குரங்கின் பாதம் – W. W. Jacobs -சிறுகதை
தமிழில் : என்.பக்கிரிசாமி
**
நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின் திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி செய்தார். அதே சமயத்தில் தன்னுடைய ராஜாவுக்கு வரப்போகும் பிரச்சனையைப் அவர் பார்க்க விட்டுவிட்டார்.
“வெளியில் காத்து பிச்சிகிட்டு வீசுது.” மகனின் கவனத்தை திசை திருப்பி ஆட்டத்தில் வெல்ல முயன்றார் வொய்ட். “எனக்கும் காதுல விழுது.” மகன் கவனம் சிதையாது தந்தையின் ராஜாவுக்கு செக் வைத்தான். “இன்றைக்கு அவர் வரமாட்டார் என்று நினைக்கிறேன்.” செஸ் போர்டைப் பார்த்துக்கொண்டே தந்தை கூறினார். “செக் மேட். உங்களால் தப்பிக்க முடியாது.” ஹெர்பர்ட் தீர்மானமாகக் கூறினான். வொய்ட் பணியிலிருந்து ஓய்வடைந்தவர். ஹெர்பர்ட் இளைஞன். ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவன்.
“இந்த அளவுக்கு மோசமாகத் தோற்பேன் என்று நான் நினைக்கவேயில்லை.” தோல்வியை எதிர்பார்க்காத வொய்ட் சலிப்புடன் கூறினார். “எப்படியாவது இந்த முறை வென்றுவிடலாம் என்று நினைத்தேன்.” என்றார்.
“பரவாயில்லை. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்.” வொய்ட்டின் மனைவி அவருக்கு ஆறுதல் கூறினார். தாயும் மகனும் தன்னைப்பார்த்து சிரிப்பதைப் புரிந்துகொண்ட வொய்ட், தனது தோல்வியை மறக்க மழுப்பலாக சிரித்து சமாளித்தார்.
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்ட வொய்ட், “இதோ வந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.” எனறபடி கதவை நோக்கி விரைந்தார். கதவைத்திறந்தவுடன் நல்ல உயரத்துடன், கம்பீரமான தோற்றம்கொண்ட ஒருவர் உள்ளே நுழைந்தார்.
“வாருங்கள். வாருங்கள். ராணுவ வீர்ர் மோரிஸ்” வொய்ட் வந்தவரை தனது குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். மோரிஸை நெருப்புத்தொட்டிக்கு அருகில் அமருமாறு கூறிவிட்டு, வந்தவருக்கு பருகுவதற்கு ஏதாவது எடுத்துவருமாறு தனது மனைவியிடம் கூறினார் வொய்ட்.
மோரிஸ் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பலதரப்பட்ட நாடுகளில் பணியாற்றிவிட்டு திரும்பியிருந்தார். “நீ ஊரைவிட்டு சென்று இருபது வருடங்களைத் தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன்.
இருபது வருடங்களில் மிகவும் மாறிவிட்டாய்.” வொய்ட் மோரிஸை நோக்கிக் கூறினார். வித்தியாசமான இடங்கள், மனிதர்கள் என்று தன் அனுபவங்களை மோரிஸ் எப்பொழுதும் பகிர்ந்துகொள்வதால், அனைவரும் மோரிஸைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
“எனக்கொன்றும் மோரிஸ் அவ்வளவாக மாறிவிட்டதுபோல் தோன்றவில்லை. அப்படியேதான் இருக்கிறார்.” வொய்ட்டின் மனைவி கூறினார்.
“நானும் ஒருநாள் இந்தியா சென்றுவரலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பமாக உள்ளது.” வொய்ட் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
“வேண்டாம். இருக்கும் இடத்திலேயே இருங்கள்.” பானத்தைப் பருகிவிட்டு குவளையைக் கீழே வைத்தார் மோரிஸ்.
“அங்கு இருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் பற்றிக்கேட்டது முதல் பார்த்தே ஆகவேண்டும்போல் தோன்றுகிறது. அன்று ஒருநாள் ஏதோ குரங்கின் பாதம் பற்றிக் கூறிவிட்டுப் பாதியில் நிறுத்திவிட்டாயே அதைப்பற்றிக் கூறேன்.” – வொய்ட்.
“வேண்டாம். தெரிந்துகொள்வதற்கு அதில் ஒன்றுமில்லை.” அவசரமாக மறுத்தார் மோரிஸ்.
“குரங்கின் பாதமா? என்ன அது? வித்தியாசமாக இருக்கிறதே.” ஆச்சரியத்துடன் கேட்டார் வொய்ட்டின் மனைவி.
“ஒன்றுமில்லை. ஒரு மந்திரவாதியின் கண்கட்டுவித்தை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.” பதிலளித்தார் மோரிஸ்.
கண்கட்டுவித்தை என்று மோரிஸ் கூறியது, மூன்று பேருடைய ஆர்வத்தையும் அதிகப்படுத்திவிட்டது. குவளை காலியாகியிருந்ததை மறந்த மோரிசஸ், அதனை மீண்டும் எடுத்து பருக எத்தனித்தார். அதனைக்கண்ட திருமதி.வொய்ட், மோரிஸின் குவளையை நிரப்பினார்.
“இது ஒரு குரங்கின் பாதம். பாடம் படுத்தப்பட்ட ஒரு காய்ந்த பாதம்.” தன்னுடைய பையிலிருந்த அந்த பாதத்தை வெளியே எடுத்து ஹெர்பர்ட்டிடம் கொடுத்தார் மோரிஸ். காய்ந்துபோன பாதத்தைக் கண்ட வொய்ட்டின் மனைவி சிறிது பின் வாங்கினார்.
மகனின் கையிலிருந்த பாதத்தை வாங்கிப்பார்த்த வொய்ட் “இந்த காய்ந்துபோன பாதத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
“இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. சாபமா வரமா என்று புரியவில்லை. சாபமென்றுதான் நினைக்கிறேன். ஒரு பெரிய சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய வாழக்கையும் விதிப்படிதான் அமைகிறது. அமையவேண்டும். விதியை மீறி விதியுடன் விளையாட நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று அந்த சாமியார் உலகத்துக்கு சொல்ல விரும்பினார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கியிருக்கிறார்.”
“அப்படி என்ன சாபம் அது?” ஹெர்பர்ட்டுக்கு ஆவலை அடக்கமுடியவில்லை.
“இந்தப் பாதம் மூன்று வரங்களை, மூன்றுபேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்லது” – வொய்ட்.
“அப்படியென்றால், நீங்கள் ஏதாவது வரம் கேட்டீர்களா?. கிடைத்ததா?” – ஹெர்பர்ட்.
“கேட்டேன். கிடைத்தது.”
“மற்ற இருவருக்கும் கிடைத்த்தா?
“கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். என் கைக்கு இது வந்துவிட்டது.” – வொய்ட்.
“உங்களுக்குதான் வரம் கிடைத்துவிட்டதே. இன்னும் ஏன் இதனை சுமக்கிறீர்கள்? இதனால் இனி உங்களுக்கு பயனேதும் இல்லையே?” – ஹெர்பர்ட்.
“தெரியவில்லை. ஒரு நினைவுச்சின்னம் போல வைத்திருக்கிறேன்.” – வொய்ட்.
“உங்களுக்கு இன்னும் ஏதாவது வரம் கிடைத்தால் இப்பொழுது கேட்பீர்களா? – ஹெர்பர்ட்.
“எனக்குத் தெரியவில்லை.” சொல்லிக்கொண்டே திடீரென்று மோரிஸ் அந்தப் பாதத்தை நெருப்புத் தொட்டியில் தூக்கி எறிந்தார். நெருப்பிலிருந்து தீப்பற்றுமுன் அதனை எடுத்துவிட்டார் வொய்ட்
“வேண்டாம். அதனை எறிந்துவிடுங்கள்.” மோரிஸ் இரைஞ்சலுடன் கூறினார்.
“உங்களுக்குத் தேவையில்லையென்றால் நான் எடுத்துக்கொள்கிறேனே.” – என்றார் வொய்ட்.
“வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள். அதை நெருப்பில் எறிந்துவிடுங்கள். அதனால் வரும் விளைவுகள் கொடுமையாக இருக்கும். என் பேச்சைக் கேளுங்கள். எறிந்துவிடுங்கள்.’ கெஞ்சினார் மோரிஸ்.
வொய்ட் கேட்பதாக இல்லை. “எப்படி வரம் கேட்கவேண்டும்?” அந்தப் பாத்த்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டார். வொய்ட்.
“உங்கள் இஷ்டம். பிறகு என்னைத் திட்டாதீர்கள்.” – மோரிஸ்.
“சரி. எப்படி கேட்பது என்று சொல்லுங்கள்.” – வொய்ட்.
“உங்கள் வலது கையில் அந்தப் பாதத்தை வைத்துக்கொண்டு, அதனைப் பார்த்து, வாய்விட்டுக் கேட்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். விளைவுகள் விபரீதமாக இருக்கும்.” – மோரிஸ்.
“அரேபியக் கதைபோல இருக்கிறது.” சொல்லிக்கொண்டே திருமதி வொய்ட், இரவு உணவு பரிமாற எழுந்தார். “எனக்கு வேலை செய்ய இன்னும் இரண்டு கைகளைக் கேட்டால் நன்றாக இருக்கும்.” என்றாவாறே சென்றார்.
“கேட்பதைக் கொஞ்சம் உருப்படியாகத்தான் கேளேன். இருக்கும் மூளையை உபயோகப்படுத்து.” விளையாட்டாகக் கூறிய வொய்ட் குரங்குப் பாதத்தை தனது சட்டைப்பையில் பத்திரப்படுத்தினார். இரவு உணவு முடியும்வரை, கிட்டத்தட்ட அனைவரும் அந்தப் பாதத்தை மறந்துவிட்டார்கள். உணவு முடிந்ததும், தனக்கு இந்தியாவில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் மோரிஸ்.
“இவருடைய அனுபவங்கள், இந்தக் குரங்கின் பாதம்போல நம்புவதற்கு கடினமாக இருக்கிறது” விருந்தினரை வழியனுப்பிய பிறகு கூறினார் வொய்ட். “அவருடைய குரங்குப் பாதத்துக்கு பணம் ஏதாவது கொடுத்தீர்களா?” – திருமதி.வொய்ட்.
“கொடுத்தேன். வேண்டாமென்று திரும்பக்கொடுத்துவிட்டார்.” – பதிலளித்தார் வொய்ட்.
“நினைத்தேன். நாம் இனி பெரிய பணக்காரர்களாகிவிடலாம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். பெரிய ராஜா ஆகவேண்டும் என்று கேட்கலாம் அப்பா. அப்படி நீங்கள் ஆகிவிட்டால் அம்மாவுக்குப் பயப்படத் தேவையிருக்காது.” அம்மாவைப் பார்த்தபடி கூறினான் ஹெர்பர்ட்.
வொய்ட் பையிலிருந்த குரங்கின் பாத்த்தை வெளியில் எடுத்தார். “எனக்கு என்ன கேட்பதென்றே தெரியவில்லை. எனக்குத் தேவையான எல்லாம் எனக்கு இருக்கிறதே.” என்றார்.
“சரி. ஒரு இருநூறு பவுண்ட் பணம் கேட்டுப் பார்க்கலாம்.” யோசனை கூறினான் ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை வலக்கையில் வைத்தபடி அதனை நோக்கி “எனக்கு இருநூறு பவுண்ட் பணம் வேண்டும்.” பியானோவின் முன் அமர்ந்தபடி உரக்கக் கூறினார் வொய்ட்.
அவர் கேட்டதும் பியானோ அதிர்ந்த ஒலி கேட்டது. அந்த ஒலியைக் கேட்டுத் திடுக்கிட்ட வொய்ட் ஆவென்று குரலெழுப்பினார். வொய்ட்டின் மனைவியும் மகனும் அவரை நோக்கி ஓடினார்கள். “நான் கேட்டதும் அந்தப் பாதம் நகர்ந்தது. என் கையை அது முறுக்கியதுபோல் இருந்தது. அதனால்தான் பயந்து கத்திவிட்டேன்.” வொய்ட் பதற்றமாகக் கூறினார்.
“பணத்தையும் காணோம். ஒன்றையும் காணோம்.” அந்தப் பாதத்தை எடுத்து மேஜை மீது வைத்தான் ஹெர்பர்ட். “பரவாயில்லை. சும்மா விளையாட்டுக்குக் கூறியிருக்கலாம்.” வொய்ட்டின் மனைவி சமாதானப்படுத்தினார். “அதனாலென்ன? நமக்கு எதுவும் தீங்கு நிகழவில்லையே. இருந்தாலும் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.” வொய்ட் கூறினார்.
வொய்ட்டும், ஹெர்பர்ட்டும் நெருப்பின் முன் அமர்ந்து மீண்டும் குளிர்காய ஆரம்பித்தனர். வீட்டுக்குள் அமைதியாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியே காற்று பலமாக வீசிய ஒசை அந்தச் சூழலுக்கு ஒரு அச்சமான உணர்வை ஏற்படுத்தியது. “சரி. தூங்கப்போகலாம்.” என்றவாறு விளக்கை அமர்த்திவிட்டு தூங்கக் கிளம்பினார் வொய்ட்.
“ஒருவேளை உங்கள் படுக்கையில் இருநூறு பவுண்ட் பணம் இருந்து தொலைக்கப் போகிறது. நீங்கள் பணத்தை எடுக்கும் பொழுது பூதம் அலமாரியிலிருந்து உங்களை வேடிக்கைப் பார்க்கப்போகிறது.” கிண்டல் செய்தான் ஹெர்பர்ட்.
நெருப்பின் முன் தனியாக அமர்ந்திருந்தான் ஹெர்பர்ட். நெருப்பில் மனித முகங்கள் தெரிவதுபோல் கற்பனை செய்து பார்த்தான். கடைசியாக அவன் பார்த்த முகத்தைப்பார்த்து அவனுக்கே பயம் வந்துவிட்டது. அந்த முகம் மிகவும் தெளிவாகத் தெரிந்ததுபோல் இருந்தது. மேஜைமேல் இருந்த நீரை எடுத்து தீயை அணைத்தான் ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை எடுத்து துடைத்து வைத்துவிட்டு உறங்கச் சென்றான் ஹெர்பர்ட்.
காலை உணவருந்திக்கொண்டிருந்த ஹெர்பர்ட், இரவு நெருப்பிலிருந்த முகத்தைக்கண்டு பயந்துபோனதை நினைத்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். குளிர்காலமாக இருந்தாலும், காலை சூரியனின் கதிர்கள் பளீரென்று சமையலறையை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. வீட்டில் முதல் நாள் இரவு இருந்த இறுக்கமான சூழ்நிலை இல்லாதிருந்தது. அழுக்காக, சுருங்கிப்போயிருந்த குரங்கின் பாதம் பக்கத்தில் இருந்த மேஜை மேல் கிடந்தது. அதன்மீது நேற்று வீட்டினர் கொண்டிருந்த ஆர்வம் மதிப்பிழந்திருந்தது.
“அனைத்து வயதான ராணுவத்தினர்களும் வண்டி வண்டியாகக் கதைவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.” – திருமதி.வொய்ட்.
“முட்டாள்தனமாக நாமும் நம்பி அந்தக் கதையை வாய்மூடாமல் கெட்டுக்கொண்டிருந்தோமே. இந்தக் காலத்தில் வரமெல்லாம் கிடைக்கும் என்று நம்புபவர்களும் இருக்கிறார்களா, என்ன? அப்படியே இருந்தாலும் அதனால் என்ன தந்துவிட முடியும், அப்பா? என்றான் ஹெர்பர்ட்.
“பணம், வானத்திலிருந்து மோரிஸின் தலையில்தான் விழப்போகிறது.” கிண்டலாகக் கூறினான் ஹெர்பர்ட்.
“மோரிஸ், கேட்டதெல்லாம் சுலபமாகக் கிடைத்துவிடும் என்று கதைவிட்டாரே. தற்செயலாக அவருக்கு ஏதாவது கிடைத்திருக்கலாம். அதனால் அவர் அதை நம்பியிருக்கலாம்.” – வொய்ட்.
“பணம், கிணம் வந்தால் நான் திரும்பி வரும்வரை தொடாதீர்கள்.” சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்லத் தயாரானான் ஹெர்பர்ட். “பணம் கிடைத்தால், அது உங்களை மிகவும் மாற்றிவிடும் என்று நினைக்கிறேன். பேராசைக்காரராக மாறிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி மாறிவிட்டால் உங்களை நாங்கள் விலக்கி வைத்துவிடுவோம், அப்பா.” என்றான் ஹெர்பர்ட்.
தாயும் மகனும், வொய்ட்டுடைய கள்ளங்கபடமற்ற தன்மையை நினைத்து சிரித்துக்கொண்டார்கள். திருமதி.வொய்ட் மகனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார். “ஹெர்பர்ட் வேலை முடிந்து வந்ததும், இன்னும் உங்களை கிண்டல் செய்யப்போகிறான்.” என்றவாறு சாப்பிட அமர்ந்தார் திருமதி.வொய்ட். குவளையில் குடிப்பதற்கு பானகத்தை ஊற்றிக்கொண்டிருந்த வொய்ட் “செய்யட்டும். செய்யட்டும். ஆனால், சத்தியமாகச் சொல்கிறேன்., நான் வரம் கேட்டபொழுது அந்தப் பாதம் நகர்ந்ததைப் பார்த்து பயந்துவிட்டேன், தெரியுமா?” என்றார்.
“நகர்ந்ததாகக் கற்பனை செய்யாதீர்கள்.” – மறுத்தார் மனைவி.
“இல்லையில்லை. உண்மையாக அது என் கையை முறுக்கியது. அப்பொழுது நான் . . . . என்ன? . . . என்ன விஷயம்?” என்றார்.
வொய்ட்டின் மனைவி பதில் தராமல் வீட்டுக்கு வெளியே யாரோ இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் ஏதோ காகிதத்தை வைத்துக்கொண்டு, வீட்டு எண்ணை மீண்டும் மீண்டும் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டு எண்ணை உறுதி செய்ததும் வெளியிலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு, கதவை நோக்கி அந்த மனிதர் வந்தார். அவர் கதவைத் தட்டுமுன் திருமதி.வொய்ட் கதவைத் திறந்து “என்ன விஷயம்?” என்றார்.
வந்தவர் ஏதோ தயங்குவதுபோல் தோன்றியது. “இது, திரு.வொய்ட்டின் வீடுதானே?” என்றார். “ஆமாம். நான் தான் திருமதி.வொய்ட்.”
“நான் ஹெர்பர்ட் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து வருகிறேன். உள்ளே வரலாமா?” என்றார் வந்தவர்.
“உள்ளே வாருங்கள். என்ன விஷயம்? ஹெர்பர்ட்டுக்கு ஏதாவது பிரச்சனையா? என்ன விஷயம்?” பதற்றப்பட்டார் திருமதி.வொய்ட்.
“நிறுத்து. பதறாதே. அம்மாக்களே இப்படித்தான். நீயே தீர்மானம் செய்துகொள்வதா? கொஞ்சம் அப்படி உட்கார்.” மனைவியை அதட்டிய வொய்ட் “நீங்கள் எதுவும் கெட்ட செய்தியைக் கொண்டுவரவில்லை என்று நினைக்கிறேன்.” வந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டார் வொய்ட்.
“மன்னிக்க வேண்டும். . . . “ வந்திருந்தவர் ஆரம்பித்தார்.
“”அவனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே?” தாயாரால் பொறுக்கமுடியவில்லை.
வந்திருந்தவர் மெதுவாகக் கூறினார். “ ஹெர்பர்ட்டுக்கு மிகவும் மோசமாக அடிபட்டுவிட்டது. . . . . . ஆனால், அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு இருந்ததுபோல் தெரியவில்லை
“ஆண்டவா. நன்றி. நன்றி.” இரு கரங்களையும் சேர்த்து வைத்தபடி இறைவனுக்கு நன்றி கூறினார் திருமதி.வொய்ட். அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு இருந்ததுபோல் தெரியவில்லை. அப்படியென்றால்? செய்தியில் உள்ள உட்கருத்தை உணர்ந்த திருமதி.வொய்ட் இடிந்துபோனார். பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்று எண்ணினார். அவருக்கு மூச்சே நின்றுவிட்டதுபோல் இருந்தது. நடுங்கியபடி கணவனின் தோளின் மீது கையை வைத்தார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தது
புதிய மனிதர் “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டார்.” என்று மெதுவாகக் கூறினார். “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டான். இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டான். ஆமாம். மாட்டிக்கொண்டான்.” பைத்தியம்போல் ஜன்னலை நோக்கி வெறித்தபடி மீண்டும் மீண்டும் கூறினார் வொய்ட். மனைவியின் இடது உள்ளங்கையை எடுத்து தனது இரு கைகளுக்கிடையில் அழுத்தியபடி கூறினார். நாற்பது வருடங்களுக்கு முன் கவலைப்படாதே என்பதற்கு அடையாளமாக அவர் அப்படி செய்வது வழக்கம்.
“எங்களுடைய ஒரெ சொத்து அவன் தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” வந்திருந்தவரைப்பார்த்து வருத்தத்துடன் கூறினார் வொய்ட். வந்திருந்தவர் “மன்னிக்கவும். நான் வெறும் தகவல் சொல்ல வந்திருக்கும் ஆள் மட்டும்தான். நிறுவனம் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தங்களிடம் கூறுமாறு என்னை அனுப்பினார்கள். மன்னிக்கவும்.” என்றார்.
யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. வயதான தாயின் முகம் வெளிறிப்போனது. கண்கள் எங்கோ வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. சிலைபோல இருந்தார். வொய்ட் குரங்கின் பாதம் வேலை செய்யத் துவங்குவதை உணர ஆரம்பித்தார்.
“நிறுவனம் தான் இந்த விபத்துக்கு எந்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவதாகத் தகவல் அனுப்பியுள்ளது. இருந்தாலும் தங்களுடைய மகனின் உழைப்பைக் கருத்தில் கொண்டு சன்மானமாக ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார்கள்.” – வந்திருந்தவர்.
திரு.வொய்ட் மனைவியின் கையை விலக்கிவிட்டு எழுந்தார். உலர்ந்த உதடுகளை மெதுவாக விலக்கி “எவ்வளவு?” என்றார்.
“இரு நூறு பவுண்டுகள்.”
மனைவியின் கதறல் வொய்ட்டின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஒரு குருடனைப்போல் நடந்து சென்று வீட்டின் தரையில் விழுந்தார் வொய்ட்
எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தது. மகனை மயானத்தில் புதைத்துவிட்டுவந்த இரண்டு வயதானவர்களுடைய இதயமும் துயரத்தில் புதைந்திருந்தது. கண்சிமிட்டும் நேரத்தில் அனைத்தும் முடிந்ததுபோல் இருந்தது.
சில நாட்கள் கழிந்தன. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்தது. இருவரும் பேசிக்கொள்ளாமலே நாட்கள் நகர்ந்தன. பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லாததுபோல் இருந்தது.
ஒருநாள் இரவு படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த வொய்ட், அருகே மனைவி இல்லாதிருந்ததை உணர்ந்தார். ஜன்னலுக்கருகே விம்மல் ஒலி கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்த வொய்ட் “படுத்துத் தூங்கு. சளி பிடித்துக்கொள்ளப் போகிறது.” மெதுவாக கூறினார். “என் மகனுக்கு குளிராக இருக்குமே.” அழுதுகொண்டே கூறினார் திருமதி வொய்ட். நீண்டநேரத்திற்குப் பிறகு திருமதி வொய்ட் தூங்க ஆரம்பித்தார். பாதி தூக்கத்தில் திடீரென்று எழுந்து “அந்த குரங்கின் பாதம்…” என்று கூக்குரலிட்டாள். திடுக்கிட்டு எழுந்த வொய்ட் “என்ன? என்னவாயிற்று?” என்றார். கணவரிடம் “எனக்கு அந்த குரங்கின் பாதம் வேண்டும். நீங்கள் அதனை எறிந்துவிடவில்லையே?” என்றார்.
“அலமாரியில் உள்ளது. ஏன்?” வொய்ட் கேட்டார்.
“ஆமாம். நிச்சயம் முடியும். ஏன் இந்த யோசனை எனக்கு முன்பே தோன்றவில்லை?” என்று பைத்தியம்போல் கூறினார் திருமதி வொய்ட்.
“என்ன தோன்றவில்லை?” புரியாமல் கேட்டார் வொய்ட்.
“குரங்கின் பாதத்திற்கு இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றனவே. ஒன்றைத்தானே உபயோகித்திருக்கிறோம். இன்னும் இரண்டை உபயோகிக்கலாமே.” – திருமதி வொய்ட்.
“ஒன்றால் வந்த விபரீதம் போதவில்லையா?” மறுத்தார் வொய்ட்.
“இல்லை. அதனைக் கொண்டுவாருங்கள். நான் என் மகனைக் கேட்கப்போகிறேன். கொண்டுவாருங்கள்.” – திருமதி வொய்ட்.
“உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. பேசாமல் படு.” – வொய்ட்
“முடியாது. கொண்டுவாருங்கள். எனக்கு என் மகன் வேண்டும்.”
வொய்ட் அமைதியாக மனைவியைப் பார்த்தார். “ஹெர்பர்ட் இறந்து பத்து நாட்களாகிவிட்டன. நான் உன்னிடம் சொல்லவில்லை. விபத்துக்குப்பிறகு என்னால் ஹெர்பர்ட்டை அடையாளம் காணவே முடியவில்லை. அவனுடைய உடையை வைத்துதான் அடையாளம் காணமுடிந்தது. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தான். வேண்டாம் மறந்துவிடு. உன்னால் அவனை அப்படிப் பார்க்கமுடியாது.” என்றார்.
“நான் வளர்த்த மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா? எனக்கு முதலில் குரங்கின் பாதத்தைக் கொண்டு வாருங்கள்.” – திருமதி வொய்ட்.
மனைவியின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாமல், இருட்டில் தட்டுத்தடுமாறிச் சென்று அந்த குரங்கின் பாதத்தை எடுத்து வந்தார் வொய்ட். அதனைக்கண்ட திருமதி வொய்ட் “இப்பொழுது வரம் கேளுங்கள்.” என்று உறுதியான குரலில் ஆணையிட்டார்.
“அது பைத்தியக்காரத்தனமானது. கொடுமையானது.” வொய்ட் மீண்டும் மறுத்தார்.
“முடியாது. வரத்தைக் கேளுங்கள்.” திருமதி வொய்ட் வற்புறுத்தினார். வொய்ட் வலதுகையில் குரங்கின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு “எங்கள் மகன் மீண்டும் உயிருடன் வேண்டும்.” என்று வாய்விட்டுக் கூறினார்.
குரங்கின் பாதம் உதறிக்கொண்டு அவர் கையிலிருந்து கீழே விழுந்தது. வொய்ட் அதனை அச்சத்துடன் நோக்கினார். அதனை எடுக்க மனம் இல்லாமல் நாற்காலியில் சாய்ந்தார். திருமதி.வொய்ட் கலங்கும் கண்களுடன், ஜன்னல் அருகே சென்று, ஜன்னல் கதவைத் திறந்துவிட்டார்.
எப்பொழுதும் உபயோகிக்கும் நெருப்புத்தொட்டியில், நெருப்பு வைக்காமல், அதன் அருகில் கால்களைக் கட்டிக்கொண்டு வொய்ட் அமர்ந்திருந்தார். எரியும் மெழுகுவர்த்தியின் திரி காற்றில் அசைவதால், அந்த வெளிச்சத்தில் தெரிந்த நிழல்கள் சுவரின் மீதும், கூரையின் மீதும் ஆடிக்கொண்டிருந்தன. குரங்கின் பாதம் வரத்தை நிறைவேற்றாததால் நிம்மதியான வொய்ட் படுக்கைக்கு சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு திருமதி.வொய்ட்டும் அவரைப் பின்தொடர்ந்தார்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டில் எங்கோ எலி ஓடும் சத்தம் கேட்டது. கடிகாரமுள் நகரும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. மீண்டும் எலியின் சத்தத்தைக் கேட்ட வொய்ட், விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றார். அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசைக் கேட்டது. அந்த ஓசையைக் கேட்டு வொய்ட் கலவரமடைந்தார். அவர் ஒரு கையில் இருந்த தீப்பெட்டி, கைதவறிக் கீழே விழுந்தது. உண்மையில் கதவு தட்டும் ஓசைதான் கேட்கிறதா அல்லது பிரமையா என்று வொய்ட் திகைத்தார். மீண்டும் கதவு தட்டும் ஓசை தொடர்ந்து, அது அவரை நினைவுலகத்துக்குத் திருப்பியது. பயந்துபோன வொய்ட், வேகமாக தனது படுக்கையறைக்குச் சென்று படுக்கையறையின் கதவைத் தாழிட்டார். அப்பொழுது தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது.
“என்னவாயிற்று?” திருமதி.வொய்ட் படுக்கையிலிருந்து எழுந்தார்.
“ஒன்றுமில்லை. எலி வரவேற்பறையில் ஓடியது.”
தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது. “அது, ஹெர்பர்ட்தான். என் ஹெர்பர்ட்தான்.” திருமதி வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறக்க முற்பட்டார். அதிர்ச்சியடைந்த வொய்ட் மனைவியின் கையைப்பிடித்துத் தடுத்தார். “என்ன செய்யப்போகிறாய்?” என்றார். “என் மகன் வந்துவிட்டான்.” வொய்ட்டின் பிடியிலிருந்து கையை விடுவிக்க முயன்றார். “மயானம் இங்கிருந்து இரண்டு மைல் தூரம் என்பதை மறந்துவிட்டேன். என் கையை விடுங்கள். நான் கதவைத் திறக்கவேண்டும்.” என்றார்.
“இல்லை. முடியாது. அதை உள்ளே விட முடியாது.” வொய்ட் தடுத்தார். “உங்கள் மகனைக் கண்டே பயப்படுகிறீர்களா? என்னை விடுங்கள். ஹெர்பர்ட், இதோ வந்துவிட்டேன்.” வொய்ட்டின் கைகளிலிருந்து செல்ல முயற்சி செய்தார்.
தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்துகொண்டே இருந்தது. கணவரின் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்ட திருமதி.வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறந்துவிட்டு தெருக்கதவை நோக்கி ஓடினார். தெருக்கதவின் தாழ்ப்பாள் அவருக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. “தாழ்ப்பாள் எனக்கு எட்டவில்லை. சிறிது உதவுங்கள்.” என்று கணவரை உதவிக்கு அழைத்தார்.
ஆனால் வொய்ட், எங்கோ தரையில் கிடந்த குரங்கின் பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அதனை உடனே கண்டுபிடித்தாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். ஒரு நாற்காலியின் உதவியுடன், திருமதி.வொய்ட் தாழ்ப்பாளை நகர்த்தும் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், வொய்ட் குரங்கின் பாதத்தைக் கையில் எடுத்துவிட்டார். அவசர அவசரமாக, தனது மூன்றாவது வரத்தைக் கேட்டார்.
கதவு தட்டும் ஓசை நின்று போயிருந்தது. ஆனால் அந்த ஓசையின் எதிரொலி வீட்டில் இன்னும் இருந்தது. திருமதி.வொய்ட் கதவைத் திறந்ததும் குளிர்க்காற்று வீட்டினுள்ளே வீசியது. வீட்டுக்கு வெளியே ஓடி, வெளியிலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு தெருவரை சென்றார் திருமதி.வொய்ட். தெருவிளக்கு மினுக்கிக்கொண்டு இருந்தது. தெருவில் எந்தவித நடமாட்டமும் அவருக்குத் தென்படவில்லை. வெறிச்சோடிக்கிடந்த சாலையைப் பார்த்துக்கொண்டு கண்கலங்கி நின்றாள் அந்தத் தாய்.
The Monkey’s Paw- published 1902.
Thanks : https://packirisamy.blogspot.com/
***