நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை
நகுலன்
பூனை இல்லை ஆனால் அதன் சிரிப்பு மட்டும் மறையாமல் இருந்து கொண்டேயிருந்தது
என்று ஒரு வாக்கியம் ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் வருகிறது. நகுலனின் மரணம் பற்றிய தகவல் அறிந்த போது என் மனதில் தோன்றி மறைந்தது இந்த வரி.
பல வருடமாகவே நகுலனை போல சாவை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தவர் வேறு எவருமேயில்லை . வீட்டுப்பூனையை போல சாவு அவரை சுற்றிவளைய வந்தபடியே தானிருந்தது. சாவு என்பது கால்கள் இல்லாத பூனை என்று அவரே ஒரு நேர்பேச்சில் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் இலக்கியமே வாழ்க்கை என்று தனிமையும் ஒரு குப்பி பிராந்தியும் வெற்றிலை சீவலும் ஒரு சூரல் நாற்காலியும் பேச்சுத்துணைக்கு ஒரு பூனையும் கொண்ட அவரது வாழ்க்கை