லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான அகஸ்டோ மான்டெரோசோ (Augusto Monterroso) ஒரேயொரு வரியில் கதை எழுதியிருக்கிறார்.

டைனோசர் என்ற அந்தக் கதை பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.
இதாலோ கால்வினோ அதனை நிகரற்ற கதை என்று புகழுகிறார். அந்தக் கதை குறித்துப் போர்ஹெஸ் தனது கட்டுரை ஒன்றிலும் வியந்து குறிப்பிடுகிறார்.

Cuando despertó, el dinosauro todavía estaba allí
(When he awoke, the dinosaur was still there )
என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது.
When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது.
என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள்.
லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது.
இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
it isn’t a short-story, it is actually a novel.
உண்மை தான். நாவலின் முதல் வாக்கியம் என்றே இதனைச் சொல்ல வேண்டும்.
உறக்கத்தில் கண்ட டைனோசர் விழித்த போது எதிரில் இருக்கிறது என்றொரு விளக்கத்தையும் படித்தேன். அப்படியும் நினைக்கலாம். டைனோசர் நம் காலத்தின் விலங்கில்லை. அது அழிந்து போன உயிரினம். அது எதிரே அமர்ந்திருப்பது இனப்படுகொலையின் சாட்சியம் போலவும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஹாலிவுட் சினிமாவில் டைனோசர் கொடூர உயிரினமாகச் சித்தரிக்கப்படுவதற்கு முன்பு வரை டைசோனர் குறித்த பிம்பம் வேறாக இருந்தது. குறிப்பாகப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரிய உயிரினமாக மட்டுமே கருதப்பட்டது. உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் டைனோசர் இனம் அழிவைச் சந்தித்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அகஸ்டோ மான்டெரோசோவின் கதையில் வரும் டைனோசர் வேட்டையாடக் காத்திருக்கிறது என்றே இன்றைய தலைமுறை புரிந்து கொள்வார்கள். சினிமா உருவாக்கிய தாக்கமது.
மான்டெரோசோவின் டைனோசரைப் போல நாம் விழித்து எழுந்திருக்கும் போதும் எதிர்பாராத சிக்கல் அல்லது அபாயம் நம் முன்னே அமர்ந்திருக்கக் கூடும். கதை என்பது வாசிப்பவனின் கற்பனையால் வளர்த்தெடுக்கபடுவது. அதற்கான சாத்தியங்களைக் கதை கொண்டிருக்கிறதா என்பதே முக்கியம்.
Gregory Samsa awoke one morning after a restless sleep to find himself in his bed, transformed into a monstrous insect. மான்டெரோசோவின் கதையை வாசிக்கும் போது எனக்குக் காஃப்காவின் உருமாற்றம் சிறுகதை நினைவிற்கு வந்து போனது.
தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.
ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.
மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள். அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.
அவரது HOW I GOT RID OF FIVE HUNDRED BOOKS என்ற கட்டுரையில் பழைய புத்தகக்கடைகளைப் பற்றியும் புத்தகங்களை வாங்கும் ஆசை பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். 1955 இல், அவர் பாப்லோ நெரூதாவை சந்திக்கச் சாண்டியாகோவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவரிடம் முப்பது நாற்பது புத்தகங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்து போனார். தனது சேமிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்துவிட்டதாகவும் தற்போது இந்தப் புத்தகங்கள் மட்டுமே போதும் என நினைப்பதாகவும் நெரூதா கூறினார். அங்கிருந்தவை துப்பறியும் நாவல்கள் மற்றும் நெரூதாவின் சொந்த படைப்புகளின் பல்வேறு மொழி மொழிபெயர்ப்புகள் மட்டுமே..
அகஸ்டோ மான்டெரோசோவின் இன்னொரு கட்டுரை இப்படித் துவங்குகிறது
Direct acquaintance with writers is harmful. “A poet,” said Keats, “is the least poetic thing in the world.”
லத்தீன் அமெரிக்கச் சிறுகதையுலகில் அகஸ்டோ மான்டெரோசோ தனித்துவமானவர். அவரது கதைகள் விசித்திரமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன கவிதைக்கு நெருக்கமான மொழி நடையில் எழுதப்பட்ட இக்கதைகளின் ஊடாக மெல்லிய பகடி வெளிப்படுகிறது. ஒரு வரிக்கதை ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பதோடு இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருவது வியப்பானதே.
••