மலையாள எழுத்தாளர் யு.கே. குமரன் எழுதிய இருட்டில் தெரியும் கண்கள் என்ற சிறுகதையில் தன்மீது விழும் மழைத்துளியால் திடுக்கிட்டுப் போகிறான் ஒரு திருடன்.

திருடனின் வாழ்க்கையை விவரிக்கும் அந்தக் கதையில் “இப்போதெல்லாம் யாரும் விலைமதிப்பு மிக்கப் பொருட்களை வீட்டில் வைப்பதில்லை. திருடச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு திருடனால் இங்குக் கண்ணியமான வாழ்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது“ என்கிறான் அத் திருடன்
பல நாட்களாகத் திருடச் செல்லாத திருடன் ஒரு இரவு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு மழைத்துளி அவனது முகத்தில் விழுகிறது. அது வரவிருக்கும் மழைக்காலத்தை நினைவுபடுத்துகிறது.
மழை அவனுக்கெனச் சொந்த வீடில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. அடுத்த மழைக்காலத்திற்குள் தனக்கென சிறிய குடிசை வீடாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் முன்பு நினைத்திருந்தான். அந்த முடிவை மழைத்துளி நினைவுபடுத்துகிறது
மழைக்காலம் வருவதற்குள் தான் ஒரு புதிய இடத்தில் வாழத் தொடங்க வேண்டும் என்று திருடன் நினைக்கிறான். ஆனால் அது எளிதான விஷயமில்லை.

பழைய பூட்டுகளைத் திறப்பது எளிது. இன்றைய பூட்டுகளை எளிதாகத் திறக்க முடியாது. உடைப்பதும் கடினம். இதனால் வீடுகளில் திருடுவது மிகவும் கடினமாகிவிட்டது என்கிறான் திருடன். அத்தோடு விலைமதிப்புமிக்கப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற முதன்மைப் பாடத்தை அனைவரும் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்கிறான் திருடன்
புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பல வீடுகள் பூட்டியே கிடப்பதைக் காணுகிறான். அவற்றின் உரிமையாளர்கள் துபாய் வாசிகள். அல்லது ஏதோ வெளிநாட்டில் வசிப்பவர்கள். பூட்டிய வீட்டில் மதிப்புமிக்க எந்தப் பொருளும் இருக்காது. ஒரு வீட்டில் நீண்ட காலம் வசிக்கும் போது தான் அதன் மீது பற்று ஏற்படுகிறது. வீடு நினைவின் பகுதியாக மாறுகிறது. ஆனால் இப்படிப் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகள் சவப்பெட்டியை நினைவுபடுத்துகின்றன என்கிறான்.
சில வீடுகளில் விளக்கு எரிவது தெரிகிறது. வயதானவர்கள் விளக்கை அணைக்க மறந்து உறங்கிவிட்டார்கள். அல்லது பாதுகாப்பிற்காக எரிய விட்டிருக்கிறார்கள். இது போன்று வயதானவர்கள் தனியே வசிக்கும் வீட்டில் திருடுவதற்கு ஒன்றுமிருக்காது. அவர்களே ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அங்கே திருடச் செல்லக்கூடாது என நினைக்கிறான்.
எங்கே திருடச் செல்வது என்று தெரியாமல் சாலையில் நின்று கொண்டிருந்த போது தான் மழைத்துளி அவன் மீது விழுகிறது
அமைதியான அந்த இரவில் பூட்டிய வீடுகள் பேசுவதைப் பற்றி அவன் கற்பனை செய்கிறான். வீடுகளுக்கும் சொந்த மொழி இருக்கக் கூடும். அந்த வீடுகள் தங்களுக்கே உரித்தான மொழியில் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்வதாக நினைக்கிறான்.
“இந்த வீட்டிற்குள் வா“ என்றொரு குரல் கேட்கிறது. எங்கிருந்து அக்குரல் வருகிறது என அவனுக்குத் தெரியவில்லை.
பூட்டிய வீடு திருடனை உள்ளே வரும்படி அழைக்கிறது
நீண்டகாலமாக மனித நடமாட்டத்தை அறியாத அந்த வீடு மனிதனின் காலடிச் சப்தத்திற்காக ஏங்குகிறது.
அந்த வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது இன்னொரு துளி மழை அவனது முகத்தில் விழுகிறது. திருடன் அந்த வீட்டிற்குள் செல்கிறான். அலமாரியிலிருந்த பொருட்களைக் காணுகிறான். நகைப்பெட்டி எங்கே இருக்கிறது எனத் தேடுகிறான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனுக்குத் திடீரென்று மாடிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒருவேளை, அந்த வீடுதான் அப்படிச் செய்யும்படி வற்புறுத்துகிறது என்று அவன் நினைக்கிறான்
வீட்டின் அழகை ரசித்தபடி படிகளில் ஏறுகிறான். மேல் தளத்தை அடைந்ததும் சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்பு அங்கிருந்த அறைக்குள் நடக்கிறான். ஒரு இடத்தை அடைந்ததும், யாரோ ரகசியமான குரலில் பேசுவதைக் கேட்கிறான். அது பக்கத்து வீட்டிலிருந்து வரும் சப்தம். யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்
பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே ஜன்னலில் ஏறி அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறான்.
அங்கே இரண்டு நாற்காலிகள் தெரிகின்றன. அதில் ஒரு வயதான ஆணும் ஒரு வயதான பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதிரே இருவர் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
என்ன செய்யப் போகிறார்கள்? என்று திருடனுக்குப் புரியவில்லை
“உங்கள் வாரிசுகள் வெளிநாட்டிலிருந்து வரமாட்டார்கள். அவர்களுக்கு இந்தச் சொத்தெல்லாம் வேண்டாம். மரியாதையாகச் சொத்தை எங்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள்.. இந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் உங்களை உயிரோடு விட்டுவிடுவோம். இல்லாவிட்டால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

பயந்து போன முதியவர்கள் எங்கே கையெழுத்துப் போட வேண்டும் என்று நடுங்கும் குரலில் கேட்கிறார்கள்.
அந்த ஆள் அவர்கள் முன்பு பத்திரத்தை வைக்கிறான். இப்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்குகிறது.. மழையின் இரைச்சலில் அவர்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை.
உள்ளே என்ன நடக்கிறது என்று திருடனுக்குத் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்ய ஆரம்பிக்கிறது. இருட்டிற்குள்ளாகவே உற்றுப் பார்க்கிறான். அந்த முதியவர்கள் கழுத்தை மேல்நோக்கி உயர்த்தி ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி இருப்பது தெரிகிறது. அவர்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த திருடன் அச்சம் கொள்கிறான். அந்த முதியவர்களின் கண்கள் அவனிடம் எதையோ யாசிக்கின்றன. அந்தப் பார்வை அவனை முழுவதுமாக உலுக்குகிறது. குழப்பமான மனதுடன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி நடக்கிறான்.
அன்று அவன் எதையும் திருடவில்லை. ஆனால் அமைதியை இழந்திருந்தான். அவனால் அந்த நான்கு கண்களை மறக்க முடியவில்லை. எனக் கதை முடிகிறது
மழைத்துளி திருடனுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் நடமாட்டத்திற்கு வீடு ஆசைப்படுவது கதையின் அழகான பகுதி. கதை முடியும் போது அந்த முதிய கண்களை நாமும் காண்கிறோம். அவை இந்த உலகிடம் இது தானா வாழ்க்கை என்ற கேள்வியை எழுப்புகின்றன. அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தான் திருடன் வெளியேறிப் போகிறான். அவனைப் போலவே குற்றவுணர்ச்சியுடன் நாமும் அமைதியை இழக்கிறோம்.
••