பார்வையற்ற ஓவியர்

திறந்த ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில், கடலை நோக்கியபடி மூன்று உருவங்கள் காணப்படுகின்றன. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்கள் உபயோகப்பட்டுள்ள விதம் மற்றும் உருவங்களின் தனித்தன்மை நம்மை வசீகரிக்கிறது.

பிரிட்டிஷ் ஓவியர் சர்கி மான் (Sargy Mann) வரைந்த இந்த ஓவியத்தைக் காணும் போது இது பார்வையற்றவர் வரைந்த ஓவியம் என்று நினைக்கமுடியவில்லை. பொதுவாகப் பார்வையற்றவர்கள் என்றால் அவர்களால் நிறத்தை பிரித்து அறிந்து கொள்ள முடியாது என்றே பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கிறது.

ஆனால் போர்ஹெஸ் போன்ற பார்வையற்ற எழுத்தாளர் தனக்கு மஞ்சள் நிறத்தின் மீது தனிவிருப்பம் என்று சொல்வதையும் நிறத்தை துல்லியமாகத் தனது எழுத்தில் வெளிப்படுத்துவதையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. சர்கி மான் திடீரெனப் பார்வை இழப்பிற்கு உள்ளானவர். ஆகவே மனதில் பதிந்துள்ள நிறத்தை ஓவியத்தில் துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்வதற்காகச் சிறப்புப் புள்ளியை உருவாக்கியிருக்கிறார்.

இசைக்குறிப்புகள் போல இந்தக் குறிப்புகளை வைத்து அவரால் வண்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. கேன்வாசில் தான் வரைய வேண்டிய உருவங்கள் மட்டும் நிலக்காட்சிகளையும் இப்படிக் குறியீடுகளாகப் பிரித்துக் கொண்டுவிடுகிறார். பின்பு அதை அடிப்படையாகக் கொண்டு படம் வரைகிறார்.ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவல் நுண்ணோவியர்களின் உலகை விவரிக்கிறது.

மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஒட்டோமான் மற்றும் பாரசீக நுண்ணோவியர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை இழப்பு ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் பார்வை போய்விடும், அதைத் தங்கள் திறமைக்குக் கடவுள் அளித்த பரிசு என்றே ஓவியர்கள் கருதியிருக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற நுண்ணோவியர் கலையின் உச்சத்தைத் தான் அடைந்துவிட்டதாகவே உணர்ந்திருக்கிறார். பார்வை போனனதைப் பற்றி அவருக்கு ஒரு புகாரும் இல்லை

துருக்கிய ஓவியர், Eşref Armağan பிறப்பிலேயே பார்வையற்றவர். வியப்பூட்டும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

மான் 1989 முதல் பார்வை இழப்பிற்கு உள்ளாக ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பார்வையற்றவராகவும் மாறியிருக்கிறார்

காட்சிகளை முழுவதுமாக உள்ளுணர்வின் வழியாகப் புரிந்து கொள்வதும் வெளிப்படுத்துவமாக இருக்கிறார் மான். அடர்வண்ணங்கள் இசையைப் போன்றவை. அவற்றைக் கையாளுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் மான்.

பார்வையற்ற நிலையில் ஒரு ஓவியர் தனது நினைவாற்றலையும் அனுபவத்தையும் நம்பியே படம் வரைகிறார். ஓவியம் வரைவதற்குக் கண் தான் பிரதமானது என்ற எண்ணத்தையும் மாற்றுகிறார். கலை அவருக்கு மீட்சியாக அமைந்துவிடுவதைக் காண முடிகிறது

0Shares
0