உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம்
ந.பிரியா சபாபதி.

ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான். மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான். நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது வரை இயற்கையின் வேர் வரை சென்று அதை அறுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அறுத்துக் கொண்டிருக்கும் நமக்கு திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்ற சிறார் நாவல் வழி பெரும் இயற்கையின் மீதும் நேசம் கொள்ளுங்கள் என உணர்த்தியுள்ளார்.
நான் என்றைக்குமே நம்மைத் தவிர பிற உயிரினங்களுக்குத் தலைமுறை உண்டு என்றும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதை நீர்வாழ் உயிரனங்கள் உணர்த்துகிறது. அதை உணர்த்துவதற்கான காரணத்தை நோக்கினால் செம்பியன் ஏரியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்கி அதில் தனது தொழிற்சாலையை உருவாக்க முனைவதால் ஆமை, மீன்கள், தவளை போன்றவை ஒன்று கூடிப் பேசின. ஆனால் ஒன்றின் கருத்துக்குப் பிற உயிரினங்கள் செவி சாய்க்கததால் அவற்றுக்குள் சண்டை ஏற்பட்டன.
இதில் டம்பி என்ற மிளகு அளவு உருவம் கொண்ட தவளை மிகுந்த முனைப்புடன் அனைவரிடமும் பேசியது. “நிச்சயம் இந்த ஏரியை நான் காப்பாற்றுவேன். மனிதர்களை எதிர்த்துப் போராடப் போகிறேன்” டம்பியின் உருவத்திற்குப் பிற தவளைகள் மதிப்பு கொடுக்காதது போன்று அதனுடைய பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை.
அந்த உயிரினங்கள் வாழும் செம்பியன் ஏரியானது ஒரு காலத்தில் மக்களுக்குக் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்த ஏரியாக விளங்கியது. மக்கள் அந்த ஏரியினுள் நீராளி எனும் கடவுள் குடியிருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏரியினுள் நீராளி கடவுளை மகிழ்ச்சி அடையச் செய்ய சக்கரையும் பூக்களையும் ஏரியில் போட்டு ஆடிப்பாடுவார்கள். இவையெல்லாம் செம்பியன் ஏரியானது பஸ், லாரி போன்ற வாகனங்கள் கழுவும் ஏரியாக மாறிப் போவதற்கு முன் நடைபெற்றது.
நீர்வாழ் உயிரினங்களின் குரலினைக் கேட்க எவருமே இல்லை. இச்சூழலில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட அமெரிக்கக் குழு ஒன்று அந்த ஏரியைப் பார்க்க வந்தனர். இதைப் பார்த்த ‘சப்பை’ எனும் நாய் மட்டும் அவர்களின் செயல்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தது. காரோட்டிகள் எறிந்த கல்லால் அதற்கு வலித்தது. ஏரிக்கரை அருகே இரவெல்லாம் கிடந்தது.
பெப்பா, சங்கா என்ற இருதவளைகள் கூடிப் பேசி முடிவெடுத்துக் கொண்டிருந்த வேளையில் நம் கதைநாயகனான டம்பி புகார் எழுதலாம் என்று யோசனை கூறியதும் மற்ற தவளைகள் அதைக் கேட்டு நகைத்தன.
சங்கா எனும் தவளை தண்ணீரில் வாழ விருப்பமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்தது. ஆனால் அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமால் சென்றது. அதனுடன் சில தவளைகளும் சென்றன. நகரத்தின் வாகனங்களில் பல அடிப்பட்டு இறந்தன. ஒரேயொரு தவளை மட்டும் தப்பித்துப் பிழைத்து ஏரியை நோக்கிச் சென்றது. டம்பி மறுபடியும் தன் கருத்தை முன் வைத்தது. ஆனால் அந்தக் கருத்திற்கு எவரும் செவிசாய்க்கவில்லை.
ஏரியின் மேல் அன்பு கொண்ட சப்பையிடம் டம்பி புகார் அளிக்கலாம், அந்தப் புகாரில் செம்பியன் ஏரியின் பெருமையைக் கூறலாம். அது மட்டுமல்லாது அதில் வசிக்கக் கூடிய உயிரினங்கள் பற்றியும் ஏரி மூடப்பட்டு கார் தொழிற்சாலை உருவானால் அதனால் ஏற்படப் போகும் சீர்கேட்டினையும் கூறலாம் என்றது.
இருவரும் இணைந்து அந்த ஏரிக்கு வரும் பூனையிடம் உதவி கேட்கலாம் என்று தீர்மானித்தன. நியூட்டன் எனும் அந்தப் பூனையானது அவர்களுக்கு உதவியது. புகாரை விரிவாக எழுதிக் கொடுத்தது. மற்ற உயிரினங்கள் அதில் கைரேகைகள் பதித்தன.
நியூட்டன், டம்பி, சப்பை மூவரும் பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்துப் புகாரை அளித்தது. அவர் அளித்த பதில் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் டம்பி மட்டும் தன் உறுதித்தன்மையிலிருந்து மாறாமல் இருந்தது.
அடுத்ததாக நீதியரசரைச் சந்தித்தன. அவர் சொன்ன பதில்களிலிருந்து அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தன. மக்களின் மனசாட்சியான ஊடகத்தின் உதவியை நாடலாம் என்ற யோசனை தோன்றியதால் அங்குள்ள எடிட்டரிடம் ஏரியில் வாழக் கூடிய உயிரினங்கள் பற்றியும் அதைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அவரும் முடியாது எனக் கைவிரித்தார்.
இந்தச் சூழ்நிலையில் டம்பி சேனலை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்த பொழுது காகம் ஒன்று அதைத் துரத்தித் தின்ன முயன்று கொண்டிருந்தது. தன் நிலையைக் கூறித் தன்னுடன் செம்பியன் ஏரிக்கு வருமாறு கூறியது. டம்பி கூறியது உண்மை என்பதை அறிந்ததும் டம்பி, காகத்திடம், “ நாளை ஒரு நாள் நகரில் உள்ள எல்லாக் காகமும் வாய் ஓயாமல் கத்திக் கொண்டே பறக்க வேண்டும். நாங்களும் கூச்சலிடுவோம்” என்றது. இதற்கு மீன்களும் தவளைகளும் இசைந்தன.
அதன்படி காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. மனிதர்களால் அந்த இரைச்சலைத் தாங்க இயலவில்லை. தவளைகளும் கூச்சலிட ஆரம்பித்தன. வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இவ்வேளையில் தொலைக்காட்சியில் தோன்றி தங்களின் போராட்டத்திற்கான காரணத்தைக் கூறியது. அந்த மழை நீரை ஏரி வாங்கிக் கொண்டது. அதன் பின செம்பியன் ஏரியை விற்கக் கூடாது முடிவு செய்தது. உருவத்தில் சிறிய டம்பியின் முயற்சி வெற்றி பெற்றது.
இக்கதையை நான் வாசித்து முடித்த பின் இது சிறார்களுக்கான கதை மட்டும் என்று தோன்றவில்லை. அனைத்து வயதினருக்குமான கதை என்றே தோன்றியது. இடையிடையே கதைக்கு ஏற்ப வரையப்பட்ட ஓவியம் கண்ணை மட்டும் கவரவில்லை. சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது. நீயூட்டன் எனும் பூனை என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் ஆகும். இயற்கையை அழித்தால் மனிதன் பெருந்துயருக்கு உள்ளாவான் என்பதை ஆசிரியர் மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அழகான கதையை குழந்தைகளுக்குப் பிடித்தமான உயிரினங்களைக் கொண்டே அருமையாகக் கூறியுள்ளார். எளிய தமிழில் குழந்தைகள் பிறர் உதவியின்றி படிக்கும் தமிழில் நயம்பட கூறியுள்ளார்.
••
இந்தச் சிறார் நாவலை உள்ளடக்கி ஐந்து சிறார் கதைகள் ஒன்றாக விலங்குகள் பொய்சொல்வதில்லை என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது
