டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள்

தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்திவரும் பொன். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் மற்றும் ராம்குமார் இணைந்து நூலக மனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்

இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறார்கள். பொது நூலகத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

நேற்று ரஷ்ய தூதரகம் சார்பில் டெல்லியில் டால்ஸ்டாயின் 195வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்தியை டிவியில் கண்டேன். சென்னையில் அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

நூலக மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் நாளை நகர் முழுவதும் டால்ஸ்டாய் பிறந்த நாளுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டி அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்

நேற்று புத்தக வாசிப்புச் சம்பந்தமான வாசக அட்டையைத் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.இதற்குத் துணை நின்ற நூலகர் ராம் சங்கர் அவர்களுக்கு நன்றி

தூத்துக்குடியிலுள்ள ஒரு தேநீர் கடையிலும் வாசிப்பு அட்டை ஒட்டப்பட்டிருக்கிறது. .

பந்தலக்குடி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெயபால் அவர்கள் தலைமையில் லியோ டால்ஸ்டாய் பற்றிய கட்டுரை போட்டி நடந்துள்ளது. கட்டுரைகளை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.

அதுபோல மல்லாங்கிணறு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராம்குமார் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை நடத்தி பரிசு வழங்கியிருக்கிறார்.

லியோ டால்ஸ்டாயின் பிறந்த நாளைக் கொண்டாடும் இவர்களை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். இலக்கிய உலகில் கூட இது போன்ற நிகழ்வு நடப்பது குறைந்து வரும் சூழலில் இவர்களின் முன்னெடுப்பு பாராட்டிற்குரியது. பொன். மாரியப்பன், ஜெயபால். ராம்குமார், அருண்பிரசாத் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

0Shares
0