கறை படிந்த உறவு.

ராஜீந்தர் சிங் பேதி (Rajinder Singh Bedi) உருது மொழியின் முக்கிய எழுத்தாளர். பேதியின் நாவல் மற்றும் சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. உருதுக் கதைகள் என்ற சிறுகதைத்தொகுப்பில் உங்கள் துயரை எனக்குத் தாருங்கள் என்று ஒரு கதையிருக்கிறது மிக அற்புதமான கதையது. ராஜீந்தர் சிங் பேதியின் பொலிவு இழந்த போர்வை நாவலை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

இந்தி சினிமாவில் அவரது பங்களிப்பு பற்றிச் சதத் ஹசன் மண்டோ விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் அசோகமித்ரனும் ராஜீந்தர் சிங் பேதி வசனம் எழுதிய இந்திப்படங்கள் பற்றி எழுதியிருக்கிறார்.

எட்டு சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு நாடகங்கள் ஒரு குறுநாவல் ஒரு நாவல், மற்றும் இருபத்தியேழு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

லாகூரில் பிறந்த ராஜீந்தர் சிங் பேதி தபால் துறையில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேலையைத் துறந்துவிட்டார். பின்பு ரேடியோவில் செய்தி ஆசிரியர் பணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அங்கும் அதிகக் காலம் வேலை செய்யவில்லை. சொந்தமாக ஒரு பதிப்பகம் துவங்கி நடத்திவந்தார். 1947ல் இந்தியப் பிரிவினை காரணமாக அவரது பதிப்பகம் அடித்து நொறுக்கப்பட்டது. அகதியாக லாகூரை விட்டு வெளியேறி சிம்லாவில் தஞ்சம் புகுந்தார். ஜம்மு ரேடியோ ஸ்டேஷனில் சில காலம் பணியாற்றினார். மும்பைக்கு வந்த பிறகு அவரது வாழ்க்கை திசைமாறியது. தீவிரமாகச் சினிமாவில் ஈடுபட ஆரம்பித்துச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாக மாறினார். அவரே படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். 1949ல் டி.டி.காஸ்யப் உதவியால் badi bahen படத்தில் வசனம் எழுதினார். அதன் வெற்றியைத் தொடர்ந்து பிமல்ராயின் தேவதாஸ், மதுமதி, சோஹ்ராப் மோடியின் மிர்சா காலிப், ரிஷிகேஷ் முகர்ஜியின் அனுராதா போன்ற படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்

1970ல் சஞ்சீவ் குமார் மற்றும் ரெஹானா சுல்தான் நடித்த தஸ்தக் படத்தை இயக்கினார், இதன் இசை மதன் மோகன் அதன் வெற்றியைத் தொடர்ந்து பாகன் (1973), நவாப் சாஹிப் (1978) மற்றும் ஆன்கின் தேகி (1978). ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்:

1954 ஆம் ஆண்டில், அமர்குமார், பால்ராஜ் சஹானி, கீதா பாலியுடன் சேர்ந்து சினி கூட்டுறவு என்ற புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 1955 ஆம் ஆண்டில், அதன் முதல் படமான கரம் கோட் உருவாக்கப்பட்டது. பால்ராஜ் சாஹ்னி மற்றும் நிருபா ராய் நடித்த இந்தப்படம் பேதியின் சிறுகதை கரம் கோட்டினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது

Ek Chadar Maili Si என்ற நாவல் தான் பொலிவு இழந்த போர்வையாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவலும் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், பஞ்சாபி கூட்டுக்குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளையே கதை விவரிக்கிறது. குதிரைவண்டி ஒட்டியான திலோகா, அவனது மனைவி ராணி எனும் ரானோ அவர்களுக்குள் ஏற்படும் சண்டை அவனது பிள்ளைகள் என நாவல் பஞ்சாபி குடும்பம் ஒன்றின் கதையை விவரிக்கத் துவங்குகிறது.. அருகிலுள்ள மலையிலிருந்த வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் பயணிகளைக் குதிரைவண்டியில் ஏற்றிக் கொண்டு போய்விடுவதன் வழியே சம்பாதிக்கிறான் திலோகா. அவன் ஒரு குடிகாரன். முரடன். பெண் சுகத்திற்காக ஏங்குகிறவன்.

அவன் மனைவி ரானோ இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாள். அவன் தனக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமெனில் அவன் விரும்பும் போது அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவனைத் தவிக்க விட்டுக் காத்திருந்து முடிவில் கருணையளிப்பது போலப் படுக்கையைப் பகிர வேண்டும் என்று நினைக்கிறாள்.

காமத்தின் தவிப்பில் திலோகா அவளது கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறான் ஆனால் குடித்துவிட்டாலோ, அவளை அடிப்பதும் உதைப்பதுமாக மாறிவிடுகிறான். ரானோ உறுதியான பெண். அவள் கணவனுடன் சண்டை போடுவதன் வழியே தான் தன் அன்பைப் பகிர்ந்து கொள்கிறாள். உரிமை தானே சண்டை போட வைக்கிறது என்கிறாள்.

நான்கு குழந்தைகளின் தாயாகிய ரானோ மாமியாரின் அவமானங்களையும் அவதூறுகளையும் அனுபவித்து, தனது மூத்த மகள் பாரியின் கோபத்துக்குப் பயந்து வாழுகிறாள். எதிர்பாராத விதமாக ஒரு நாள் திலோகா கொலை செய்யப்படுகிறான். அதற்குக் காரணம் அவன் ஜமீன்தார்களுக்குத் தேவையான இளம்பெண்களைச் சப்ளை செய்பவன். அப்படி மலைக்கோவிலுக்குப் போன ஒரு இளம் பெண்ணை மடக்கி ஜமீன்தாருக்காகக் கொண்டு போகிறான். அவன் கொண்டுவந்த பெண் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுகிறாள். இதனால் ஆத்திரமான அந்தப் பெண்ணின் சகோதரன் கோபத்தில் திலோகாவை கொலை செய்கிறான். காவலர்களால் ஜமீன்தார் கைது செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் குடும்ப வழக்கப்படி அண்ணன் இறந்து போனால் அவன் மனைவியைத் தம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தார் கூறுகிறார்கள். அப்படி நடக்காவிட்டால் அவள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாள். அவளது மகளைத் துரத்திவிடுவார்கள் என்ற நிலை உருவாகிறது. இதற்குப் பயந்து ரானோ திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

திலோகாவின் தம்பி மங்கலுக்கு இதை ஏற்கமுடியவில்லை. அவன் ரானோவை தாயைப் போல நினைக்கிறான். ஆகவே திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுக்கிறான். அத்தோடு அவனுக்கு ஒரு முஸ்லீம் பெண் மீது ஈர்ப்பு இருக்கிறது.

மங்கலை மிரட்டிக் கட்டாயப்படுத்தி ரானோவிற்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அவனால் ரானோவின் கணவனாக வாழ முடியவில்லை. ஒரு பெண்ணிற்குப் போர்வை தான் அவளது கணவன். ஆகவே அதன் அடையாளமாக ஒரு போர்வையை ரானோ தலைமீது போர்த்தச் சொல்கிறார்கள். கறைபடிந்த அந்தப் போர்வை தான் நாவலின் குறியீடு.

ரானோவை திருமணம் செய்து கொண்ட போதும் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. அவளும் அதைப் புரிந்து கொள்கிறாள். உலகிற்காக மட்டும் கணவன் மனைவி போல நடிக்கிறார்கள்.

ஒரு நாள் போதையில் ரானோவை நெருங்குகிறான் மங்கல். தன் கணவனை அனுமதிக்காதது போலவே அவனையும் அடித்துவிரட்டுகிறாள். ஆனால் அவன் பலவந்தமாக அவளை அடைகிறான். அந்த உறவு அவளுக்குப் பிடித்தேயிருக்கிறது. அவர்களுக்குள் கலப்பு நடந்தபிறகு குடும்ப உறவு எளிதாகிவிடுகிறது. இப்போது அவனும் ரானோவும் தம்பதிகளாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்.

நாவல் அத்தோடு முடிந்துவிடுவதில்லை. மாறாகத் திலோகா செய்த தவறுக்காக அவனைக் கொன்றவன் ரானோவின் மகளைத் திருமணம் செய்து கொள்ள முனைகிறான்.

ரானோ மறக்கமுடியாத கதாபாத்திரம். அவளது கோபம் சண்டை இயலாமை தவிப்பு என அத்தனையும் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபிக் குடும்பத்தினுள் உள்ள விசித்திரமான இந்தப் பழக்கம் மகாபாரதத்தை நினைவுபடுத்துகிறது. குடும்பம் தான் உலகம் என நினைக்கிறாள் ரானோ. அவள் படிக்காதவள். உலகம் அறியாதவள். தன் மகளைத் தான் விரும்பும் படியான இடத்தில் திருமணம் செய்ய நினைக்கிறாள். அனுபவம் தான் அவளை வழிநடத்துகிறது. தான் தூக்கி வளர்த்த மங்கலை தான் எப்படித் திருமணம் செய்து கொள்வது என்று தடுமாறுகிறாள். பின்பு குடும்பத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள்.

ரானோவின் மாமியாருக்கு அவளைப் பிடிக்கவேயில்லை. அவள் தொடர்ந்து குற்றம் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். நோயாளியான அவளது மாமனாரால் எவ்விதமாகவும் உதவ முடியவில்லை.

ஒருவகையில் இந்த மாமியார் தான் ரானோவின் திருமணத்திற்கு முக்கியக் காரணம். அவள் ரானோவை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்தால் தான் தன் பேத்தியின் திருமணத்தைத் தான் விரும்பிய படி நடத்த முடியும் என்று நினைக்கிறாள். ஆகவே மறுதிருமணத்தைக் கட்டாயப்படுத்துகிறாள்.

மலை உயரத்தில் கோவில் கட்டி வழிபடப்படும் வைஷ்ணவ தேவி ஒரு புறம் மறுபுறம் குடும்ப சுமைகளை ஏற்று திணறும் ரானோ மறுபக்கம். இருவரும் பெண் தான். இந்தியச் சமூகம் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு முக்கியமான சாட்சியம் என்கிறார் மனநல ஆய்வாளர் சுதிர்காகர். அவர் இந்த நாவலையும் கிருஷ்ண சோப்தியின் மித்ரவந்தி நாவலையும் ஒப்பிட்டுச் சிறப்பான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இந்திய நாவல்களில் திருமண உறவு பற்றி எழுதப்பட்டதே அதிகம். இந்தியக் குடும்பத்தின் மையமே திருமணம் தான். மகன் அல்லது மகளின் திருமணம். வேறு மதம் ஜாதியை சேர்ந்த திருமணம். மரபான கூட்டுக்குடும்பத்தில் திருமண உறவால் ஏற்படும் சிக்கல். பொருந்தாத திருமணங்கள் என திருமணத்தை மையமாகக் கொண்டு ஏராளமாக நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்களாக கொண்டாடப்படும் தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் இருவரும் வீழ்ச்சியடைந்த திருமண உறவு பற்றி அதிகம் எழுதியிருக்கிறார்கள். அன்னாகரீனனா திருமண வாழ்வின் சலிப்பில் தான் வெறுமையை அடைகிறாள். விரான்ஸ்கியின் காதல் அவளை மீட்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகிகளுக்கும் பொருந்தாத திருமணமே முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்த நாவலை ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

125 பக்கமே உள்ள சிறிய நாவல். இன்றளவும் உருது இலக்கியத்தின் கிளாசிக்காகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

•••

0Shares
0