ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும்.

இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது.
இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

மேற்கு டெக்சாஸின் பரந்து விரிந்த நிலக்காட்சிகளின் நடுவே ஒற்றைக்குதிரையில் வரும் ஜான் வெய்னின் தோற்றம் மறக்க முடியாதது.
1868 இல் கதை நடக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, மேற்கு டெக்சாஸில் உள்ள தனது சகோதரர் ஆரோனின் வீட்டிற்கு ஈதன் எட்வர்ட்ஸ் வருகிறார். அவர் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டவர். இதற்காகப் பதக்கம் பெற்றிருக்கிறார். அவரது சேமிப்பில் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு வீட்டின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். முடிவில்லாமல் விரிந்துள்ள நிலவெளியில் ஒரு குதிரை வருவதைக் காணுகிறாள். அவளது முகம் மலர்ச்சியடைகிறது. தொலைவில் ராணுவ உடுப்பு அணிந்து இடுப்பில் உடைவாளுடன் கறுப்பு தொப்பியோடு ஈதன் வருகிறார். மிக அழகான காட்சியது.


வீட்டிற்கு வரும் ஈதன் எட்டு வயதான சிறுமி டெபியை தலைக்கு மேல் தூக்கிக் கொஞ்சுகிறான். இரவு உணவிற்குப் பிறகு, ஈதன் தனியாக வெளியே அமர்ந்து கொண்டிருக்கிறான். ஈதனின் முகத்தில் விவரிக்க முடியாத சோகம் படிந்திருக்கிறது.
ஈதனின் கடந்த காலம் மர்மமானது; கடந்த சில ஆண்டுகளாக அவர் எங்கே இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஆகவே அவரிடம் ‘கலிபோர்னியா எப்படி இருக்கிறது எனச் சகோதர்ர் விசாரிக்கிறார். யாருக்கு தெரியும் என்கிறான் ஈதன். சட்டவிரோதமாக எதையோ செய்திருக்கிறார் போலும் என்ற எண்ணம் உருவாகிறது. அவரிடம் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. அது இந்தச் சந்தேகத்தை வலுப்பெற வைக்கிறது.

டெக்சாஸில் கால்நடைகள் திருடுபோவது வழக்கமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கவும் கால்நடைகளை மீட்கவும் தனிக்காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரோனின் பக்கத்துப் பண்ணையிலுள்ள லார்ஸ் ஜோர்கென்சனுக்குச் சொந்தமான கால்நடைகள் திருடப்படுகின்றன. அந்தக் கால்நடைகளை மீட்கக் கேப்டன் சாமுவேல் கிளைட்டன் மற்றும் ஈதன் குழுவினர் புறப்படுகிறார்கள். உண்மையில் இது ஒரு சூழ்ச்சி என்பதும் ஆண்களை வெளியே அனுப்பிவைப்பதற்காகவே இந்தத் திருட்டு நடைபெற்றது எனவும் தெரிய வருகிறது.
மீட்புக்குழுவினர் திரும்பி வருவதற்குள் ஆரோன், அவரது மனைவி மார்த்தா மற்றும் மகன் பென் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் டெபி மற்றும் அவரது மூத்த சகோதரி லூசி ஆகியோர் பூர்வகுடியினரான கொமாஞ்சியர்களால் கடத்தப்படுகிறார்கள்.

இறந்த உடல்களை அடக்கம் செய்யும் ஈதன் கடத்தப்பட்ட பெண்களை மீட்க தனது தேடுதல் வேட்டையைத் துவக்குகிறார். கொமாஞ்சியர் ஒரிடத்தில் அவர்களை மறைந்து தாக்குகிறார்கள். லூசி ஒரு பள்ளத்தாக்கில் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதை ஈதன் கண்டறிகிறார். பழிவாங்கும் வெறி அவருக்குள் அதிகமாகிறது.
அவர்கள் நினைத்தது போல டெபியை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. குளிர்காலம் பிறக்கிறது. , ஈதனும் மார்ட்டினும் ஜோர்கென்சன் பண்ணைக்குத் திரும்புகிறார்கள். டெபியைப் பற்றிய தகவலைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் ஈதன்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு நியூ மெக்சிகோவில், டெபியை காண்கிறார், இப்போது அவள் கொமாஞ்சி ஒருவரின் மனைவியாக வாழுகிறாள். கடத்தப்பட்ட பின்பு தப்பிக்க வழியின்றி அவர்களில் ஒருத்தியாகிவிட்டதாகக் கூறுகிறாள். அது தான் நிதர்சனம். அவளது இந்த வாழ்க்கையை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலிருந்து அவளை விடுவிக்க முயலுகிறார். அவள் அதை ஏற்கவில்லை

இந்தப் பகுதி தான் படத்தின் மையம். யாரை இத்தனை ஆண்டுகள் தேடிக் கொண்டிருந்தாரோ அவள் இப்போது எதிரியின் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். அதை ஈதனால் தாங்க முடியவில்லை. ‘இப்படி ஒரு வாழ்க்கைக்குப் பதில் அவள் செத்துப்போயிருக்கலாம் என நினைக்கிறார். அவளைக் கொல்லவும் துணிகிறார். மார்டின் குறுக்கிட்டு அவளைக் காப்பாற்றுகிறான். டெபியின் காரணமாக இப்போது ஈதனும் கோமாஞ்சியர்களின் உறவே. அதை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பழிவாங்குதலின் பாதை திசைமாறுகிறது.
படம் வெளியான போது ஜான் ஃபோர்ட் இனவெறியுடன் ஈதன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் எனக் கடுமையான விமர்சனம் வெளியானது.

ஈதனின் வீடு திரும்புதலில் துவங்கிய படம் யாருமற்ற தனிமையில் பயணிப்பதுடன் முடிவடைகிறது. ஈதனின் கடந்தகாலம் போலவே அவனது எதிர்காலமும் மர்மமானதே.
கொமாஞ்சியர்களைத் தேடிச் செல்லும் காட்சிகளும் அவர்களுடன் நடக்கும் பரபரப்பான குதிரைச் சண்டையும். இரவுக்காட்சிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
காலமும் வெளியும் தான் படத்தின் உண்மையான கதாநாயகர்கள். இந்த இரண்டும் இணைந்து திரையில் உருவாக்கும் மாயம் நிகரில்லாதது