேசன் 

டாக்டர் நடேசன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது முந்தைய நாவலான வண்ணாத்திகுளம் தீவிரமான வாசிப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளானது. அவரது சமீபத்திய நாவலை அதன் கைப்பிரதியிலே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது மித்ர வெளியீடு சார்பாக வெளிவந்துள்ள இந்த நாவலுக்கு  நான் இந்த முன்னுரையை எழுதியிருக்கிறேன்.  

 

உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது.  எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது. 

அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும் விலக்கத்திலிருந்தே  நவீன நாவல்கள் துவங்குகின்றன. சென்ற நுற்றாணடு வரை பேரின்பம் என்று  மட்டுமே அடையாளப்படுத்த பட்ட பாலுறவு  இந்த நுற்றாண்டில் அகப்பிரச்சனை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. 

தமிழ் உரைநடையில் பாலின்பம் குறித்த எழுத்து எப்போதுமே கலாச்சார தணிக்கையொன்றிற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இந்த தணிக்கையை எழுத்தாளனே மேற்கொண்டு விடுகிறான். அல்லது மதம், அறநெறி, சமூகக் கட்டுபாடு ஏற்படுத்தும் தடைகள் காரணமான  பயம் அவனை நிர்பந்தபடுத்துகிறது. 

தமிழில் நுற்றுக்கணக்கான குடும்ப நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் கூட கணவனும் மனைவியும் தங்களுக்குள் உடலின்பம் கொள்வது இயல்பாக எழுதப்படவில்லை. ஆனால் சங்கக் கவிதைகள் காமத்தைப் பாடியிருக்கின்றன. முற்றிய காமத்தின் காரணமாக உடல் கொள்ளும் மாற்றங்களும் மனப்போக்கில் ஏற்படும் கொந்தளிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.  

ஆண்டாள் மிக இயல்பாக தன் காம உணர்வுகளை பாடலில் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளிவீதியார் கையில்லாதவன் முன்னால் வெயிலில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி போவதை போன்றதே காமம் என்று அடையாளம் காட்டுகிறார். 

காமப்பிரதி என்று தனித்து அடையாளமிட்டு வாசிக்கபடுவதற்கான தனிப்பிரதிகள் எதுவும் தமிழில் இல்லை. மாறாக காமம் குறித்து இலக்கிய தளத்தில்  நடைபெற்ற பெரும்பான்மை சொல்லாடல்கள் ஒழுக்க கட்டுபாடுகளையும் அதை மீறும் போதும் அடையும் தண்டனையையுமே வலியுறுத்துகின்றன.. 

ஒரு நுற்றாண்டின் முன்பாக ஐரோப்பிய இலக்கியம் கடந்து சென்று விட்ட பாலுணர்ச்சிகளின் இயல்பான பதிவுகள் இன்றும் தமிழில் மிகுந்த சர்ச்சைக்கும், மிரட்டலுக்குமே உள்ளாகி வருகின்றன. 

நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன. 

நாவல் இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கி கொள்வதற்காக பீறிடும் காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம்பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பது பதிவு செய்யப்படுகிறது. 

நாவலிலின் தனித்துவம் அதன் நுட்பமான கதை சொல்லும் முறை. மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.  சந்திரன் அவன் மனைவி ஷோபா, சந்திரனோடு நட்பு கொள்ளும் ஜீலியா என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் விவரிக்கபடுகிறது. பெரும்பாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். அதில் ஏற்படும் சிறு சிறு சந்தோஷங்கள் மற்றும் கசப்புணர்வுகள்