இரவு ரயிலில் இரண்டு பெண்கள்

ஒரு ரயில் பயணத்தை இத்தனை அழகாகப் படமாக்கமுடியுமா என வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் SOMETHING USEFUL பெண் இயக்குநரான .பெலின் எஸ்மர் இயக்கிய துருக்கி நாட்டுப்படம். 2017ல் வெளியானது

வழக்கறிஞரும் கவிஞருமான லேலா தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்கள் 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்று சேரும் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பக் காத்திருக்கிறாள். அது நீண்ட தூர ரயில் பயணம்.

தற்செயலாக ரயில் நிலையத்தில் பயிற்சி செவிலியராக வேலை செய்யும் கனனை சந்திக்கிறாள். அவளது தந்தை தன் மகள் நகரத்தில் ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறாள். அவளுக்கு ரயிலில் ஏதாவது உதவி வேண்டும் என்றால் கவனித்துக் கொள்ளுங்கள் என்று லேலாவிடம் கேட்டுக் கொள்கிறார்.

தான் வேறு வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறேன். ஆனாலும் ஏதாவது தேவை என்றால் அவசியம் உதவுகிறேன் என்கிறாள் லேலா.

ரயில் வருகிறது. அவர்கள் பயணம் புறப்படுகிறார்கள். படத்தின் இறுதி காட்சிகளைத் தவிர முழுவதும் இரவில் செல்லும் ரயில் பயணம் தான். இத்தனை அழகாக ரயில் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை, கடந்து செல்லும் குடியிருப்புகளை, சுரங்கப்பாதை மற்றும் விளக்குகள் நிறைந்த இரவின் வானத்தை, வேறுவேறு ரயில் நிலையக்காட்சிகளை,. பல்வகைப்பட்ட பயணிகளைக் கண்டதில்லை.

ரயிலின் கழிப்பறையில் நின்றபடியே தன் காதலனுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கனனாவை காணும் லேலா அவளைத் தன்னுடன் ரயிலில் செயல்படும் உணவகத்திற்கு வரும்படி அழைக்கிறாள். இவரும் செல்கிறார்கள். பரஸ்பர அறிமுகம் நடக்கிறது. அப்போது தான் ஒரு கவிஞர் என லேலா காட்டிக் கொள்வதில்லை.

ஒரு இளம்பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என வியப்புடன் கன்னை கேள்வி கேட்கிறாள்.

அவர்கள் உரையாடலின் வழியே எதற்காகக் கனனா பயணம் செய்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறாள். அந்த உண்மை தான் படத்தின் மையச்சரடு. நீண்டகாலம் படுக்கையில் நோயாளியாகக் கிடந்த யாவுஸ் என்பவரின் தற்கொலைக்கு உதவுவதற்காகக் கேனன் பயணிப்பதாக லீலா அறிந்து கொள்கிறாள்

அவளால் அதை நம்ப முடியவில்லை. கனனா தனது காதலனின் பொருட்டு இது போன்ற காரியத்தில் ஈடுபடப்போவதாகச் சொல்கிறாள். சட்டெனப் படம் திசைதிருப்பலை அடைகிறது.

இந்தப் பயணத்தின் ஊடே விரியும் இரவுக்காட்சிகளும் ஒளிரும் விளக்குகளும் ரயிலுக்குள் ஊடுருவும் வண்ண ஜாலங்களும் இருளில் மூழ்கியிருக்கும் தூரத்துக் குடியிருப்புகளும் உறக்கம் வழியும் முகத்துடன் காத்திருக்கும் பின்னிரவு பயணிகளும். ரயில் நின்று போன இடத்தில் செயல்படும் இரவு நேர காபிக்கடையும் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு பெண்களுக்குள் ஏற்படும் உறவு மெல்ல நெருக்கமாகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். இதன்விளைவாகக் கனனாவிற்கு உதவி செய்ய முன்வருகிறாள் லேலா. யாவுஸை தேடி இருவரும் செல்கிறார்கள்

நீண்ட தூர இரவு பயணத்தில் நாமும் இணைந்து பயணிப்பது போலவே இருக்கிறது. பருந்துப் பார்வையில் காட்டப்படும் ரயில் காட்சிகளும், ரயில் பெட்டியினுள் நடைபெறும் நிகழ்வுகளும்,, இசைக்கலைஞர்களின் சந்திப்பும் அந்தப் பெண்களின் கடந்தகாலம் வெளிப்படும் போது உருமாறும் வெளிச்சமும் எனப் படம் கவித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு.

. நீண்ட இரவு பயணத்தின் முடிவில், ஊர் வந்து சேரும் அவர்கள் யாவுஸ் வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே படம் அப்படியே திரும்பி விடுகிறது. லேலாவை பார்த்தவுடனே யாவுஸ் அவள் புகழ்பெற்ற கவிஞர் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறான். அவளது கவிதைகளின் தீவிர வாசகன் என்று அவள் எழுதிய புத்தகங்களைச் சொல்கிறான். எதிர்பாராத அந்த அன்பும் நட்பும் லேலாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அவள் யாவுஸை புரிந்து கொள்கிறாள். அந்த வீட்டின் மாடியில் வசிக்கும் பெண்ணின் இசை என்பது வாழ்க்கையின் சங்கீதம் என்பதை உணருகிறாள். வெகு அழகாகப் படம் நிறைவு பெறுகிறது

படத்தின் துவக்கத்தில் வயதில் மூத்தவளான லேலா இளையவளின் கதையை அறிந்து உதவ முற்படுகிறாள். ஆனால் கனனாவின் கதையை விடவும் அதிகம் ரகசியங்களும் மறைக்கபட்ட விஷயங்களும் கொண்டது லேலாவின் வாழ்க்கை. அவள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவளது மனது அன்பிற்கு ஏங்குகிறது என்பதைப் படம் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது

குறைந்த கதாபாத்திரங்களின் வழியே ஒரு கதையை நேர்த்தியாகக் கொண்டு செல்கிறார் இயக்குநர் பெலின் எஸ்மர். ஒரு பெண் இயக்குனரால் தான் இப்படியான படத்தை எடுக்க முடியும்..

இவரது வாட்ஸ் டவர் என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். முக்கியமான படமது. அந்தப் படத்திற்கும் இந்தக் கதைக்கும் மெல்லிய தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். அதிலும் மலைநகருக்குச் செல்லும் ஒரு பேருந்து பயணம் தான் படத்தின் மையம். காட்டினுள் அமைக்கப்பட்ட கோபுரத்தில் தனியே நின்றபடியே காவல்காக்கும் அந்த இளைஞனைப் போலவே தான் யாவுஸ் இருக்கிறான்.

படத்தின் துவக்கக் காட்சியில் கிராஃபிட்டி கலைஞராக உள்ள ஒருஇளைஞன் ரயில் நிலையச்சுவர் ஒன்றில் பறவை ஒன்றை வரைகிறான். போலீஸ்காரன் அவனைத் துரத்துகிறான். அந்தப் பறவையை வரைபவன் வேறு வேறு இடங்களில் இறங்கி இதுபோலப் பறவைகளை வரைகிறான். படத்தில் அந்தப் பறவை ஒரு குறியீடு போலவே இடம்பெறுகிறது. யாவுஸ் வீட்டிற்குச் செல்லும் வழியிலும் அதே பறவை இடம்பெறுகிறது. இந்தக் கலைஞனை லேலா புரிந்து கொள்கிறாள். அவனது சுதந்திரத்தை, தைரியத்தை ரசிக்கிறாள்.

கனனை விட வயதில் மூத்தவளாக இருந்த போதும் லேலாவிடம் முதிர்ச்சியில்லை. பெரிய அனுபவங்கள் இல்லை. ஆனால் கனனா அபூர்வமான பெண்ணாக இருக்கிறாள். அவள் காதலுக்காக எதையும் செய்யத் தயாராகா இருக்கிறாள்.

இரண்டு மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து ஒரே துளியாகிவிடுவது போன்ற அழகிய அனுபவத்தையே படம் தருகிறது.

0Shares
0