நீலக்குதிரைகள் என்ற ஒவியம் பற்றிய எனது பதிவில் மேரி ஆலிவர் கவிதையை குறிப்பிட்டிருந்தேன்.
கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் அதை முன்னதாக மொழியாக்கம் செய்து அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார்.
நேற்று இதனை அவரே அனுப்பி வைத்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு.

நீலக்குதிரைகள் – மேரி ஆலிவர்
நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன்
அது சாத்தியமாவதில்
எனக்கு ஆச்சரியம் கூட இல்லை.
நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது.
அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது.
நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு
கட்டிக் கொள்கிறேன்.
என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது.
ஓவியன் ப்ரான்ஸ் மர்க்
மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி
இறந்துபோனான்.
போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு
விளக்குவதை விட நான் இறந்தே விடலாம்.
அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும்
அல்லது
அதை அவற்றால் நம்பவே முடியாது.
ப்ரான்ஸ் மர்க்
உனக்கு எப்படி நன்றி சொல்வது.
நமது உலகம் காலப்போக்கில்
கூடுதலாக அன்பானதாக ஆகலாம்.
அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை
நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின்
ஒரு சிறு துண்டாக இருக்கலாம்.
இப்போது அந்த நான்கு குதிரைகளும்
நெருக்கமாக வந்து
ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல
என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன
அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை
அவை பேசவும் செய்யாது.
என்ன சொல்லக் கூடும் அவை
இத்தனை அழகாக இருப்பது போதாதா என்ன?
தமிழில் : ஷங்கர ராமசுப்ரமணியன்