2021 டிசம்பர் 25ல் எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே வெளியானது.
இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டுரைகளில் சிலவற்றை நானே எனது இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நாவல் குறித்த காணொளி. டால்ஸ்டாய் மற்றும் அக்ஸின்யா குறித்த ஓவியம், நாவலின் வரைபடம், டால்ஸ்டாய் போஸ்டர், கனடாவில் நடைபெற்ற ஜும் சந்திப்பு, பாலம் புத்தக கடை ஏற்பாடு செய்த அறிமுக நிகழ்வு என வாசகர்கள், அன்பர்கள் விதவிதமாக இதைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறுகதைகள். கவிதைகளை விடவும் நாவல் படிப்பவர்கள் தமிழில் அதிகமிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் புதிய நாவலுக்காக காத்திருக்கிறார்கள். ஆர்வத்துடன் வாங்கிப் படித்து பகிர்ந்து கொள்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என் சார்பிலும், தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவின் பெரிய பதிப்பகம் ஒன்று இதனை வெளியிடுகிறது. இந்த ஆண்டிற்குள் வெளியாகக்கூடும்.
இந்த நாவலின் ரஷ்யன், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்புகளும் விரைவில் வெளியாக இருக்கின்றன.
எனது தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பணி முடிந்து அந்நூல் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. பிரபல ஆங்கிலப் பதிப்பகம் ஒன்று இத்தொகுப்பை வெளியிடுகிறது
சஞ்சாரம் நாவல் சாகித்ய அகாதமியால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதன் ஆங்கில மொழியாக்கம் நிறைவுபெற்றுவிட்டது
உபபாண்டவம் நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு முடிந்து ஜூன் மாதம் வெளியாகிறது.
துணையெழுத்து, தேசாந்திரி, கர்னலின் நாற்காலி ஆகியவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கின்றன.
ஏழு தலை நகரம், எலியின் பாஸ்வேர்ட் ஆகிய சிறார் நூல்களின் மொழியாக்கப் பணி நடந்து வருகிறது.
இந்த ஆண்டிற்குள் எனது பத்து நூல்கள் பிறமொழிகளில் வெளிவர இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.
•••
