கனவில் வந்தவர்கள்

ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது

கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பெர்க்மென் படங்களில் தலைப்புகள் வசீகரமானவை. குறிப்பாக இப்படத்தின் தலைப்பான Cries and Whispers பெர்க்மெனின் ஒட்டுமொத்த படைப்புலகிற்கே பொருந்தமான தலைப்பு என்பேன். வேதனை, இயலாமை, தனிமை எனும் முச்சரடுகளைக் கொண்டே அவர் தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

கர்ப்பப் புற்றுநோய் பாதித்து மரணப் படுக்கையிலுள்ள ஆக்னஸ் ஒரு குறியீடே. அவளைச் சந்திக்க வரும் சகோதரிகள் காலத்தினுள் முன்பின்னாகப் பயணிக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் கனவில் ஊடுருவிச் செல்கிறார்கள். வெறுப்பும் ஏக்கமும் வெளிப்படுத்த முடியாத துயரமும் கலந்த அவர்களின் இருப்பும் துயரமும் படத்தில் நுட்பமாக வெளிப்படுகின்றன.

ஆக்னசின் மரணத்துக்குப் பிறகு சகோதரிகளின் உலகம் சரிவு கொள்கிறது. மரணத்தின் அருகில் அமர்ந்து அதை விசாரணை செய்யும் பெர்க்மென் பெண் உடலின் குரலைக் கேட்க வைக்கிறார். அவர்களின் பழங்கால வீடு. அந்த அறைகள். அவர்களின் சந்திப்பு என யாவும் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மூவரும் சலிப்பையும் கோபத்தையும் விரக்தியையும் கொண்டிருக்கிறார்கள். உடலால் சிறைப்பட்டவர்களாகத் தங்களை உணருகிறார்கள். ஆக்னசின் மரணம் அவர்களுக்கு தங்கள் வாழ்வைப் பரிசீலனை செய்து கொள்ளச் செய்கிறது.

உளவியல் நிபுணரைப் போல துயருற்ற பெண்களின் அகத்தை ஆராயும் பெர்க்மென் அதை மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்திருக்கிறார். தனது கேமிரா கோணங்கள். மற்றும் வண்ணங்களின் வழியே காட்சிகளை தீவிரமாக உணர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட்

0Shares
0