நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடந்தேறியது.
அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள். தபால் நிலைய ஊழியர்கள், தபால்தலை சேமிப்பாளர்கள், ஊடக நண்பர்கள், என அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வை நன்றாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் அந்திமழை அசோகன் உள்ளிட்ட எனது விருப்பத்திற்குரிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.
தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலை தபால்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆகவே அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.
நிகழ்வில் சென்னையின் பல்வேறு அஞ்சலகங்களில் பணியாற்றும் தபால்காரர்களுக்கு நூலை வணங்கினோம். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.
இதே நிகழ்வில் சென்னை பொதுதபால் அலுவலகத்தின் நிரந்தர ஓவிய தபால்முத்திரை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அதில் தபால்தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ரோலாண்ட்ஸ் நெல்சன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சென்னை மண்டல தபால்துறைத் தலைவர் ஜி. நடராசன் நிகழ்விற்குத் தலைமையேற்று சிறப்பான உரையை வழங்கினார். சென்னை மண்டல தபால்துறை இயக்குநர் எம்.மனோஜ், முதன்மை தபால்துறை அதிகாரி சுவாதி மதுரிமா, உதவி இயக்குநர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தபால்துறையின் சார்பில் இப்படி ஒரு விழா நடத்தி என்னைக் கௌரவப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தேன்.





