முரளிதரன் கண்ட கனவு

P. பொன்மாரியப்பன்

தங்களது இணையதளத்தில் முப்பது வயதுச் சிறுவன் சிறுகதை வெளியாகியுள்ளதைக் கண்டு உடனடியாகக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் கதையைப் பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு 44 வயதாகிறது. எனக்குள் இருக்கும் முப்பது வயது சிறுவன் தான் இந்தச் சிறுகதையை வாசிக்கத் தூண்டினான் என்பேன்

கதையை வாசித்து முடித்தபோது என் கனவில் சேதுராமனின் அப்பா வந்தது போலவே இருந்தது. அவரை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு ஐந்தாம் வகுப்பு மேல் தொடர்வதில்லை. காலம் கடந்தும் பள்ளிக்கூட நட்பின் ஆழத்தை உணர்த்துவதற்காகத் தான் கனவுகள் வருகிறது என்பதைக் கதையில் வாசித்த போது நிஜம் என்று பட்டது.

முரளிதரன் கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்ற வேண்டும்? சேதுராமனின் அப்பா நாம் தொலைத்துவிட்ட அப்பாவித்தனத்தைக் கொண்டிருக்கிறார். அதை நினைவூட்டவே கனவில் வருகிறார்.

அமெரிக்காவில் முரளிதரன் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதராக இருக்கிறார். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. அது தான் சேதுராமனின் அப்பாவைக் கனவில் வரவைக்கிறது.

எனது அம்மாவின் ஊர் உடையாம் புளி, சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் நட்பும், கிராம மக்களின் அன்பும் இந்தச் சிறுகதை வாசிக்கும் போது எனக்குள் நினைவாக வந்தது.

எனது சிறுவயதில் இடது கண்ணில் பூ விழுந்த ஒளிமுத்து என்பவரைப் பார்த்திருக்கிறேன். அவரைச் சிறுவர்கள் கேலி செய்வார்கள். அவரும் கோபப்பட்டுக் கல் எரிந்து விடுவார். அந்த ஒளிமுத்துவை சேதுராமனின் அப்பா செல்வம் கதாபாத்திரம் நினைவூட்டியது.

பள்ளிக்கூடம் உருவாக்கிய பயம் வாழ்நாளில் போகாது. அந்தப் பயம் தான் சேதுராமனின் அப்பாவைப் பித்தனாக மாற்றியது என்பதைப் புரிந்து கொண்டேன்.

முரளிதரன் கண்ட கனவில் செல்வம் ராட்டினத்தில் உயரப் பறக்கிறார். மகிழ்ச்சி ஆரவாரத்தில் கையை வீசுகிறார். அவரது மகிழ்ச்சி தான் தங்கக் காசுகளாக மாறுகிறது. மிகவும் நல்ல சிறுகதை.

0Shares
0