செல்லுலாயிட் மேன்

இலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடமில்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல்.

சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே வாய்ப்பு பூனே திரைப்படக்கல்லூரியிலுள்ள இந்திய திரைப்பட ஆவணக்காப்பகம் மட்டுமே. அதை உருவாக்கியர் பி.கே.நாயர்.

இந்தியாவின் முதல் படம் துவங்கி முக்கியப் படங்கள் அத்தனையும் தேடித்தேடி சேகரித்து ஆவணப்படுத்தியவர் நாயர். உலகச் சினிமாவின் முக்கியப் படங்களும் கூட இங்கே ஆவணப்படுத்தபட்டுள்ளன. பி.கே.நாயர் இவற்றைத் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகத் திரையிட்டு கற்றுத் தந்தார். பொதுமக்கள் ரசிக்கும் படியாகப் பொதுதிரையாடலை உருவாக்கினார். சின்னஞ்சிறிய ஊர்களுக்குக் கூட உலகச் சினிமா சென்று சேர வேண்டும் என்று பிரிண்டை அனுப்பித் திரையிடச் செய்தார்.

இந்திய சினிமாவை பாதுகாத்த தந்தை என்றே அவரைக் கூற வேண்டும். அவரது பங்களிப்பு மற்றும் ஆவணப்படங்களைச் சேகரித்து நிகழ்வு விரிவாக விளங்குகிறது செல்லுலாயிட் மேன் என்ற ஆவணப்படம். நாற்பதுக்கும் மேற்பட்ட உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. சிவேந்திர சிங் துங்கர்பூர் இதனைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

பத்து வயதிலே சினிமா மீது ஆர்வம் கொண்டார் பி.கே.நாயர் திருவனந்தபுரத்திலுள்ள சினிமா தியேட்டருக்கு தினமும் இரவுகாட்சி காண போய்விடுவார். சினிமா டிக்கெட்டின் பாதியை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வார். சினிமா இயக்குனராக வேண்டும் என விரும்பி உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால் ஸ்டுடியோ அனுபவம் அவரது மனதை மாற்றியது. சினிமாவை கற்று தருவதிலும் சினிமாவை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டத்துவங்கினார்.

1964 இல் இந்திய திரைப்பட ஆவணக் காப்பகம் பூனேயில் தொடங்கப்பட்டது. 1965 இந்தக் காப்பகத்தில் நாயர் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். அவர் பணியாற்றிய காலத்தில் படித்தவர்களே இன்று இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள். அத்தனை பேரும் தாங்கள் எவ்வாறு நாயரால் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பி.கே.நாயரும் சதீஷ் பகதூரும் இல்லாமல் போயிருந்தால் இந்திய சினிமா சிறந்த இயக்குனர்கள் பலரை இழந்திருக்கும் என்பதே உண்மை. மாற்றுசினிமா முயற்சிகளுக்கு இவர்களே அடித்தளம் அமைத்தவர்கள். அதிலும் குறிப்பாகப் பிலிம் சொசைட்டி மூலமாக இந்தியா முழுவதும் நல்ல திரைப்படங்களைத் திரையிடச் செய்து அவை குறித்த விவாதங்களை உருவாக்கினார்கள்.

இந்த ஆவணப்படத்தில் பாலுமகேந்திரா தான் நாயரால் உருவாக்கபட்டவன். அவர் தனக்கு அறிமுகம் செய்த உலகப்படங்களே தன்னை உருவாக்கின என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். நாயருக்கு எந்தப் படத்தில் எந்த ரீலில் என்ன காட்சிகள் உள்ளது எனத் துல்லியமாகத் தெரியும். அவர் நாள் முழுவதும் சினிமா பார்த்தபடியே இருந்தார். சினிமாவை சாப்பிட்டார். சினிமாவை குடித்தார். அதுவே உண்மை என்கிறார்கள்

தாதா சாகே பால்கே இயக்கிய இந்தியாவின் முதல்படத்தை எப்படிப் பி.கே.நாயர் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினார் என்பதில் துவங்கி அரிய வெளிநாட்டுப் படங்களை எப்படி ரகசியமாகப் பிரதியெடுத்து வைத்துக் கொண்டு மாணவர்களுக்குக் காட்டினார். சினிமாவை அவர் நேசித்த அளவிற்கு யாரும் நேசிக்க முடியாது என்பதைப் பலரும் இப்படத்தில் சுயஅனுபவத்திலிருந்து நினைவு கூறுகிறார்கள்

குறிப்பாக மிருணாள் சென் தனது படங்களை ஆவணப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சி மற்றும் அரிய திரைப்படம் ஒன்றை தான் கண்டெடுத்து கொடுத்த நிகழ்வு பற்றி பேசுகிறார்.  ஜெயா பச்சன் தான் பூனேயில் படிக்கிற நாட்களில் எப்படி இரவுக்காட்சிக்கு தன்னை அவர் அனுமதித்தார் . ஒரு ஆளாக தனியே தான் எவ்வாறு உலகத்திரைப்படங்களை கண்டேன் என்பதைக் கூறுகிறார். இது போலவே  சையத் மிர்ஸா. குந்தன் ஷா, ராஜ்குமார் கிரானி. சந்தோஷ் சிவன். வேணு, ஷாஜி என் கரூண், அடூர்  கோபாலகிருஷ்ணன், ஜானு பருவா,  கிரீஷ் காசரவள்ளி, கமலஹாசன் எனப்பலரும் நாயரின் நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளார்கள்.

படம் முழுவதும் பி.கே.நாயர் நிதானமாக, துல்லியமாகத் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அதிலும் குறிப்பாகத் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேச அவர் கூச்சப்படுகிறார். அவரது மகளின் நேர்காணல் படத்திலுள்ளது. அது மறக்கமுடியாத ஒன்று. தனது தந்தை தங்கள் குடும்பத்தைவிடவும் இந்திய சினிமாவை அதிகம் நேசித்தார் என்று மகள் குறிப்பிடுகிறார்.

எங்கெல்லாம் பழைய படங்களின் பிரதிகள் கிடைக்க்கூடும் எனத் தேடித்தேடி சேகரித்தார் பி.கே.நாயர்.

இன்று பூனே ஆவணக்காப்பகத்தில் பனிரெண்டாயிரம் திரைப்படங்கள் பாதுகாக்கபட்டு வருகின்றன. அதில் எட்டாயிரம் இந்திய திரைப்படங்கள்.

மாணவர்களுடன் அவருக்கு இருந்த அன்பும் நல்லுறவும் பற்றி இயக்குனர் ஹரிஹரன் நெகிழ்வாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்பாகத் தனக்குப் பேட்டில்ஷிப் பொடம்கின் படத்தின் 16எம்எம் பிரிண்ட் ஒன்றை தந்து விரும்பிய அளவு பார்த்துக் கொள் என்றார் நாயர். நூறு முறைகளுக்கும் மேல் அந்தப் படத்தைக் கண்டிருக்கிறேன் என்கிறார் ஹரிஹரன்.

காலமாற்றம் நாயரின் உடலை தளரச் செய்கிறது. ஆனால் மனவலிமை அப்படியே இருக்கிறது. திரையரங்கில் படம் பார்க்கும் போதே கையில் சிறிய நோட்டு ஒன்றை வைத்துக் கொண்டு பென்டார்ச் உதவியால் அதில் குறிப்புகளை எழுதிக் கொண்டேயிருப்பார் நாயர். அவர் தன் வாழ்வில் பார்த்த அத்தனை படங்கள் பற்றியும் விரிவான குறிப்புகளுடன் எழுதி வைக்கிறார் என்கிறார்கள். அது தனித்த நூலாக வெளியானால் சினிமா ஆய்வாளர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்,

ரித்விக் கடாக்கோடு அவருக்கு இருந்த நட்பும் அன்பும் படத்தில் சிறப்பாகக் காட்சிபடுத்தபட்டுள்ளது. தன்னோடு இரண்டு மாதங்கள் கடாக் தங்கிய நாட்களை நினைவுகூறும் போது நாயரின் முகம் சந்தோஷத்தில் ஒளிர்கிறது.

சத்யஜித்ரே படத்தில் நடிப்பதற்காகச் சஞ்சீவ்குமார் ஒப்பந்தமாகிறார். அப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகத் தான் சத்யஜித்ரேயின் அத்தனை படங்களையும் பார்த்துவிட வேண்டும் என விரும்பி பூனேவிற்கு வந்து வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு அத்தனை திரைப்படங்களையும் பார்த்துவிட்டு பின்பு தான் Shatranj Ke Khilari படத்தில் நடித்தார். பிரபலமான ஒரு நடிகர் தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார் பி.கே.நாயர்.

பூனேதிரைப்படக் கல்லூரி வளாகத்திற்குள் தனது வாழ்நாளில் பாதியை கழித்த பி.கே.நாயர் 1991ல் ஒய்வு பெற்றார். பின்பு திருவனந்தரம் மாறிப்போனார். அங்கே மனைவி இறந்தபிறகு அவரால் தொடர்ந்து வாழ முடியவில்லை. ஆகவே மீண்டும் பூனே திரும்பினார். தான் சேகரித்த படங்களை யாரும் கவனமற்று அழித்துவிடக்கூடாது என்பதிலே அவரது முழுக்கவனமும் இருந்த்து. ஆகவே ஒய்வு பெற்ற பிறகும் அவர் ஆவணக்காப்பக பணிகளிலிருந்து விலகி கொள்ளவில்லை

கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாக்களை ஏற்பாடு செய்வதிலும் சினிமா சார்ந்த கருத்தரங்குகளில் கலந்து கொள்வதுவமாக வாழ்க்கையைக் கழித்தார்.

கறுப்பு வெள்ளை திரைப்படங்களின் அழகோடு ஒப்பிடும் போது இன்றைய டிஜிட்டில் சினிமாவில் ஏதோவொன்று குறைகிறது. இது காலமாற்றம் ஏற்படுத்திய விளைவு. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சினிமாபடப்பெட்டியை திறக்கும் போது வரும் வாசனை தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. சினிமா திரையிடல், புரொஜெக்டர். அதை இயக்கும் மனிதர்கள் இது தான் தனது வாழ்க்கை. பிம்பங்களை எவ்வளவு பார்த்தாலும் சலிப்பதேயில்லை. ஆனால் இன்றைய சினிமாவில் அது போலப் பிம்பங்கள் தன்னை வசீகரிக்கவில்லை என்கிறார் பி.கே.நாயர்.

2008 சத்யஜித் ரே நினைவு விருது நாயருக்கு வழங்கப்பட்டது.

நாயர் அரும்பாடுபட்டு சேர்த்த திரைப்படங்கள் இன்று முறையாகப் பராமரிக்கபடவில்லை. அவரைப் போலச் சினிமாவை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள் இன்று உருவாகவுமில்லை. சினிமா கலைப்படமோ வணிகப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது உயிர்வாழ வேண்டும். அற்ப காலத்திற்குள் அழிந்துவிடக்கூடாது,.

சினிமா என்பது வெறும் காட்சிபிம்பங்களில்லை. அவை மனித வாழ்வின் ஆவணங்கள். காலத்தின் சாட்சியங்கள். மனிதர்கள் கண்ட கனவுகளின் தொகுப்பு. நூறு ஆண்டுகாலம் கடந்து போனால் இன்று குப்பை என நாம் ஒதுக்கும் படம் கூட முக்கியமான வரலாற்றுச் சாட்சியம் ஆகிவிடும். ஆகவே திரைப்படங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார். சினிமாவை பாதுகாக்க முறையான பாதுகாப்பு கலன்களும் குளிர்பதனம் செய்யப்பட்ட இடமும் பராமரிப்பு செலவும் தேவை. அதில் இந்திய அரசு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை

ஆண்டிற்கு இருநூறு முந்நூறு திரைப்படங்களைத் தயாரிக்கும் தமிழ் திரையுலகில் இது போல ஒரு ஆவணக்காப்பகம் கிடையாது. அரசு இதைச் செய்ய உடனே முன்வர வேண்டும். டிஜிட்டில் வடிவில் அவை பாதுகாக்கபடுவது எளிதானது. அது போலச் சினிமாவை ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கான மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காமல் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாது

பி.கே.நாயர் போன்ற அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட மனிதர்களைக் காண்பது அபூர்வம். அவரை நான் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிக அன்பானவர். சினிமா பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும் துல்லியமாகச் சொல்லக்கூடியவர். தென்னிந்தியாவிலிருந்து நிறையப் பேர் பூனே திரைப்படக்கல்லூரியில் போய்ப் படிப்பதற்கு நாயர் உதவியிருக்கிறார். தனது 82வது வயதில் பூனேயில் நாயர் மரணமடைந்தார்

இந்த ஆவணப்படம் அவரது ஒப்பற்ற சேவைக்குச் செய்யப்பட்ட காணிக்கை என்றே கூறுவேன். நாயரை நினைவு கொள்வதன் மூலம் சினிமாவை இலக்கியத்தை இசையை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உறுதியடைய வேண்டும். இது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய வேலை. அரசும் தனியார் அமைப்புகளும் முன்வந்தால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

இந்திய சினிமாவிற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் பி.கே.நாயர். அவரைப்பற்றிய இந்த ஆவணப்படம் சினிமா பயிலுகிறவர்களும் சினிமாவை நேசிக்கிறவர்களும் அவசியம் காண வேண்டிய படம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் ஸ்டுடியோ அருண், எடிட்டர் லெனின்பெயரில் வழங்கப்படும் விருதை பி.கே.நாயருக்கு அளித்து கௌரவப்படுத்தியது மிகுந்த பாராட்டுக்குரிய செயல்.

••

0Shares
0