தேனுகா
••
திருப்பரங்குற்றத்து முருகப்பெருமானை வழிபடும் மக்கள் அதன் அருகில் உள்ள சித்திரக் கூடத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்காமல் வருவதில்லை. ரதி, மன்மதன், பூனை உருவம் கொண்டு ஓடும் இந்திரன், கௌதம முனிவன் முதலிய ஓவியங்களை கண்டவர்கள் இது என்ன, அது என்ன, இவர் யார், அவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேட்டு மகிழ்வுரும் காட்சியை நப்பண்ணனார் என்னும் புலவர் கூறுகிறார்.

சித்திரை மாடத்து ஓவியங்களை பார்த்துக் கொண்டே உயிர் நீத்த பாண்டிய மன்னனை, ‘சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் நன்மாறன்’ என்று தமிழின ஓவிய மரபை கூறும் புறனானூற்று வரிகளில் நம் மனம் தோயாமல் எப்படி இருக்க முடியும்.
முதலாம் ராஜராஜன் தான் உருவாக்கிய பிரமாண்டமான தஞ்சை பெரிய கோயிலில், ஆடல் மகளிரின் முத்திரை அபிநயத்தோடு அற்புத ஆட்டங்களை, ஓவியங்களாக வரைந்துள்ளார். சிவபாதசேகரனான ராஜராஜன் சிவனின் வியத்தகு திருவிளையாடல்களின் பல்வேறு காட்சிகளை தத்ரூபமான சுவரோவியங்களாகினார். அவை இன்று சிதிலம் அடைந்த நிலையிலும் காணக்கிடைக்காத காட்சிகளாகத் தோன்றுகிறன.

சுவாமி வீதியுலாவின் போது ஆடல் மகளிரின் அபிநயத்தோடுதான் வெளிவரவேண்டும் எனும் ராஜராஜனின் விருப்பம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நிறைவேறியுள்ளது. கும்பகோணத்தை அடுத்த திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரத்து கோயில் ஓவியங்கள் இன்று சாட்சியாக உள்ளன. திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடிய இக்கோயிலில் வீற்றிருக்கும் ஆடல்வல்லான் ஐம்பொன் சிலை பிரமாண்டத்திலும், பேரழகிலும் புகழ்பெற்ற சிற்பமாக விளங்குகிறது. இக்கோயிலின் விதானம், மற்றும் சுவரில் தோற்றும் ஓவியங்கள் வரலாற்று சிறப்புமிக்கவையாகும். ஆங்கில அதிகாரிகளை மாலையிட்டு வரவேற்க ஆடல் மகளிரும், நட்டுவாங்க மேதைகளும், இசை விற்பன்னர்கள் குழாமோடு வரவேற்கும் இக்காட்சி அரிதான ஒன்றாகும்.

இக்கோயிலின் உற்சவ மூர்த்தியான உமாமகேஸ்வரர் சுவாமி, பத்து நாட்கள் வீதியுலாவரும்போது இடும்பன், இடும்பி, யானை, சிங்கம், அன்னபட்சி, ஆட்டுகடா போன்ற வாகனங்களில் உலாவருகிறார். ருக்மணி எனும் ஆடல் மகளிர் அழகிய ஜடை உடை அலங்காரத்துடன் வீதியில் நடனமாடுகிறார், அதற்கு சின்னபக்கிரி குழுவினரின் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்த்துகின்றனர்.
அதனைக் கண்டுகளித்து இன்புரும் சிவ வைணவ பேதமற்ற பெருமக்களையும் காட்சிப்படுத்துகிறது இச்சுவரோவியம். சிலப்பதிகாரத்திலிருந்து சோழர்காலத்துக்கு பின் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை ஆடற்கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டதை காட்டும் வரலாற்று புகழ்மிக்க சுவரோவியமாகும்.

ஒரு ஓவியத்தில் வெவ்வேறு உருவங்கள், விதவிதமான வடிவங்கள், கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களால், மேநாட்டவரும் வியக்கும் உருவங்களின் கட்டமைப்பு (composition) அழகோடு தமிழகமெங்கும் காணப்படும் இவ்வோவிய மரபு, பட்டி விக்ரமாதிதன் கதை புத்தகத்தின் மர அச்சு ஓவியங்களாகவும், தற்போது கலங்காரி என்னும் துணி ஓவியங்களாக சிக்க நாயக்கன்பேட்டையில் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது
நன்றி
தேனுகா பக்கங்கள்