யூஜி.அருண் பிரசாத். தூத்துக்குடி.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நிலம் கேட்டது கடல் சொன்னது புத்தகத்தில் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றைய ஹிரோஷிமா எப்படி இருக்கிறது என்பதில் துவங்கி வரலாற்றில் ஜப்பான் எப்படி இருந்தது , ஏன் ஹிரோஷிமா நாகசாகி என்ற இரு ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது என்பது வரை தனது விரிவான பயண அனுபவங்களைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. இதை வாசிக்கும் போது நாமும் அவருடன் இணைந்து ஜப்பானில் பயணம் செய்கிறோம்.
OPPENHEIMER திரைப்படம் பார்க்கும் முன் இந்தப் புத்தகம் வாசித்தேன். இதற்கு முக்கியக் காரணம்
கிறிஸ்தபர் நோலன் திரைப்படங்கள் அவ்வளவு எளிதாக எனக்குப் புரிந்ததில்லை. எனவே இந்த முறை ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட அணுகுண்டை உருவாக்கிய இயற்பியலாளர் ஓப்பன் ஹைமர் பற்றிய திரைப்படம் என்பதை அறிந்து முதலிலே இக்கட்டுரையை வாசித்த பின் திரையரங்கு சென்றேன். ஆகவே படம் நன்றாகப் புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் அணுகுண்டு போடப்பட்ட காட்சி திரைப்படத்தில் வரும் நேரத்தில், புத்தகம் படித்த போது எனக்குள் தோன்றிய காட்சிகளையே படத்திலும் கற்பனை செய்து கொண்டேன் , ஏனென்றால் எதிர்பார்த்தது போலவே அக்காட்சி திரையில் வரவில்லை.
அப்போது தான் எழுத்தின் வலிமையை உணர்ந்து கொண்டேன்.
இதற்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணன் வலைப் பக்கத்தில் “காட்சிகளின் புதிர் பாதை” என்ற தலைப்பில் நோலனின் “inception” திரைப்படம் பற்றிய விமர்சனம் ஒன்றையும் வாசித்து இருந்தேன், அருமையான கட்டுரை. உலகச் சினிமா பற்றிய அவரது கட்டுரைகளை வாசிக்கையில் மிகவும் வியப்பாக இருக்கிறது. புரிந்து கொள்ள முடியாத கிறிஸ்தபர் நோலன் படத்தை எளிதாகப் புரிந்து கொள்ள வைத்த எஸ்ரா அவர்களுக்கு நன்றி