தனிக்குரல்

உண்மையைச் சொல்லும் திரைப்படங்களை மட்டுமே நான் எடுக்க விரும்புகிறேன். அதுவும். ஆழமான உண்மைகளை, கசப்பான உண்மைகளைக் கூடப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது என்கிறார் உஸ்மான் செம்பேன்.

ஆப்பிரிக்கச் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் உஸ்மான் செம்பேன் குறித்த ஆவணப்படம் “Sembene!”

2015ல் வெளியான இப்படத்தை Samba Gadjigo மற்றும் Jason Silverman’ இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஆப்பிரிக்கா முழுவதும் திரையிடப்பட்டிருக்கிறது

செனகலில் 1980 முதல் இப்போது வரை 90% திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம் என்கிறார்கள்.

செம்பேனின் “‘Moolaade’ “Xala.” “Mandabi” போன்ற திரைப்படங்களை உலகத் திரைப்படவிழாக்களில் பார்த்திருக்கிறேன்.

செம்பேன் பிரான்ஸ் தொழிற்சங்க இயக்கத்தின் உதவியால் சோவியத் ரஷ்யாவில் திரைக்கலை பயின்றவர். அவர் எப்படி ஆப்பிரிக்காவின் முக்கிய இயக்குநராக உருவானார் என்பதை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்

அவரது வாழ்வைச் சிறிய கதைகள் போலத் தனித்தனி அத்தியாயங்களின் வழியே அழகாக விவரிக்கிறார்கள்,.

செம்பேனின் வீட்டைத் தேடிச் செல்லும் இளம் இயக்குநரின் பார்வையில் படம் துவங்குகிறது. செம்பேன் மறைவிற்குப் பிறகு திறக்கப்படாத அவரது அறையின் கதவுகளைத் திறந்து உள்ளே செல்கிறார்கள். ஒரே தூசியும் குப்பையும் அடைந்துகிடக்கிறது. கைவிடப்பட்ட நிலையில் படச்சுருள்கள் காணப்படுகின்றன. செம்பேனின் திரைப்படச்சுருள்களை வெளியே எடுத்து வந்து சுத்தம் செய்கிறார்கள். அந்தக் காட்சி எவ்வளவு சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் காலம் இப்படிதான் நடத்துகிறது என்ற வேதனையினை நம் மனதில் ஏற்படுத்துகிறது

அவர் வாழ்ந்த போது செம்பேனின் இல்லம் ஒரு பண்பாட்டு மையம் போலச் செயல்பட்டு வந்தது. இப்போது அது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

செம்பேனின் மகன் மற்றும் அவரது திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் வழியே அவரது திரைப்பட உருவாக்கம் மற்றும் சொந்தவாழ்க்கை குறித்து விவரிக்கப்படுகிறது

செம்பேன் எழுதிய முதல் நாவல் மற்றும் அவரது இலக்கியப்பணி குறித்தும் படத்தில் பேசுகிறார்கள். தொல்குடித் தழும்புகள் என்ற தலைப்பில் செம்பேனின் சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன

எழுதப்பட்ட வார்த்தைகளை விடவும் சினிமா மிகவும் வலிமையுள்ள சாதனம் என்பதைச் செம்பேன் நன்றாக உணர்ந்திருந்தார். குறிப்பாகப் படிப்பறிவு இல்லாத மக்களை விழிப்புணர்வு கொள்ள வைப்பதற்குச் சினிமா பயன்படும் என்று நம்பினார்.

1961 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் திரைக்கலை படித்த பின்பு கார்க்கி ஸ்டுடியோவில் சில காலம் பணியாற்றினார். பின்பு. செனகனுக்குத் திரும்பி இரண்டு குறும்படங்களை இயக்கிய செம்பேன் தனது நாவலை மையமாகக் கொண்டு பிளாக் கேர்ள் படத்தை உருவாக்கினார். இப்படம். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றதுடன் உயரிய விருதுகளையும் வென்றது

ஃபிரெஞ்சு புதிய அலை திரைப்படங்களின் பாதிப்பில் பிரான்சிற்கு வீட்டுவேலை செய்வதற்கு அழைத்துவரப்பட்ட கறுப்பினப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை உருவாக்கினார். இப்படம் ஆவணப்படம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாகத் திரைப்படவிழாக்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

செம்பேன் மக்களின் பேச்சுவழக்கிலே Mandabi என்ற அடுத்த படத்தை வண்ணத்தில் உருவாக்கினார். இதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் காலனிய எதிர்ப்புக் காரணமாகத் தனது படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சொந்த வீட்டினை அடமானம் வைத்துப் படங்களை உருவாக்கியிருக்கிறார். புறக்கணிக்கப்பட்ட கலைஞராக வாழ்ந்த அவரது இறுதி நாட்களையும் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது.

சினிமாவில் நாம் யாருடைய கதைகளைச் சொல்கிறோம் என்பது முக்கியமானது. ஆப்பிரிக்க மக்களின் பண்பாடு மற்றும் உண்மையான அரசியல் பிரச்சனைகள் நெருக்கடிகளைத் திரையில் பேச வேண்டும் என்பதே எனது நோக்கம். உலகம் ஆப்பிரிக்க மக்களைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். அதற்காகவே நான் திரைப்படங்களை உருவாக்குகிறேன் என்கிறார் செம்பேன்.

செம்பேனின் திரைப்படங்கள் ஆப்பிரிக்க மக்களின் வாழ்வை உண்மையாகப் பிரதிபலித்தன. அவருக்குப் பின்வந்த இயக்குநர்கள் அந்த மரபின் அடுத்த கண்ணியாகத் தங்கள் படங்களை உருவாக்கினார்கள். சர்வதேச அரங்கில் ஆப்பிரிக்கச் சினிமா தனித்துக் கவனிக்கப்பட்டதற்கு செம்பேன் முக்கியமான காரணியாக இருந்தார்.

அவரது முக்கியமான வாசகம்.

“If Africans lose their stories, Africa will die”. இது தமிழ்ச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியதே.

.

0Shares
0