குறுங்கதை- 8 கனவின் நடனம்

அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள்.

விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“.

ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“.

ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“.

வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“.

ஒரு சிறுமி சொன்னாள் “அடிவானில் பறக்கும் சிவப்புப் பட்டம் போல ஆடினேன்“.

சிறையில் அடைபட்ட ஒரு கைதி சொன்னான் “எனது நடனம் உணவுத்தட்டை சுற்றும் ஈ போன்றிருந்தது“.

மதபோதகர் சொன்னார் “கல்லறை மீது பெய்யும் மழைத்துளி போலிருந்தது எனது நடனம்“.

திருடன் சொன்னான் “சாவித்துளை வழியே நுழையும் வெளிச்சம் போலிருந்தது எனது ஆட்டம்“.

மருத்துவர் சொன்னார் “கர்ப்பிணிப் பெண்ணின் நாடித்துடிப்புப் போன்றிருந்தது எனது நடனம்“.

விளையாட்டு ஆசிரியர் சொன்னார் “உதைக்கப்பட்ட கால்பந்தைப் போல எழுவதும் விழுவதுமாக ஆடினேன்“.

தத்துவவாதி ஒருவர் சொன்னார் “பின்னோக்கி நகரும் கடிகார முள் போலிருந்தது எனது நடனம்“.

கவிஞன் சொன்னான் “ஊதுபத்தியின் புகைபோல அலைவு கொண்டிருந்தது எனது நடனம்“.

முடிவாக ஒரு கிழவி சொன்னாள். “நடனமாடியதே தெரியவில்லை. தண்ணீருக்குள் மூத்திரம் பெய்தது போன்றிருந்தது“.

எல்லோரும் ஒன்றை ஒப்புக் கொண்டார்கள்

“நடனத்தை எப்படிச் சொல்லால் உணர்த்த முடியும்“.

••

0Shares
0