மவுண்ட்பேட்டனின் கடைசிநாள்

லூயி பிரான்சிஸ் ஆல்பெர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் எனப்படும் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். இந்தியப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்,

இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மவுண்ட்பேட்டன் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் அயர்லாந்தின் முல்லாக்மோரிலுள்ள கிளாசிபான் கோட்டையில் விடுமுறையைக் கழித்த போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வின் நேரடி சாட்சிகள் மற்றும் அந்த நாளில் என்ன நடந்தது என்பது குறித்த அவரது குடும்பத்தினரின் நினைவுகளைப் பதிவு செய்துள்ளது பிபிசி தயாரிப்பில் உருவான The Day Mountbatten Died ஆவணப்படம்

ஆகஸ்ட் 27, 1979 அன்று மவுண்ட்பேட்டன் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் கொன்றார்கள். அவருடன் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகும் இந்திய அரசியல் விவகாரங்களில் மவுண்ட்பேட்டன் தலையிட்டு வந்தார். 1964ல் நேருவின் இறுதிச்சடங்கிற்கு வருகை புரிந்த மவுண்ட்பேட்டன் அன்றைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். இந்தியாவை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதில் மவுண்ட்பேட்டனுக்கு எப்போதும் விருப்பமிருந்தது. அது இந்திராகாந்தி பிரதமராகும் விவகாரத்திலும் வெளிப்பட்டது. இந்தியர்கள் நினைவில் மவுண்ட்பேட்டன் பெற்றுள்ள இடம் என்பது விநோதமானது.

வடக்கு அயர்லாந்தின் எல்லையிலிருந்து 17 மைல் தொலைவில் இருக்கும் முல்லாக்மோர் மிக அழகான கடற்கரைப்பகுதி. அங்கே ஓய்வில் மீன்பிடிப்பது குடும்பத்தினருடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பது மவுண்ட்பேட்டனின் வழக்கம்.

வடக்கு அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அயர்லாந்து தீவை ஒன்றிணைக்க முயன்ற ஐஆர்ஏ என்ற அமைப்பு மவுண்ட்பேட்டனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தியது.

அதை மவுண்டன்பேட்டன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என நினைத்துப் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தார்கள். ஆனால் மவுண்ட்பேட்டன் தனது பாதுகாப்பை விரும்பவில்லை. ஆகவே சற்று தளர்வான பாதுகாப்பு வளையத்தில் இருந்தார்.

இந்த ஆவணப்படத்தில் அவர் தனது குடும்பத்துடன் விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த நாளை பல்வேறு நினைவுகளின் வழியே மறுஉருவாக்கம் செய்கிறார்கள்.

ஆகஸ்ட் 27 திங்கள்கிழமை அவர் ஒரு படகில் பயணம் செய்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட மவுண்ட்பேட்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு உயிர் துறந்தார்

மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, அவரது கணவர் ஜான் மற்றும் அவர்களது மகன் திமோதி, நிக்கோலஸ் ஆகியோர் இந்த விபத்தில் காயமடைந்த போதும் உயிர் பிழைத்துவிட்டார்கள்.

மவுண்ட்பேட்டனின் இறுதி ஊர்வலம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  முல்லாக்மோரில் மவுண்ட்பேட்டனுக்கான நினைவுசின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்னர் குடும்பம் பற்றிய ஆவணப்படங்களின் நோக்கம் அதன் பெருமைகளை நினைவூட்டுவதே. இப்படமும் அந்த வரிசையில் சேர்க்க வேண்டியதே.

மவுண்ட்பேட்டனின் மகள் பமீலா Daughter of Empire: Life as a Mountbatten என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். மவுண்ட்பேட்டன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு Viceroy’s House திரைப்படம் உருவாக்கபட்டுள்ளது. இவை யாவிலும் உண்மை மிகக் குறைவாகவே வெளிப்பட்டுள்ளது.

0Shares
0