நான் படித்த, எனக்கு விருப்பமான சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்க கூடும். எந்தக் கடையில் கிடைக்கிறது என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அச்சில் இல்லாமல் இருந்தால் நூலகத்தில் தேடித்தான் வாசிக்க வேண்டும்.
இவான்
விளதீமிர் பகமோலவ்
தமிழில்: நா. முகம்மது செரீபு
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
புகழ்பெற்ற ரஷ்ய இயக்குநரான தார்கோவெஸ்கியின் (Andrei Tarkovsky) Ivan’s Childhood திரைப்படம் இந்த நாவலை மையமாக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய நாவல். இந்த நாவலைப் படித்துவிட்டுத் திரைப்படத்தைப் பாருங்கள். திரைக்கதையின் நுட்பங்களை நீங்களே அறியத் துவங்குவீர்கள்.
•••
கவிதாலயம்
ஜீலானி பானு
தமிழில் :முக்தார்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
மிகச்சிறந்த உருது நாவல். கவிதை புனைவதிலும் சிற்றின்ப நுகர்ச்சியிலும் செல்வ வளத்திலும் திளைத்துப் போன சமூகத்தையும் ஹைதராபாத் நிஜாமில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் விவரிக்கும் சிறந்த நாவல்.
•••
மித்ராவந்தி
கிருஷ்ணா ஸோப்தி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
தமிழில் : லட்சுமி விஸ்வநாதன்
கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் பெண்ணின் அடக்கப்பட்ட காமத்தையும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார்.இந்தி இலக்கியத்தில் ஸோப்தியின் குரல் வலிமையானது. அவர் ஏற்படுத்திய அதிர்ச்சிகளும் லேசில் அடங்கக்கூடியவையில்லை. மித்ராவந்தி அதற்குச் சரியான உதாரணம்
••
கொல்லப்படுவதில்லை
வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘நாவல் .
தமிழாக்கம் : கிருஷ்ணமூர்த்தி
சாகித்திய அகாடமி வெளியீடு
காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் இந்த நாவல் வெளியானதே சுவாரஸ்யமான கதை. தன்னைப் பற்றி அவதூறாகக் காதலன் எழுதிய நாவலுக்கு மறுப்பாகவும், உண்மையான காதலின் வெளிப்பாடாகவும் இந்த நாவலை மைத்ரேயி தேவி எழுதியிருக்கிறார்
•••
தன் வெளிப்பாடு
சுநில் கங்கோபாத்யாயா
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சுநில் கங்கோபாத்யாயாவின் இந்த நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கம் செய்துள்ளார்.
இது ஆத்ம பிரகாஷ் என்ற வங்க நாவலின் தமிழாக்கம்.
சுய அடையாளத்தைத் தேடும் இளைஞனின் கொந்தளிப்பான நாட்களை, மனநிலையை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்
•••