அஞ்சலி

எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்தார். அவருக்கு என் அஞ்சலி. நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த தனித்துவமும் கலைநுட்பமும் கூடிய எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவர் நடத்திய முன்றில் , இலக்கியச் சிற்றிதழ்களில் தனித்துவமானது. அதில் இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 90களில் முன்றில் நடத்திய மூன்றுநாள் இலக்கியக் கருத்தரங்கு மறக்கமுடியாதது. மா. அரங்கநாதனின் புதல்வர் நீதியரசர் மகாதேவன் கவிஞர் பிரமிளுடன் நெருக்கமாக இருந்தவர். பிரமிளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆகவே ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் புத்தகக் கடைக்குத் தினமும் மாலையில் பிரமிள் வருவது வழக்கம். அவரைச்சந்திப்பதற்காகவே நண்பர்கள் முன்றிலுக்கு வருவார்கள். மா. அரங்கநாதன் மரபிலக்கியமும் நவீன இலக்கியமும் ஆழ்ந்து கற்றவர். சைவ சித்தாந்தம் குறித்து விரிவாகப் பேசக்கூடியவர். ஊர் சுற்றியாகத் திரியும் என்னைப் போன்றவர்களுக்காகத் தனது வீட்டிலிருந்து உணவு தயாரித்துக் கொண்டுவந்து தருவார் மா. அரங்கநாதன். தந்தையைப் போலவே மகாதேவனும் இலக்கியவாதிகள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். பேரன்பு காட்டிய மா.அரங்கநாதன் இன்றில்லை. அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

0Shares
0