துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். உடனடியாக அசோகமித்ரனின் நினைவு தான் வந்த்து. இந்த இளவரசியைப் பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். சிறிய பதிவு. ஆனால் அதற்குள் பெரிய கதை மறைந்திருக்கிறது

நடைவெளிப் பயணம் நூலில்
அசோகமித்ரன்
நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக இருக்கும். செகந்தராபாத்தில் நான்கைந்து புகைப்படக்காரர்கள். யார் மிகச் சிறந்த படங்களை எடுக்கிறார்கள் என்பதில் போட்டி. போட்டியே போட முடியாதவர் ராஜா தீன் தயாள். அவர் நிஜாம் அரசுப் புகைப்படக்காரர்.
அன்று (அதாவது 1920 அளவில்) உலகத்தில் மிக அழகான பெண் என்பவள், அவளையும் அவள் சகோதரியையும் தன் மருமகள்கள் ஆக்கிக் கொண்டார். இந்த இரட்டைத் திருமணத்துக்கு நிஜாம் போகவில்லை. திருமணம் பாரிஸில் நடந்தது. மணமக்கள் ஹைதராபாத் திரும்பியவுடன் பெரிய விருந்து, புகைப்படங்கள். அப்படங்களில் நிலோஃபரும் அவள் சகோதரியும் இருப்பார்கள்.

அப்பெண்கள் உலக அழகிகள் என்பதற்காக நிஜாம் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அன்று துருக்கி அரசன்தான் காலிஃப். இந்த உறவால் தன் மகன்களில் ஒருவன் காலிஃப் ஆகலாம் என்று நிஜாம் நினைத்தார். ஆனால் துருக்கியில் புரட்சி நடந்து, காலிஃ பதவியே போய் விட்டது.
நிஜாமின் இரு மகன்களும், உலக அழகிகள் மனைவியாகக் கிடைத்தாலும் நடத்தை கெட்டு இருந்தார்கள். காலிஃ பதவி வாய்ப்பு போய், அந்த இரு மகன்களும் தன் வாரிசே இல்லை என்று நிஜாம் அறிவித்தார். இரு மகன்களும் அற்பாயுளில் இறந்தும் விட்டார்கள். ஆனால் அந்த உலக அழகிகள் இன்றும் தீன் தயாள் இல்ல முன்னறையில் புகைப்படமாக அலங்கரிக்கிறார்கள்.
***