திருப்பூரில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி எனது நிமித்தம் நாவலுக்கு யாவரும் கேளிர் என்ற விருதை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளதுநிமித்தம் நாவல் காது கேளாதவர் பிரச்சனையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட நாவல். அதைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
இதற்கான விழா அக்டோபர் 29 அன்று காலை பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது.
•••
திருப்பூரைச் சார்ந்த கே. முருகசாமி அவர்களால் 1997ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டது. முருகசாமி அவர்களுக்கும் காது கேட்காது. இவர் கோவையில் உள்ள காதுகேளாதோருக்கான மாநகராட்சி பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். தனது குடும்பச் சூழ்நிலையின் காரணமாகப் படிப்பை தொடர முடியவில்லை.
இவர் 1986 ஆம் ஆண்டு திருப்பூர் காதுகேளாதோர் சங்கம் ஒன்றை துவங்கி அதன் மூலமாகப் பல்வேறு காதுகேளாதோர்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி, விழிப்புணர்வு கூட்டங்கள், சட்ட ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி வந்தார்.
காது கேளாதோருக்கெனச் சிறப்புப் பள்ளி ஒன்றைத் துவங்க வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டு செயல்பட்ட முருகசாமியின் இடைவிடாத முயற்சியால் 1997ல் ஏழு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களுடன் இப்பள்ளி துவங்கப்பட்டது.
தற்போது சுமார் 350 மாணவ-மாணவியர் வரை இங்கே தங்கி பயில்கின்றனர். இங்குப் பயிலும் மாணவ-மாணவியருக்கு உணவு, உடை, தங்குமிடத்தோடு அனைத்து அடிப்படை வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இப்பள்ளியின் மூலம் 350 குழந்தைகள் நேரடியாகவும், சுமார் 500நபர்கள் வரை மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.
***
Tirupur School for the Deaf
Murugampalayam, Iduvampalayam (Post)
Tirupur – 641687. TamilNadu Ph : +91 421 2261201 / 2910414
Mob : 9965631066 / 9488871536
***