சென்னை புத்தகத் திருவிழா -1

கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது.

புகைப்படம், நன்றி : சீனிவாசன் நடராசன்

தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது.

தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன்.

வழியில் சந்தித்து புதிய புத்தகம் ஒன்றைக் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்கள் அடுத்த ஐந்து நிமிஷத்தில் நான் அந்த நூலை வெளியிட்டேன் என்று முகநூலில் பகிர்ந்து விடுகிறார்கள். இப்படி நான் அறியாமலே தினமும் நாலைந்து நூல்களை வெளியிட்டு வருகிறேன்.

கண்காட்சி வளாகத்தினுள் எந்தக் கடை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருக்கிறது.

இதற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். தேவையான புத்தகங்களைதேடிச் சென்று வாங்கலாம்.

உள்ளே நெட்வொர்க் சரியாக இல்லை என்பதால் வங்கி அட்டைகளைச் செலுத்தி வாங்கச் சிரமப்படுகிறார்கள்

மிக மோசமான கழிவறை. உள்ளே கால் வைக்க முடியவில்லை.

சென்ற முறை அரங்கிற்குள்ளாகவே காபி, டீ விற்பனை செய்யும் தள்ளுவண்டி வருவதுண்டு. இந்த முறை அதை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தேநீர் அருந்த அரங்கை விட்டு வெளியே போக வேண்டும். மிக மோசமான காபி. டீ. இதற்கு தினமும் ஒரு விலை.

சாகித்ய அகாதமியில் நீண்டகாலத்தின் பின்பு ஜீவன் லீலா நூலை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த நூலைத் தேடிக் கொண்டிருந்த வாசகர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது போலவே புகழ்பெற்ற உருது எழுத்தாளரான ராஜீந்தர் சிங் பேடியின் சிறுகதைகளை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு

பவேந்திரநாத் சைக்கியா எழுதிய அன்புள்ள அப்பா என்ற புத்தகம் நேஷனல் புக் டிரஸ்டில் கிடைக்கிறது. மிக நல்ல நாவல்

இந்திரா கோஸ்வாமி எழுதிய தென் காமரூபத்தின் கதை மிகச்சிறந்த இந்திய நாவல். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது

பழைய புத்தகக் கடைகளில் தேடி வாங்கிய அபூர்வ நூல்களை பற்றி விட்டல்ராவ் எழுதிய வாழ்வின் சில உன்னதங்கள் சிறந்த புத்தகம் நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது

நேற்று புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

0Shares
0