மூத்தோர் பாடல் -2 காதலின் கானல் உருவங்கள்.

கலித்தொகையிலுள்ள பாலைக்கலி ஒன்பதாவது கவிதையை வாசிப்பதற்கு முன்பு ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கொதிக்கும் வெயில் பரந்த பாலை நிலத்தில் காதல் வசப்பட்ட ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். உடன்போக்குதல் பாலையின் இயல்பு.

அப்படித் தான் அந்த இளைஞனும் பெண்ணும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செல்கிறார்கள்.

நடந்தால் மட்டுமில்லை. அதைப்பற்றி நினைத்தாலே சுடக்கூடியது பாலை நிலம்.

பாலையின் கடுமை அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த இளம்பெண்ணுக்கு முழுமையாகத் தெரியாது. அவள் பாலை நிலத்திலே பிறந்து வளர்ந்தவள் என்பதால் பாலையின் வெயில் குடித்து வளர்ந்திருக்கக் கூடும். தைரியமிக்கவளாக இருந்திருப்பாள். பாலை நிலத்துப் பெண்களுக்கே உரித்தான உயர்ந்த தோற்றம். மெலிந்த உடல். கத்தி போன்ற நடை. அச்சமற்ற கண்களுடன் அவளிருந்திருப்பாள். ஆனால் முதன்முறையாக பாலையைக் கடந்து போகிறாள்.

அந்தப் பெண்ணை அந்த இளைஞன் எப்படிக் காதலித்தான்.. எவ்வளவு நாள் காதலித்தான். யார் முதலில் காதலைச் சொன்னது. எதுவும் தெரியாது. சினிமாவின் முதற்காட்சியைப் போல அவர்கள் ஊரைவிட்டு ஒடுகிறார்கள்.

பாலையைக் கடந்து செல்வது எளிதானதில்லை. துணிவு தான் காதலின் ஒரே ஆயுதம். துணிந்தவர்களால் தான் காதலில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. தயங்கித் தயங்கி மனதிற்குள் பூட்டி வைத்த காதல் தோல்வியில் தான் முடியும். காதலித்த பிறகு தயங்குகிறவர்களால் ஒரு போதும் காதலித்தவரைத் திருமணம் செய்ய முடியாது. ஆனால் இந்த இளைஞனும் பெண்ணும் துணிந்து பெற்றோரை விலகி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் புறப்பட்டுவிட்டார்கள்.

மழை இல்லாது வறண்ட நிலம், குடிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலையில் நாவறட்சி தாங்கமுடியாமல் தன் கண்ணீரால் நாவின் வறட்சியைப் போக்கிக் கொள்ளும் அளவிற்கான செந்நாய் உலவும் வெங்காடு.

சுட்டெரிக்கும் சூரியனையோ, வெக்கையை வாறிச்சுழற்றும் காற்றினையும் நிழல் இல்லாத பெருவெளியினையும் அவனால் என்ன செய்யமுடியும். இப்படி வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு ஜோடிக்குக் கல்யாணம் நடந்த போது நான் போயிருக்கிறேன். அந்தப் பெண்ணும் பையனும் தங்கள் பெற்றோர்களுக்குப் பயந்து விடியும் வரை ஒரு வாடகைக்காரிலே சுற்றிக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் கோவிலில் வைத்துத் திருமணம். அந்தப் பையன் சார்பில் நாலைந்து நண்பர்கள் வந்திருந்தோம்.

பெண்ணுடைய சார்பில் ஒருவருமில்லை. திருமணம் செய்து கொள்ளும்வரை பதற்றமாக இருந்த பெண் கழுத்தில் மலையேறியதும் தனக்கென ஒருவர் கூட இல்லையே என்று அழுதார். நாங்கள் எவ்வளவு சமாதானப்படுத்திய போதும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்குச் சாட்சி வேண்டும் என்பதற்காகப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். பக்கத்திலிருந்த சரவண பவனில் மதிய உணவு சாப்பிட்டார்கள்.

அந்தப் பெண்ணால் ஒரு கவளம் சோற்றை விழுங்க முடியவில்லை. அந்தப் பையன் அவளுக்கு ஊட்டிவிட்டான். அப்போதும் அவள் அழுதாள். கல்யாணச் சாப்பாடு பற்றிய கனவு எல்லோருக்கும் கைகூடுவதில்லை தானே. பெற்றோர்களுக்குப் பயந்து உடனே அவர்கள் ரயிலேறி வேறு மாநிலத்திற்குப் போய்விட்டார்கள்.

பிறகு சண்டை சச்சரவுகள் நடந்து அவர்களைக் குடும்பம் ஒதுக்கி வைத்தது. இரண்டு வருஷம் வட இந்தியாவில் போய் வேலை பார்த்தார்கள். கஷ்டப்பட்டார்கள். பின்பு நல்ல வேலை கிடைத்தது. பையன் பிறந்தான். மும்பை டெல்லி என மாறிமாறி சென்றார்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இரண்டு பிள்ளைகள். வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. பெண்ணின் பெற்றோர் சமாதானமாகிவிட்டார்கள். பையன் வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இன்றும் சில நாட்கள் தங்கள் திருமணத்தின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்து அந்தப் பெண் அழுகிறாள். காதலின் சந்தோஷம் கண்ணீரால் தான் எழுதப்படுகிறது போலும்

இந்த ஆணும் பெண்ணும் பாலையில் செல்லும் போது வழிப்போக்கர்களாக வரும் வைணவத் துறவிகளைச் சந்திக்கிறார்கள். துறவிகள் பாலையில் எங்கே போகிறார்கள்.. யாசிப்பதற்குப் பாலைநிலத்தில் என்ன இருக்கிறது. ஒருவேளை அவர்கள் திருமாலை வழிபடுவதற்காகச் செல்லும் யாத்ரீகர்களாக இருக்கக்கூடும்.

துறவிகளிடம் அந்தக் காதல் ஜோடி ஏதாவது உதவி கேட்டார்களா அல்லது துறவிகளோ இந்தப் பாலை நிலத்தில் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போகிறார்களே என்று விசாரித்தார்களா என்று தெரியாது. ஆனால் அவர்களுக்குள் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறது. துறவிகளிடம் ஒருவேளை அந்தப் பெண் உண்மையைச் சொல்லியிருக்கலாம். துறவிகள் உணவும் குடிநீரும் கொடுத்து இருக்கலாம். அந்தத் துறவிகளை விட்டு காதல் ஜோடி விலகி தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்

இந்தக் காட்சி திரைப்படத்தில் வருவது போலக் கண்முன்னே விரிகிறது. பாலைநிலத்தினுள் இரண்டு ஈரமான காட்சிகள். துறவிகளின் வருகை மழை வருவதைப் போன்றது. காதல் ஜோடிகளின் பயணம் வானவில் தோன்றுவதைப் போன்றது. காதல் ஜோடிக்குத் துறவிகள் ஏதாவது அறிவுரை சொன்னார்களா எனத் தெரியவில்லை. ஆனால் துறவிகளும் காதலைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது

இந்தக் காட்சியை மனதின் மூலையில் வைத்துக் கொண்டு கலித்தொகையின் ஒன்பதாவது பாடலைப் பாருங்கள். பாலைபாடிய பெருங்கடுக்கோ பாடியது. இவர் ஒரு சேரமன்னர் என்கிறார்கள். இவரது 58 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. எல்லாப் பாடல்களும் ஒருவர் எழுதியது தானா அல்லது பாலை பாடிய பெருங்கடுங்கோ எனப் பாண்டி நாட்டில் ஒருவரும் சேர நாட்டில் ஒருவரும் இருந்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

சேர மன்னர் என்றால் ஏன் பாலையை மட்டும் பாடியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் பாலையை முதலில் இடம்பெறச் செய்திருக்கிறார். இதை அன்றைய கவிகள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று வியப்பாகவே இருக்கிறது.

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை 5

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்! கண்டனம்! கடத்து இடை

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?

நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15

நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20

என, ஆங்கு

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

சிறந்தானை வழிபடீஇ சென்றனள்,

அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே

என்று பாடல் இரண்டு காட்சிகளை விவரிக்கிறது.

முதற்காட்சியில் உலர்ந்த நத்தை ஓடு போலக் காணப்படும் பாலைநிலத்துக் கிராமம் ஒன்றைத் துறவிகள் கடந்து போகும் வழியில் ஒரு தாய் அவர்களிடம் ஒரு இளம்பெண்ணும் பையனும் போவதை வழியில் கண்டீர்களா என்று கேட்கிறாள்.

அவள் கேள்வியில் கோபம் வெளிப்படவில்லை. கவலையே வெளிப்படுகிறது. அந்தக் காலத்தில் பூப்பு எய்தும் வரை தான் பெண் தாயின் பொறுப்பில் வளர்ந்தாள். அதன்பிறகு செவிலித்தாய் தான் அவளை வளர்ப்பாள். இங்கே துறவிகளிடம் கேட்பவளும் செவிலித்தாயே. அவளுக்குத் தான் இளம்பெண்ணின் மனதும் காதலும் புரிகிறது. அவளுக்குத் தன் மகளின் காதலனைப் பிடிக்கவில்லை. எவளோ ஒருத்தியின் மகன் என்று என்றே குறிப்பிடுகிறாள். ஒருவேளை பொய் கோபமாகவும் இருக்கக்கூடும். அந்தக் காதலர்கள் நீண்டகாலமாகவே காதலித்து வந்திருக்கிறார்கள். அதைச் செவிலித்தாய் சொல்வதன் வழிய உணரமுடிகிறது

அதாவது நேற்றுவரை என் மகளும், வேறொருத்தியின் மகனும் மற்றவர் அறியாது தமக்குள் கூடியிருந்தார்கள். இன்றோ மற்றவர் அறியுமாறு ஒன்றாக வெளியேறிச் சென்றுவிட்டார்கள் என்கிறாள்

வைணவத் துறவிகள் வழியில் காதல் ஜோடியைக் கண்டதை ஒத்துக் கொள்கிறார்கள். துறவிகள் பொய் சொல்லாதவர்கள். ஆகவே கண்டதைச் சொல்லுகிறார்கள். துறவிகளிடம் கேட்டால் நிச்சயம் உண்மையைச் சொல்வார்கள் என்று அறிந்து தான் அந்தச் செவிலித்தாய் கேட்டாளோ என்னவோ, இளஞ்ஜோடிகளைப் பற்றித் துறவிகள் தரும் பதில் வியப்பாக இருக்கிறது

அது பாடலின் இரண்டாம் பகுதி.

அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயே, மலையில் விளையும் சந்தனத்தால் மலைக்கு என்ன பயனிருக்கிறது. பயன்படுத்துகிறவர்களுக்குத் தானே சந்தனம் வாசம் தருகிறது. கடலில் விளையும் முத்தால் கடலுக்கு என்ன பயன். மாலையாக்கி அணிபவர்களுக்குத் தானே முத்து அழகைத் தருகிறது. யாழில் இசை பிறந்தாலும் யாழுக்கு என்ன பயன். கேட்பவருக்குத் தானே இனிமையாக இருக்கிறது. ஆகவே உன் மகள் தன் காதலனுடன் சென்றது சரியே. சந்தனமரத்தை வளர்ந்த மலையைப் போல, முத்தை விளைவித்த கடலைப் போல, இசை தந்த யாழைப் போல நீ இருப்பதே சரி என்கிறார்கள்

துறவிகளின் இந்தப் பதில் செவிலித்தாயிற்குச் சமாதானம் அளித்திருக்காது. அவள் உண்மையில் துறவிகளிடம் கேட்க விரும்பியது தன் மகள் பாதுகாப்பாக இருக்கிறாளா. வழியில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டதா என்று தானோ.

துறவிகள் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் பதிலில் இருக்கிறது.

இவ்வளவு வெளிப்படையாகத் துறவிகள் காதலுக்கு ஆதரவு தருவது வியப்பளிக்கிறது. துறவிகளும் காதலை வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாகவே கருதுகிறார்கள். போற்றுகிறார்கள்.

தாயே நீ வருந்தாதே, உன் மகள் சிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள், அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும் என்கிறார்கள்.

இந்தப் பதிலில் அந்தக் காதலனுக்கும் துறவிகளுக்கும் இடையே உரையாடல் நடந்திருப்பதையும் அவர்களுக்குக் காதலன் பணிவிடைகள் செய்திருப்பதும் மறைந்து புலப்படுகிறது.

காதலின் பெருமையைத் துறவியின் வழியாகப் பேசவைத்திருப்பதே இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.

இந்தப் பாடலில் வரும் செவிலித்தாயிற்குத் தன் மகளின் காதல் தெரியும். அவள் இப்படி உடன்போக்குதலை மேற்கொண்டு விட்டாளே என்று தான் கவலை கொள்கிறாள். அந்தப் பெண்ணை பெற்ற தாய் என்ன நினைத்திருப்பாள். அல்லது தந்தை என்ன செய்தார் என்று பாடலில் இல்லை.

பாலைபாடிய பெருங்கடுக்கோவின் பாடல் முடிந்துவிட்டது. ஆனால் அந்தக் காட்சி நமக்குள் மறைவதில்லை.

அந்த இளம் ஜோடி எங்கே செல்வார்கள். வேறு நிலத்திற்குச் சென்று வாழுவார்களா. தன் நிலம்விட்டுப் போகிறவர்கள் திரும்பவும் சொந்த நிலத்திற்குச் சொந்த ஊருக்குத் திரும்புதல் எளிதானதா. வாழ்க்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இப்படிதான் இருந்திருக்கிறது. இன்றும் இப்படித் தானிருக்கிறது.

துறவிகள் சொன்ன அறிவுரையை செவிலித்தாய்  மௌனமாகக் கேட்டுக் கொள்கிறாள். துறவிகளைக் கோவித்துக் கொள்ளவில்லை. இன்று நிலைமை தலைகீழாகவிட்டது. ஜாதி விட்டு ஜாதி காதலித்த குற்றத்திற்காகக் காதலன் கொல்லப்படுகிறான். காதலி எரிக்கப்படுகிறாள். வன்கொலைகள் நடக்கின்றன.

பாலை நிலத்து முரட்டு மனிதர்களிடம் கூடத் துறவிகளால் காதலின் இயல்பைச் சொல்லிப் புரிய வைக்க முடிந்திருக்கிறது. ஆனால் நிகழ்காலப் படித்த மனிதர்களிடம் தான் மூர்க்கமான குரூரம் நிரம்பியிருக்கிறது

வீட்டைவிட்டு ஓடும் எவராலும் தங்களின் இருபது வருஷ, இருபத்தைந்து வருஷ நினைவுகளை எடுத்துக் கொண்டு போக முடியாதே.

ஐங்குறுநூறு பாடலில் காதலனுடன் உடன்போக்கிய மகள் சிறுவயதில் விளையாடிய பொருட்களைப் பார்த்துப் பார்த்து செவிலித்தாய் வருந்துகிறாள். பிரிவு காதலர்களுக்கு மட்டுமேயானதில்லை. பெற்றோரையும் பீடிக்கக்கூடியதே.

கானல் உருவங்களைப் போல அந்தக் காதலர்கள் பாலைநிலத்தில் செல்லும் காட்சி மனதில் அழியாச்சித்திரமாக உருக்கொண்டிருக்கிறது. கலித்தொகையில் இப்படி உணர்ச்சிப்பூர்வமான நாடகத்தருணங்கள் நிறையவே இருக்கிறது.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணைப் பற்றி வேறு ஏதாவது தேசத்தில் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கிறதா, பாடல் இயற்றியிருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்

சீன இலக்கியத்தில் இப்படி ஒரு பாடலிருக்கிறது.

ஹ்சியாங்-ஜூ ஒரு இளம் கவிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேலையை இழந்தார். ஒருநாள் அவர் பணக்காரனின் விருந்திற்குச் சென்று பாடினார். அந்தப் பாடலில் மயங்கிய பணக்காரனின் மகள் சோ வான்-சான் அவர் மீது காதல் கொண்டு அவருடன் ஓடிப்போனாள், அவர்கள் ஒன்றாக ஒரு மதுக்கடையை அமைத்து வாழ்ந்தார்கள். காலம் மாறியது. தனது காதல்கவிதைகளின் மூலம் ஹ்சியாங்-ஜூ புகழ்பெற்ற கவிஞராக மாறினார். பணத்திற்காகத் தனது காதல் கவிதைகளை விற்ற ஆரம்பித்தார். ஒரு ஆசைநாயகியைப் பெறுவதற்காகக் காதல்கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கணவனின் இந்த நடவடிக்கைகளைத் தாங்க முடியாமல் சோ வான்சான் ஒரு கவிதை எழுதியிருக்கிறாள்.

SONG OF SNOW-WHITE HEADS என்ற தலைப்பில் அந்தக் கவிதை வெளியாகியிருக்கிறது.

இது ஒரு பெண்ணின் பார்வையில் தன் காதலின் நினைவுகளைப் பேசுகிறது.

சங்க இலக்கியத்தில் வரும் செவிலித்தாய்க்கு எத்தனை வயது. அவளுக்குச் சொந்த மகள் கிடையாதா, அவள் ஏன் வளர்ப்பு மகள் மீது இத்தனை பாசம் வைத்திருக்கிறாள். அவளுக்கு வேறு துணை ஏதும் இல்லையா. ஒரு செவிலித்தாயின் கீழே ஊரிலிருந்த இளம்பெண்கள் யாவரும் ஒன்றாக இருந்தார்களா

பழங்குடி சமூகத்தில் இப்படியான பழக்கம் இருக்கிறது. வெர்யர் எல்வின் கோண்டு இனத்தில் இப்படியான பழக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறாரே. ஒரு கிராமத்தில் பல்வேறு சாதியினர் குடியிருந்து வந்த சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் ஒன்றாக ஒரே இடத்தில் அல்லது ஒரே பெண்ணின் கீழே இருப்பதற்குச் சமூகம் அங்கீகரித்ததா.

செவிலித்தாயின் சொந்தவாழ்க்கையைப் பற்றி அதிகப்படியாக என்ன தகவல்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஒருவேளை சொந்த தாய் செவிலித்தாய் என்பது கவிதைக்காக உருவாக்கபட்ட தாய்மையின் இருவேறு படிமங்களா.

பொதுவாகச் சங்கக் கவிதைகளில் பயண வழியில் மானைக் காணுவார்கள். அல்லது ஏதாவது ஒரு விலங்கினைக் காணுவார்கள். அதைக் குறியீடாகச் சொல்லி காதலியோ, காதலனோ தனது நிலையை விளக்குவார்கள். இந்தப் பாடலில் ஒரு இளம் ஜோடியைத் துறவிகள் காணுகிறார்கள். துறவும் காதலும் எதிர்நிலையானது. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில் தான் இந்தக் கவிதை புதியதாகிறது.

பாலை பாடிய பெருங்கடுக்கோ மன்னர் என்றால் காதல் திருமணத்தை அவர் சட்டமாக்கியிருக்கலாமே. மன்னர் ஏன் இப்படிப் பொதுவாகப் பேசுகிறார். பெருங்கடுக்கோ பாடல்களை ஒருசேர வாசித்தால் அவர் ஒருவராக இருக்கமுடியாது என்ற எண்ணமே தோன்றுகிறது.

தொகை நூல்களை இன்று தொகுப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அன்று எப்படி நானூறு கவிதைகளை ஒரு தொகுப்பாகத் தேர்வு செய்தார்கள். யாருக்கு அடுத்து யார் இடம்பெறுவது என்பதை எப்படி முடிவு செய்தார்கள். தொகைநூல் வெளியான போது என்ன சர்ச்சைகள் சண்டைகள் நடந்தன. எதுவும் நமக்குத் தெரியவில்லை.

இன்று ஒரு தொகுப்பில் நமது கதையோ, கவிதையோ இடம்பெற்றால் தொகுப்பின் ஒரு பிரதியும் ஐநூறு ரூபாயும் அனுப்பித் தருகிறார்கள். அன்று அகநானூறு புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றவர்களுக்குத் தகவல் எப்படித் தெரிந்திருக்கும். என்ன சன்மானம் கொடுத்திருப்பார்கள். எப்படிப் பிரதி கைவசமாகியிருக்கும்.

தொகுப்பில் ஒரேயொரு பாடல் மட்டுமே இடம்பெற்ற கவிஞர் ஒரு பாடல் தான் எழுதியிருப்பாரா என்ன. அவரது மற்ற பாடல்கள் ஏன் காலத்தில் நிற்கவில்லை.

தொகுப்பில் இடம்பெறாத முக்கியக் கவிஞர்கள் என்னவாகியிருப்பார்கள். கவிதை எழுதுகிற மன்னரும் கவிதை எழுதுகிற கொல்லரும் ஒன்றாகப் பழகியிருப்பார்களா, ஒன்றாகச் சேர்ந்து சுற்றியிருப்பார்களா,

இப்படி நிறையக் கேள்விகள் எழுகின்றன. நிறையப் பதில்களும் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தப் பதில்கள் எனக்குத் திருப்தி தரவில்லை. குறுந்தொகை பாடலும் ஜப்பானியச் செவ்வியல் கவிதையும் ஒன்று போல இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சீனாவின் தொகைநூல்களும் நமது தொகை நூல் மரபும் ஒன்று போலத் தானே இருக்கிறது.

தேனடையில் எந்தப் பக்கம் பிய்த்துத் தின்றாலும் இனிப்பாக இருப்பது போலச் சங்க இலக்கியத்தில் எதைப்படித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

••

0Shares
0