டால்ஸ்டாயின் காலடிச்சப்தம்

யூ.ஜி.அருண்பிரசாத்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த விமர்சனம்.

••

எஸ்ராவின் இந்த நாவலை டால்ஸ்டாயின் பிறந்த செப்டம்பர் மாதத்தில் அவரது நினைவாக வாசிக்கத் துவங்கினேன்.

இந்த நாவல் மூலம் எஸ்ரா நம்மை ரஷ்யா அழைத்துச் செல்கிறார். பனி படர்ந்த ரஸ்யாவில் நான் பார்த்த காட்சிகள் வியப்பளிக்கின்றன . டால்ஸ்டாயிக்கு சொந்தமான யஸ்னயா போல்னயா பண்ணை, ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுள்ள எல்ம் மரம், டால்ஸ்டாயின் பெரிய குடும்பம், அங்குள்ள பண்ணையில் வேலை செய்பவர்கள், வசந்த காலத்தில் அந்தப் பண்ணைக்கு வருகை தரும் ஜிப்ஸிகள், அங்குள்ள ஆப்பிள் தோட்டம், வோரன்கா ஆறு, அடர்ந்த கிரெளன்வுட் காடு என வேறு ஒரு உலகத்திற்குள் பயணித்தேன்..

ஒரு நாவலின் வழியே அந்தக் கால ரஷ்யாவிற்குள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் எஸ்.ரா. அது தான் நாவலின் சிறப்பு.

எழுத்தின் வழியே வாசகன் நிஜத்தில் தான் அறியாத உலகத்திற்குள் கற்பனை வழியே பயணிக்க முடியும் என்றால் அது எழுத்தாளரால் மட்டுமே சாத்தியம். அதுதான் எஸ்ரா அவர்களின் எழுத்தின் வல்லமை.

மண்டியிடுங்கள் தந்தை நாவல் வழியே நான் டால்ஸ்டாயின் காலடிச்சப்தத்தைக் கேட்டேன். அவரது சொந்த உலகத்தைப் பார்த்தேன் , டால்ஸ்டாய் காலத்து ரஷ்யாவை தெரிந்து கொண்டேன் , அவர் சமகாலத்து எழுத்தாளர்களை அறிந்தேன் , ரஷ்யாவின் இரவு பகலை மட்டுமின்றி டால்ஸ்டாய் காலத்தில் ஏற்பட்ட ரஷ்ய பஞ்சத்தினைக் கூட அறிந்து கொண்டேன்.

நாவலில் வரும் திமோபி வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் பிறகு திரும்பி வருகிறான் . வீட்டை விட்டு வெளியேறியவன் வேறு உலகத்திற்குச் சென்று வந்தவன் முற்றிலும் மாறி விடுகிறான் புதிய மனிதனாக மாறிய அவன் பேச்சில் செயலில் மாற்றம் தெரிகிறது .

இந்த நாவலை வாசித்து டால்ஸ்டாய் வாழ்க்கை உலகத்திற்குச் சென்று வரும் வாசகனாகிய நானும் புது அனுபவம் கொள்கிறேன். என்னையும் திமோபி போலவே உணருகிறேன்.

மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி சென்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது . எழுத்தின் வழியே இந்த நெருக்கத்தை ஏற்படுத்திய எஸ்ரா அவர்களுக்கு நன்றி

0Shares
0