நிலம் கேட்டது கடல் சொன்னது – வாசிப்பனுபவம்
குமரன்.

ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல் இருந்தது அச்சம்பவம். என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே பலருடைய உயிரும் உடலில் இருந்து பிரிந்து விட்டது.
கரும்புகை திரண்டு வானத்துக்கும். பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே ஒட்டுமொத்த ஹிரோஷிமா நகரும் தரைமட்டமானது. அணுவீச்சில் உடல் பாதிப்புக் கொண்டு உருகத் துவங்கியது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு மூன்று லட்சம் டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு ஐந்தாயிரம் டிகிரி செல்சியஸ் என்கிறார்கள்.
மனிதர்கள் தீப்பற்றி எரியும் உடலுடன் கதறி அலறியபடியே ஓடினார்கள். என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாகமும் வலியுமாக ஓடியவர்கள் “தண்ணீர்! தண்ணீர்!” எனக் கதறினார்கள். தீக்காயம் ஏற்படுத்திய வேதனையைத் தாங்கமுடியாமல் பலர் நதியில் குதித்தனர். ஆனால். அந்த நதியோ அணுகுண்டு வெப்பத்தால் வெந்நீராகக் கொதித்துக் கொண்டிருந்தது.
•••
மேலே நீங்கள் படித்தவை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசியதால் ஒன்றரை லட்சம் பேர் அதில் இருந்திருப்பார்கள் என நாம் கேள்விப்பட்ட சம்பவத்தின் உணர்வு நிலையே, இன்னும் உணர புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள்.
நன்றி தெரிவித்தலை தங்களின் வாழ்க்கை முறையாகவே கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பிரதான உணவு மீனும், வெறும் சாதமும்.
சாப்பிடும் போது ஒரு பருக்கையைக் கூட அவர்கள் வீணடிப்பதில்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை.சுறுசுறுப்புக்கு உதாரணமாக இவர்களைச் சொல்வார்கள்.
இன்று இவர்கள் அமைதியின் வடிவமாக இருந்தாலும் வரலாற்றில் வன்முறையின் உச்சபட்ச அடையாளமாக இருந்துள்ளார்கள்.இவர்கள் வேறு யாரும் அல்ல ஜப்பானியர்கள் தான். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது விசா இல்லாமலே ஜப்பான் சென்று வந்த அனுபவம் தருகிறது.
மொத்தம் இரண்டே தலைப்புகள் தான் ஒன்று ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவுக்குச் சென்று வந்த அனுபவம் பற்றியது மற்றொன்று அமெரிக்காவில் தோரோவின் வால்டன் குளம் சென்று வந்தது.
இரண்டு தலைப்புகளும் ஒன்றுக்கொன்று எதிரானது. ஒன்று அணுகுண்டு வீச்சு, மற்றொன்று அமைதியை (இனிமையான வாழ்க்கை) குறிக்கிறது.
மேலும் ஜப்பானியர்களின் பண்பாடு, உணவு முறை, பழக்க வழக்கங்கள், ரயில் நிலையங்கள் பற்றிய விவரிப்பு, சாமுராய்கள் பற்றிய விளக்கம், ஜப்பானின் கொடூர முகம், ஆயிரம் காகித கொக்குகள் செய்யும் சடகோவின் கதை எனச் சலிப்பில்லாமல் முதல் தலைப்பு நகர்கிறது.
எஸ்ரா அவர்களின் எழுத்தின் பலமே நாம் எவ்வாறு அதில் மூழ்கினோம் எவ்வாறு கரைந்து போனோம் என்பதே தெரியாமல் புது உலகத்தில் நுழைந்து விட்டிருப்போம்.
இரண்டாவது தலைப்பு தோரோவின் வால்டன் குளம் பற்றியது. புதுமையானது ஆனால் வாழ்க்கைக்கு அவசியமானது.
அமெரிக்காவில் உள்ள வால்டன் குளம் பற்றித் தோரோ எழுதிய பிறகே அந்தக் குளம் உலக அளவில் பிரபலமாகிறது.
அந்தக் குளம் உள்ள வனத்தில் தன்னந்தனியாக இரண்டு வருடங்கள் இயற்கையுடன் இணைந்து எந்தவித வசதிகளும் இன்றி அங்கேயே தங்கியிருந்த வாழ்க்கை பற்றியது. தோரோதான் காந்தியின் குரு என்பதை அறிந்து கொண்டேன்.
வால்டன் குளம் பற்றிய நினைவுகள் மனதில் ததும்பி கொண்டே இருக்கிறது. இயற்கையைக் கொஞ்மேனும் நேசிப்பவன் என்பதால் வால்டன் குளத்தின் நினைவுகள் மனதை விட்டு அகலவே மறுக்கிறது.
இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்–
“தூய்மையான காற்று, இனிமையான உணவு, சந்தோஷமான மனநிலை இந்த மூன்றும் போதும் இனிமையாக வாழ்வதற்கு“-தோரோ
“இயற்கையோடு இணைந்து வாழ்பவனுக்கு வாழ்வில் மீது ஒருபோதும் சலிப்பு ஏற்படாது.“
“பிரம்மாண்டமான பொருட்கள் என்றால் வியப்பதும் சிறியது என்றால் இகழ்வதும் பொதுபுத்தியின் இயல்பு. இயற்கையில் பெரும்மலையும் சிறுபுல்லும் ஒன்றே, இரண்டிற்கும் பேதம் இல்லை காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான்“.
***