எழுத்தின் வழியான பயணம்

சுபாஷ் ஜெய்ரேத் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். இவர் ஒன்பது ஆண்டுகள் ரஷ்யாவில் புவியியல் மற்றும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார். 1986 இல் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது நாவல் ஆஃப்டர் லவ் 2018 இல் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது.

இவரது Spinoza’s Overcoat, Travels with Writers and Poets சிறப்பான கட்டுரைத் தொகுப்பாகும். சுபாஷ் ஜெய்ரேத் ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதால் இந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்தேன். அத்தோடு எனக்கு விருப்பமான எழுத்தாளர்களில் பலரைப் பற்றிய கட்டுரைகள் உள்ள தொகுப்பு என்பதால் மிகவும் ஆசையாக வாசித்தேன்.

தனக்கு விருப்பமான எழுத்தாளரின் படைப்புகள் உருவான இடத்தைத் தேடிச் சென்று பார்த்து. அந்தப் படைப்பு எழுதப்பட்ட சூழல். அன்றைய இலக்கியச் சமூகத் தளங்கள் பற்றி ஆழ்ந்து ஆய்வு செய்து, அதைத் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தோடு இணைத்துப் புனைவு மொழியில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் ஜெய்ரேத்.

இதில் Franz Kafka, Marina Tsvetaeva, Mikhail Bulgakov, Carson,, Lorca, Mandelshtam, Mayakovsky, Pasternak, Paul Celan, Hiromi Ito, Baruch Spinoza பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பயணமும் வாசிப்புமே இந்தக் கட்டுரைகளின் முக்கியச் சரடுகள். சுபாஷ் கெய்ரேத்தின் பன்மொழி வாசிப்பும் விரிவான பயணமும் வியப்பளிக்கிறது.

இத்தொகுப்பிலுள்ள காஃப்காவின் சகோதரி ஓட்லா பற்றிய கட்டுரை மிகச்சிறப்பானது. ஓட்லா யூதமுகாமில் கொல்லப்பட்டவர். பிராக்கிலிருந்த பல யூதர்க் குடும்பங்களைப் போலவே, ஓட்லா மற்றும் அவரது சகோதரிகளும் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் நாடு கடத்தப்பட்டார்கள். ஒட்லா தெரேசியன்ஸ்டாட்டில் உள்ள வதைமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே விஷவாயு செலுத்தி ஒட்லா கொல்லப்பட்டார். இந்தக் கட்டுரையில் ஓட்லாவிற்கும் காஃப்காவிற்குமான அன்பை மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்

இது போலவே புல்ககோவ் பற்றிய கட்டுரையில் அவரது எழுத்துகள் தடைசெய்யப்பட்ட சூழல் மற்றும்  அதிகாரத்தின் கெடுபிடி, மோலியர் நாடகத்தை வெளியிட முடியாத போது புல்ககோவ் அடைந்த துயரம் எனக் காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்து போன கலைஞனின் வாழ்வை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.

பால் செலான், இடோ, லோர்கா, மாயகோவ்ஸ்கி, பாஸ்டெர்னாக் மற்றும் ஸ்வெதேவா எனச் சுபாஷின் விருப்பத்திற்குரிய கவிஞர்களையும் அவர்களின் முக்கியக் கவிதையினையும் பற்றிய கட்டுரைகள் அழகானவை. கவிதையின் வழியே கவிஞனின் மனதை ஆராயக்கூடியவை..

ஜப்பானியக் கவிஞரான இட்டோ ஹிரோமியின் ஃகில்லிங் கனோகோ பற்றிய அறிமுகம் முக்கியமானது.

சில புத்தகங்கள் வாசித்த முடிந்தபின்பு நம்மை விட்டு மறைந்துவிடுவதில்லை. அவை நம் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிடுகின்றன. பல தருணங்களில் அதன் வரிகள் நமக்குள் எழுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களை நாம் நேசிக்கத் துவங்கிவிடுகிறோம். நல்ல நண்பரைப் போலப் புத்தகங்கள் உருமாறிவிடுகின்றன. காரின் பின்பக்கக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிப்பது போல், புத்தகங்கள் நாம் கடந்து வந்த பாதையைக் காட்டி நம்மோடு பயணிக்கின்றன என்கிறார் ஜெய்ரேத். அது உண்மையே.

0Shares
0