அழிசி வலைப்பக்கத்தில் அ.கி. கோபாலன் மற்றும் அ.கி. ஜயராமன் நேர்காணலை ஸ்ரீநிவாச கோபாலன் வெளியிட்டுள்ளார்.

1995ல் புதிய பார்வையில் வெளியான இந்த நேர்காணலை எடுத்தவர் குரு. புகைப்படங்களை எடுத்தவர் சுதாகர்
ஸ்ரீநிவாச கோபாலன் இதனை மீள்பிரசுரம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில வேட்டை’, ‘அவமானச் சின்னம்’ (அமெரிக்கா) போன்ற உலகின் சிறந்த நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழ்ச்சுடர் நிலையம் மூலம் வெளியிட்டவர் அ.கி. கோபாலன்.
உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தன என்ற வரலாற்றை கோபாலன் இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வறுமையுடன் போராடிய படி எவ்வாறு பதிப்புப் பணியை மேற்கொண்டார் என்பதையும் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்
சரத் சந்திரர் நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் அ.கி. ஜெயராமன். சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த போதும் சரத் சந்திரரை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.
இந்த இருவரின் புகைப்படங்களையும் இப்போது தான் பார்க்கிறேன். நீண்டகாலம் பழகியவர்கள் போன்ற நெருக்கம் உண்டாகிறது.
தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ந்த முன்னோடிகளைக் கொண்டாடி வரும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இவரது முயற்சியால் தான் க.நா.சுவின் நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ராணிதிலக் இதனை தொகுத்துள்ளார்.
இந்த நேர்காணல் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். அழிசி வலைப்பக்கத்திற்கு சென்று இதனை வாசிக்கலாம்.
இணைப்பு.