காதல் மீதான பெருங்காதல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்)

ந. பிரியா சபாபதி மதுரை.

மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாய் மாறுபட்ட மனிதராகக் காணப்படுகிறார். சோபியாவின் பார்வை வழியாக நாம் அவரை அன்பில்லாத மனிதராகவே எண்ணுவோம். ஆனால், அக்ஸினியாவின் பார்வை வழியே டால்ஸ்டாயைக் காணும்பொழுது, நாம் பிறிதொரு டால்ஸ்டாயைத்தான் கண்டடைகிறோம்.

டால்ஸ்டாய் அன்பிற்கு ஏங்கிய மனிதர் மட்டும் அல்ல; அன்பு நிறைந்தவரும் கூட. அக்ஸினியா மீது அவருக்குக் காதலைத் தாண்டிய தீராத அன்பு இருந்தது. காமம் கொண்ட காதலாக இருந்திருந்தால், அது என்றோ மறைந்திருக்கும். ஆனால், டால்ஸ்டாய் – அக்ஸின்யா ஆகியோருக்கு இடைய இருந்த காதல், ‘காதல் மீதான பெருங்காதல்’. அது, வற்றாத நீரூற்றுப் போன்றது

டால்ஸ்டாய்க்குத் தன் மனைவி சோபியா மீது தீராக் காதல் உண்டு. அதை அவர் பலவழிகளில் உணர்த்தியிருந்தாலும் சோபியாவின் மனம் ஊஞ்சல் போல முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டே இருக்கிறது. பெண்களின் மனத்தினை மட்டுமல்ல, பல நேரங்களில் ஆண்களின் மனத்தினையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதுதான்.

டால்ஸ்டாயின் எண்ணம் முழுவதும் சமுதாய முன்னேற்றத்தில் குவிந்துள்ளது. இதனாலேயே டால்ஸ்டாய் பலரின் எதிர்ப்புகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் சந்திக்க நேரிடுகிறது. ஆயிரம் கைக்கொண்டு ஆதவனை மறைக்க இயலுமா?. இயலாது. அது போலத்தான் டால்ஸ்டாயின் ஆளுமையும். அவர் கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருக்கிறார். அவரின் ஆளுமை யாராலும் மறைக்க இயலாதவாறு சுடர்ந்து கொண்டே இருக்கிறது.

இலக்கியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும். ஆனால், டால்ஸ்டாயின் கண்ணோட்டம் அனைவரையும் விட்டு வெகு தொலைவில் உள்ளது. அதனால் , ‘பிறருடன் முரண்பட்டவரோ, இவர்? என எண்ண வேண்டாம். இது முரண் அல்ல; இலக்கியத்தைப் பற்றிய சரியான உற்றுநோக்கல்..

‘எழுத்துப்பணியை மட்டும் தன் பணி’ என எண்ணாமல், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களுக்காகப் பல உதவிகள் புரிந்தார் டால்ஸ்டாய். இதனால், அரசாங்கம் அவரைக் கண்டிக்கிறது. அரசினை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார். எதற்கும் அஞ்சாமல் செயல்படுகிறார்.

நாவலின் கடைசியில் டால்ஸ்டாய் அக்ஸின்யாவின் சமாதியைத் தேடிச் செல்கிறார்.

டால்ஸ்டாய் தன்னுடைய கையிலிருந்த மஞ்சள் சிவப்புப் பூக்களை அக்ஸின்யாவின் புதைமேட்டின் மீது வைத்தார். அக்ஸின்யாவிடம் எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக அந்தப் புதைமேட்டினைப் பார்த்தபடியே இருந்தார்.

இந்த இடத்தில் இந்த நாவலின் தலைப்புப் பொருத்தமாகிவிடுகிறது. டால்ஸ்டாய் மண்டியிடுகிறார். ஆனால், நேரடியாக அல்ல; தன் மனத்தால். அதுவும் எல்லோரும் பார்க்கும்படியாக அல்ல; மறைமுகமாகத்தான். மறைந்துவிட்ட அக்ஸின்யாவிடம் அவரால் மறைமுகமாகத்தானே மண்டியிட முடியும்?

என் அகத்திற்கு ஒரு ‘குரு’ என இந்நாவலில் ஒருவர் உள்ளார். அவரை ‘முட்டாள் டிமிட்ரி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். ஆனால், அவர் ‘முட்டாள்’ அல்லர். அவர் கூறும் ஒவ்வொரு சொல்லும் அகவிடுதலையைத் தரக் கூடியதாகும். ‘அகவிடுதலையை விரும்பாதவர்களே அவரை ‘முட்டாள்’ என்று அழைத்தனர்’ என்றுதான் நான் எண்ணுகிறேன். அவருக்கும் தியோஃபிகான நட்பு போற்றத்தகுந்ததாகும். அவர் திமோஃபியின் மனம் பிறழும் போதெல்லாம் அந்த மனத்தினை இறுக்கிப் பிடித்து, மீண்டும் திமோஃபியிக்குள்ளேயே கொண்டு சேர்க்கிறார்.

தியோஃபிக்குத் தன் தந்தையைப் பற்றிய எண்ணம் அவன் மனத்திற்குள்ளும் சொல்லுக்குள்ளும் அலைக்கழிக்கும்போது, டிமிட்ரிதான் தன் சொல்லின் வழியாக அவனுக்கு வழி காட்டுகிறார். காலம் பல நேரங்களின் அன்பானவர்களை எப்போதும் நம்முடன் இருக்கச் செய்வதில்லை. டிமிட்ரியை காலம் அழைத்துச் சென்று விடுகிறது.

சோபியாவை டால்ஸ்டாயின் மனைவியாகக் காணும்பொழுது கணவன் மீது ஐயம்கொண்ட பெண்ணாகவே நமக்குத் தோன்றும். ஆனால், அவர் அதைத் தாண்டி மனவலிமை கொண்ட பெண்ணாகவே தோன்றுகிறார். டால்ஸ்டாயின் இத்தகைய மிகப் பெரிய வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாகவே இருந்துள்ளார். டால்ஸ்டாயின் எழுத்துக்கு எப்பொழுதும் தோள் கொடுத்துள்ளார்.

இலக்கியவாதிகளுக்குப் பெரும்பாலும் தன்னையும் தன் எழுத்தையும் நேசிக்கும் காதலி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், மனைவி கிடைக்க வாய்ப்பில்லை. ‘காதலி’ என்பது, ஓர் எல்லை. காதலிக்கும் பொழுது குடும்பம் நடத்துவதில்லை. மனைவியானவள் குடும்பம் நடத்த வேண்டும். அவரையும் அவர் எழுத்தையும் நேசிக்கும் ‘அன்புள்ளம்’ டால்ஸ்டாக்கு ஒருசேரக் கிடைத்துள்ளது. சோபியா கோபக்காரராகவே நம் பார்வைக்குத் தோன்றினாலும் அவர் தன் கணவர் மீதும் தன் கணவரின் எழுத்தின் மீதும் ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்.

தன் கணவரையும் தன் கணவரின் எழுத்தையும் நேசிக்கும் மனைவி எத்தனை எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளது? அதே போலத் தன் மனைவியையும் தன் மனைவியின் எழுத்தையும் நேசிக்கும் கணவர் எத்தனை பெண் எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளது? அந்த வகையில், டால்ஸ்டாய் கொடுத்துவைத்தவர்; சோபியா போற்றுதற்குரியவர்.

‘ஒருவருடைய முழுமையான அன்பு நமக்குக் கிடைத்த பின்போ அல்லது முழுமையான அன்பினை ஒருவருக்குக் கொடுத்த பிறகோ அந்த அன்புள்ளம் நம்மை விட்டு வேறெங்கும் செல்லக் கூடாது’ என எண்ணுவது மனித இயல்பு. இந்த இயல்புதான் சோபியாவிடமும் உள்ளது.

இந்நாவல், ‘பிறரது துயர்களைத் தன்னுடைய துயராக எண்ணுதல் மட்டுமே போதுமானது அல்ல; அவர்களின் துயர்களை நீக்க ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

தன் எழுத்தின் வழியாக டால்ஸ்டாய் பற்றிய அழகான கண்ணோட்டத்தை அளித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான நன்றி.

– – –

0Shares
0