மகிழ்நிலா
ஒன்பதாம் வகுப்பு,
கூத்தூர்,திருச்சி
***

குழந்தைகள் கரடி பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒரு எண்ணம் என்னைத் திகைக்க வைக்கும், ஒருவேளை உயிரற்ற பொருள்களெல்லாம்
பேசிக்கொண்டிருக்கின்றனவா; இல்லை அவை பேசுவது குழந்தைகளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதா? என்ற கேள்விகள் மனதில் வந்து செல்லும். அத்தகைய கேள்விகளுக்கான விடையாக அக்கடா அமைந்திருந்தது.
என்னை மீண்டும் ஒரு சிறுகுழந்தை போலச் சிந்திக்க வைத்த அக்கடாவை என்னால் மறக்க முடியாது.
அக்கடா தன்னுடைய பெயரைத் தீர்மானம் செய்யும் கதை மிகவும் நகைப்பூட்டலாக இருப்பினும் யாருமே அதன் பெயரைக் கண்டுகொள்ளாதது வருந்தவைத்தது. பென்சில் அண்ணனின் நிலையும் அந்த உணர்வையே ஏற்படுத்தியது.
குறுந்தாடி குண்டூசி என்ற பெயர் கேட்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தாலும், அக்கடாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதால் அக்கடா என்றே அழைக்கலாம் என்று உத்தேசிக்கிறேன்.
அலுவலக மரங்களின் நிலை பரிதாபத்திற்குரியது.உண்மைதான் …. மனிதர்களுக்கு மரங்களின் மீது உள்ள மரியாதை குறைந்து கொண்டே தான் வருகிறது.
எனக்குக் கூடச் சிலசமயம் மரங்கள் பேசுவது கேட்பதுபோல் இருக்கும். ஆனால் ஏன் மற்ற மனிதர்களுக்கும் அது கேட்கவில்லை என்பது இன்றளவும் எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அக்கடாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது தனது நண்பர்களைத் தேடிச் செல்லும் அதன் நட்புணர்ச்சிதான். அதே நட்புணர்வை பித்தளைத்தலையன் எனப்படும் காப்பர்ஹெட்டிடமும் கவனிக்க முடிகிறது.
ஒரு நண்பன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாகக் கோல்டுஹெட் திகழ்கிறான். அதே சமயம் கெபி ஒரு நல்ல நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பறைசாற்றுகிறது.ஆமைகளும் நண்டுகளும் மனிதர்கள் இந்தப் பூமியை மேலும் கவனமுடன் கையாள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. எலியம்மா என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதைவிட ஆச்சரியம் எதிர்காலத்தின் ரோபோ பூஜைகளும் பிளாஸ்டிக் செடிகளும் தான்.
பசி என்ற சொல்லே இல்லை என்றால் மனிதர்களும் சாப்பிட மாட்டார்களா என்ற பூரிப்பை உண்டாக்கியது.வருணின் பொறாமை வருத்தத்திற்குரியது. இக்காலத் தலைமுறை இப்படியிருந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தை மனதில் உண்டாக்குகிறது. யானையின் நிலை கண்டு நான் வருந்தினேன். அதுவும் சிறுகுழந்தை போல் நடந்து கொள்வதைக் கண்டு அக்கடாவுடன் சேர்ந்து நானும் வியந்தேன்.
“காரைத் தின்னும் கார்கள்” கதை சிறிது பயமூட்டுவதாகவும் சிறிது நகைப்பூட்டுவதாகவும் இருந்தாலும் இந்நாளில் பல மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணத்தால் மேலும் பழியையே நாம் சம்பாதிக்கிறோம் என்ற நிதர்சனத்தை ஏற்க சிலர் மறுக்கிறார்கள்.இதைக் குழந்தைகளிடமும் விதைக்க நினைக்கிறார்கள்.
இன்று குட்டி ஆமையைப் போலவே தான் மனித குழந்தைகளும் இருக்கிறார்கள்.வெளியுலகம் என்னும் நீர் சுழற்சிகளும் சுறாமீன்களும் நிறைந்த கடலினைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு அக்கடா போல ஒரு வழிகாட்டியை அளித்தமைக்குத் தங்களுக்கு மிக்கநன்றி .
***