ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது

எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் கொண்டிருந்தவர். ஓவியத்தில் அவர் கறுப்பு உடையை அணிந்திருக்கிறார். அவரது உதடுகள் இன்னும் இளமையாக இருப்பதை உணர்த்துகின்றன
கழுத்தில் இரண்டு எளிய தங்கச் சங்கிலிகளை அணிந்துள்ளார். நெற்றியில் தேள் வடிவ நகை உள்ளது, அதில் ஒரு விலையுயர்ந்த கல் காணப்படுகிறது. இந்தத் தேள் வடிவத்தைக் காமத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். சிலர் இது விருச்சிக ராசியைக் குறிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இத்தோடு கருவுறுதலைக் குறிக்கவும் தேள் வடிவம் கொண்ட நகையை அணிவது வழக்கம் என்றும் கருதப்படுகிறது.

தனது கணவரின் மலட்டுத்தன்மை காரணமாகக் கருவுற இயலாமல் போனவர் எலிசபெத். அதைச் சுட்டிக்காட்டும்விதமாக இந்தத் தேள் வடிவ நகை அணியப்பட்டிருக்கலாம்.
ஓவியத்தின் பின்னணியில் அமைதியான, ஒளிரும் நிலப்பரப்புச் சித்தரிக்கப்படுகிறது. அதில் உயரமான மலை காணப்படுகிறது. எலிசபெத்திடம் வெளிப்படும் புன்னகை மர்மமானது. அவரது சற்றே தொங்கிய இடது கண்ணிமை, நீண்ட முகம், பெரிய நெற்றி, நேர் கொள்ளாத கண்கள் தனித்த வசீகரம் கொண்டிருக்கின்றன. இந்த ஓவியத்தில் எலிசபெத் ஏதோ பதற்றத்தை மறைக்க முயல்வதாகத் தோன்றுகிறது.

டியூக் கைடோபால்டோ மற்றும் அவரது மனைவி எலிசபெத் இருவரையும் ரஃபேல் வரைந்திருக்கிறார். ஆனால் டியூக் கைடோபால்டோ ஓவியம் இப்போது காணாமல் போய்விட்டது. 1497ல் போப்பாண்டவர் உத்தரவால் டியூக் கைடோபால்டோ சிறைபிடிக்கப்பட்டார். அந்தக் கால வழக்கப்படி அவரை விடுவிப்பதற்காகப் பணம் கோரப்பட்டது. குடும்ப நகைகளை விற்று எலிசபெத் பணத்தைத் திரட்டினார். ஆகவே தான் ஓவியத்தில் அவர் எளிமையாக இரண்டே தங்கச் சங்கிலிகள் அணிந்திருக்கிறார் என்கிறார்கள்.
எலிசபெத் அணிந்துள்ள தங்க ரேகை கொண்ட ஆடை திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. எலிசபெத்திற்குக் குழந்தைகள் இல்லாததால் மிகவும் சோகமாக இருக்கிறாள். அதையே ரஃபேல் தனது ஓவியத்தில் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார் என்கிறார்கள் கலைவிமர்சகர்கள்
ரஃபேலின் உருவப்படத்தில், எலிசபெத்தின் தலை சூரிய உதயத்தின் அடங்கிய ஒளிக்கு எதிராக நிமிர்ந்திருக்கிறது, . இது அவளது பார்வையைச் சூரியனுடன் இணைவு கொள்ளவைக்கிறது. சிறுவயதிலே தாயை இழந்தவர் என்பதால் தானோ என்னவோ அவரது பெண் உருவங்களில் கருணையும் சாந்தமும் அழுத்தமாக வெளிப்படுகிறது



ரஃபேலின் வரைந்த இருபதுக்கும் மேற்பட்ட மடோனாக்களில் நம்மைக் கவர்வது அவர்களின் கண்கள். ரஃபேல் போல முகபாவத்தையும் கண்களையும் வரைய முடியாது. குறிப்பாகத் துல்லியமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த முகங்கள் அபாரமானவை.
டாவின்சி, மைக்கேலாஞ்சலோ என்ற இரு மேதைகளின் காலத்தில் உருவாகி அவர்களின் பாதிப்பில்லாத ஓவியராகச் சாதித்திருக்கிறார் ரஃபேல். ஓவியர் என்றாலே வறுமையும் நெருக்கடியும் கலகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறையே இருக்கும் என்பதிலிருந்து விலகி அமைதியான, வசதியான. பெயரும் புகழும் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ரஃபேல். அவர் ஒரு அரசனைப் போல வாழ்ந்தார் என்கிறார் Lives of the Painters, Sculptors, and Architects என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதிய வசாரி.
ரஃபேல்லோ சான்சியோ ரஃபேல் 1483 – ல் மத்திய இத்தாலிய நகரமான அர்பினோ வில் பிறந்தவர். இவருடைய தந்தையும் ஒரு ஓவியர். அவரிடமே தனது ஆரம்பப் பாடங்களை ரஃபேல் கற்றுக் கொண்டார்.

ரஃபேலின் 11வது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தந்தையின் பூர்வீக சொத்துகள் அனைத்தும் அவரது மாமாவால் பாதுகாக்கப்பட்டன. இதில் பெரும்பகுதி ரபேலுக்குச் சொந்தமானது. தந்தையின் சொத்துகளில் பாதியை மாற்றாந்தாய் பெர்னார்டினா வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே செல்வமும் செல்வாக்கும் கொண்ட இளமைக் காலத்தினை ரஃபேல் பெற்றார். நாடக அரங்கிற்கான திரைகள் மற்றும் அரங்க அமைப்பை உருவாக்குவதிலும் ரஃபேல் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வீகத்தன்மை கொண்ட ஓவியராக அறியப்பட்ட ரபேலை லியோனார்டோ டாவின்சிக்குச் சமமாகக் கருதினார்கள். இதனால் பெரும் வணிகர்கள் மற்றும் உயர் தட்டுக் குடும்பங்களுக்கான ஓவியம் வரையும் பணி அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டது.
1500- ஆம் ஆண்டில் அர்பினோவில் இருந்து பெர்கியா சென்று. புகழ்பெற்ற ஓவியரான பியட்லோ பெர்கினோ உடன் இணைந்து தேவாலயத்தில் புனிதர்களின் ஓவியம் மற்றும் பைபிள் காட்சிகளை வரையும் பணிகளை மேற்கொண்டார்.
21 வயதில் பிளாரன்சுக்கு ரஃபேல் சென்ற போது மைக்கேலாஞ்சலோ புகழின் உச்சத்திலிருந்தார். அவரது டேவிட் சிற்பம் அப்போது தான் உருவாக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கம் லியோர்னாடோ டாவின்சி, புகழ்பெற்ற ஒவியராகக் கொண்டாடப்பட்டு வந்தார். . டாவின்சியின் மோனாலிசா ஓவியத்தால் வசீகரிக்கப்பட்ட ரஃபேல் அதன் சாயலில் கன்னிமேரி ஓவியங்களை வரையத் துவங்கினார்.
1508 – ல் இரண்டாம் ஜூலியஸ் போப்பின் மாளிகையை அலங்கரிக்கும் பொறுப்பு ரஃபேலிடம் வழங்கப்பட்டது. அதைத் திறம்படச் செய்த காரணத்தால் போப்பின் நன்மதிப்பைப் பெற்றார். அதன் காரணமாக வாடிகன் அரண்மனை நான்காவது தளத்திலுள்ள நான்கு அறைகளுக்கு ஓவியம் வரையவும், புதிய கட்டிடங்களை உருவாக்கவும் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கே ரபேலும் அவரது குழுவினர்களும் அசாத்தியமான கலைப்படைப்புகளை உருவாக்கினார்கள். கலை வாழ்வின் உச்சத்திலிருந்த ரஃபேல் எரிநட்சத்திரம் போலத் தனது 37 வயதில் காய்ச்சல் காரணமாக இறந்து போனார்.

சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களில் ரஃபேல் வரைந்த அழகிய ஓவியங்கள் காலத்தைக் கடந்து இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. ‘லா ஃபோர்னாரினா’ என்ற பெண் உருவப்படமே அவர் கடைசியாக வரைந்தது., இந்தப்படத்திலிருப்பது அவரது காதலியும் மாடலுமான மார்கெரிட்டா என்கிறார்கள். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ரஃபேலின் கலை பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பகால நவ-லத்தீன் கவிதைகள் மற்றும் தொன்மங்களை ஆதாரமாகக் கொண்டது
அவர் ஆடைகளை வரைந்துள்ள விதமும் நிறத்தேர்வும் மிகவும் தனித்துவமானது. அவர் ஓவியத்திற்குள் உணர்ச்சிப்பூர்வமான நாடகம் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறார். குறிப்பாகப் பைபிள் காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் அதில் வரும் உணர்ச்சிகளின் தீவிரத்தை மேல் கீழாக உருவங்களைச் சித்தரிப்பதின் வழியே உணர்த்திவிடுகிறார். ரஃபேல் வரைந்த சிறகுள்ள குழந்தைகளை எப்படி மறக்கமுடியும். அவர்கள் வானுலகின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் முகத்தில் களங்கமின்மையும் ஆர்வமும் வெகு நேர்த்தியாக வெளிப்படுகின்றன
ரஃபேலின் கோடுகள் நடனமாடுகின்றன. அழுத்தமாகவும் பறத்தலுடனும் கோடுகளை வரைந்திருக்கிறார். அவரது கோட்டோவியங்களில் மனிதர்களின் உடல்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இயக்கத்துடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் வெளிப்படும் லயம் நிகரில்லாதது

ரஃபேலின் ஒவியம் பற்றிய இந்தக் கவிதை அவரது ஒவியத்தின் இயல்பையும் அவர் சித்தரித்த பெண்களின் அபூர்வத்தையும் அழகாக விவரிக்கிறது.
if i were a raphael painting
she would be unclothed
all her secrets laid out
in the late summer sun
streaming through the open window
she would face the painter
her almost-green-but-not-quite eyes
wide with a fear and a thrill
never felt until now
her rosebud lips twitch in a half smile
as though she is afraid
the happiness will be lost if she grins too wide
her chocolate brown hair
curls just above narrow shoulders
sprinkled with cinnamon freckles
the artist paints with a tender hand
capturing both innocence and allure
and when he is done the girl is dressed and gone
and so the painting is hidden and gathers dust
until a curious boy unveils it years later
and hangs it above the fireplace
where his greedy eyes can feast on the girl’s secrets
day and night, he will try to unravel them
but distraction comes in shape of a skin and bone lover
so the painting is suppressed again
until another prying hand wipes the dust away
– yellah girl- Jan 2016