“தி ப்ரூடலிஸ்ட்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி லாஸ்லோ டோத் நூலகம் ஒன்றை வடிவமைப்பதாகும். அதுவும் வாசிப்பதற்கு ஏற்ற விளக்குடன் கூடிய நாற்காலி ஒன்றையும் வடிவமைக்கிறான்.

தொழிலதிபர் ஹாரிசன் லீ வான் ப்யூரனுக்காக அந்த நூலகத்தை வடிவமைக்கும்படி அவரது மகன் லாஸ்லோவை அழைக்கிறான்.
லாஸ்லோ டோத் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கட்டிடக்கலை நிபுணர். மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆகவே நூலகத்தை மறுஉருவாக்கம் செய்யும் போது அதைத் தனது கனவின் வடிவமாக மாற்ற முனைகிறார்.
நூலகம் என்பது புத்தகங்கள் அடுக்கபட்ட இடமோ, வாசிப்பு அறையோ இல்லை. அது ஒரு தனித்துவமிக்க வெளி. வாசிப்பு என்பதை உன்னதமாக நிகழ்வாக மாற்ற முயலுகிறார். வெளிச்சம் பாயும் நாடகமேடையில் தனித்து அமர்ந்துள்ள கதாபாத்திரம் போல வாசிப்பவரை உணர வைக்கிறார்.
உயர்ந்த கூரை, புத்தங்களை அடுக்குவதற்காக அவர் உருவாக்கிய முறை, சுவர்களின் வண்ணம். திரைச்சீலை என யாவும் நேர்த்தியாக உருவாக்கபடுகின்றன . ஆனால் ஹாரிசனுக்கு அந்த வடிவமைப்பு பிடிக்கவில்லை. அதில் தங்கள் குடும்பப் பெருமை வெளிப்படவில்லை என நினைக்கிறான். நூலகக் குவிமாடக் கண்ணாடி கிழே விழுந்து உடைவது அவர்கள் அதிகாரத்தின் சிதறலேயாகும். இதன் காரணமாக அவர்களுக்குள் கருத்துமோதல் உருவாகிறது. லாஸ்லோ வெளியேற்றப்படுகிறார்.

லாஸ்லோவின் அழகியல் சொற்களுக்கு அப்பாற்பட்டது. தான் உருவாக்கிய கட்டிடம் தனது அழகைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைப்பதில்லை. மாறாக உண்மையான அழகை உணரச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்.
மானசீகமாக லாஸ்லோ உருவாக்கிய நாற்காலியில் அமர்ந்து கையில் விருப்பமான புத்தகம் ஒன்றை வைத்து படிப்பது போல கற்பனை செய்து கொள்கிறேன். கலை தரும் மகிழ்ச்சிக்கு நிகரே கிடையாது.
••