தஸ்தாயெவ்ஸ்கியினைப் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன். இவரது பார்வையும் புரிதலும் அற்புதமானது. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும்.

பெங்களூரில் பணியாற்றிவரும் சர்வோத்தமன் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.
http://sarwothaman.blogspot.com/

தற்போது முறையிட ஒரு கடவுள் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மணல்வீடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். இன்னும் சில கட்டுரைகள் எழுதிய பின்பு தொகுக்க இருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார்.
நேற்று புத்தகக் கண்காட்சியில் அவரை நேரில் பார்த்தபோது அந்த வேண்டுகோளை மறுபடியும் நினைவூட்ட நினைத்தேன். கூட்டம் அதிகமிருந்த காரணத்தால் பேசிக் கொள்ள இயலவில்லை.
சர்வோத்தமன் எவரது அங்கீகாரம் பற்றியும் கவலையின்றித் தொடர்ந்து தனது படைப்புச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரைப் போன்ற தனிக்குரல்களை நாம் கொண்டாட வேண்டும்.
புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கும் சர்வோத்தமனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்