பண்பாட்டின் வாசல்கள்

ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளரான . உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி எனும் யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றி Ananthamurthy…Not a biography…but a hypothesis என்ற ஆவணப்படத்தைக் கிரிஸ் காசரவள்ளி இயக்கியுள்ளார்.

கடஷ்ரத்தா என்ற அனந்தமூர்த்தியின் கதையைப் படமாக்கி தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர் காசரவள்ளி.

கிரிஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை கடஷ்ரத்தா. அக் கதையின் பாதிப்பைப் பல ஆண்டுகளாக அவரால் மறக்க முடியவில்லை. பூனே திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துத் திரும்பிய காசரவள்ளி இக் கதையை தனது முதற்திரைப்படமாக்கினார். அது தேசிய விருது பெற்றது.

அந்த நினைவுகளுடனே இந்த ஆவணப்படத்தைத் துவக்குகிறார் காசரவள்ளி.. நீண்ட கால நட்பும் பேரன்பும் கொண்டுள்ள அனந்தமூர்த்தியின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறோம் என்ற மகிழ்ச்சி அவர் எடுத்துள்ள கவித்துவமான காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுகிறது.

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி தாலுகாவிலுள்ள மெலிகேயில் அனந்தமூர்த்தி பிறந்தார். இதற்கு அருகிலுள்ள கிராமம் தான் காசரவள்ளியுடையது.

அனந்தமூர்த்தியின் ஆரம்பக் கல்வி தூர்வாசபுரத்தில் உள்ள ஒரு சமஸ்கிருத பள்ளியில் தொடங்கியது, பின்பு மைசூரில் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்றார். பெல்லோஷிப் கிடைத்த காரணத்தால் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். 1966 இல் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்தியா திரும்பிய அனந்தமூர்த்தி 1970 இல் மைசூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவக்கினார். பின்பு 1987 இல் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1992ல் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் தலைவராகப் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக 1993 இல் அவர் சாகித்ய அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை வென்ற அனந்தமூர்த்தி இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை பூனே தேசிய திரைப்படப்பள்ளிக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மெலிகே என்ற அந்த பசுமையான கிராமம் மழைக்காலத்தில் பேரழகுடன் ஒளிர்கிறது. சிவப்பு ஓடு வேய்ந்த பராம்பரிய வீடுகள். மழைத்தண்ணீர் தேங்கிய வீதி. மழைக்குள்ளாகவே பள்ளிச்சிறார்கள் குடையோடு கடந்து போகிறார்கள். அனந்தமூர்த்தியின் பால்ய நினைவுகளை வாய்ஸ்ஒவர் மூலம் நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது..

தனது கவிதைகளையும் அந்தக் கவிதைகளின் வழியே தான் சொல்ல வந்த விஷயம் பற்றியும் அனந்தமூர்த்தி இரண்டு காட்சிகளில் விளக்குகிறார், அவரது கவிதைகள் எளிய மரபுக்கவிதையின் சாயலை கொண்டிருக்கின்றன. நவீன தமிழ்க்கவிதையோடு ஒப்பிட்டால் அவரது கவிதைகள் வானம்பாடிகளின் கவிதை போலவே இருக்கின்றன.

இலக்கியம் பண்பாடு, அரசியல், தேசியம், உலகமயமாக்கம் குறித்த பார்வைகள் எனப் பரந்த தளங்களில் இயங்கியவர். அனந்தமூர்த்தி.

அவருக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. ஒன்று ஆசிரியராக அவர் இலக்கியம் கற்பித்தது. இரண்டாவது ஒரு சிந்தனையாளராக, அறிவுஜீவியாக அவர் இந்தியப் பண்பாடு சமூகம் அரசியல் பற்றிய பார்வைகளை உருவாக்கியது. மூன்றாவது ஒரு நிர்வாகியாக அவர் துணைவேந்தர் பதவி முதல் சாகித்ய அகாதமி தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட நிர்வாகம் செய்தது. தன்னை ஒரு சோசலிஸ்டாகவே அனந்தமூர்த்தி எப்போதும் முன்னிறுத்திக் கொண்டார். காந்தியும் லோஹியாவும் அவரது ஆதர்சங்கள் என்று ஒரு நேர்காணலில் ஒரு பேராசிரியர் கூறுகிறார் அது உண்மையே.

இங்கிலாந்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அனந்தமூர்த்திக் கன்னடத்தில் தான் தனது கதைகளை, கவிதைகளை எழுதினார். அவரது சமஸ்காரா நாவலை ஏ.கே.ராமானுஜம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கன்னடத்தில் எழுத வேண்டும் என்று தான் முடிவு செய்தது ஒரு அரசியல் செயல்பாடு. அது வெறும் விருப்பம் மட்டுமில்லை. ஒரு வேளை கன்னடத்தில் எழுதாமல் போயிருந்தால் நிச்சயம் சம்ஸ்காராவை எழுதியிருக்க முடியாது என்கிறார் அனந்தமூர்த்தி.

இந்தியாவின் தொடர்பு மொழியாக மட்டுமே ஆங்கிலம் இருக்க முடியும். அது இந்தியாவின் பிறமொழிகளை ஏளனமாக பிராந்திய மொழிகள் எனச் சொல்வது ஏற்புடையதில்லை.

ஆங்கிலம் முன்கட்டு உலகின் மொழி என்றால் இந்தியாவின் பிற மொழிகள் பின்கட்டு உலகில் இருப்பவர்களின் மொழி. முன்கட்டில் பேசப்படும் ராமாயணமும் பின்கட்டில் பேசப்படும் ராமாயணமும் ஒன்றில்லையே.

இந்தியப் பண்பாடு என்பது இரண்டு வாசல்கள் கொண்ட வீட்டினைப் போன்றது. முன்கட்டில் ஆண்கள் உட்கார்ந்து அதிகாரம் செய்வார்கள். அரசியல் பேசுவார்கள். ஆன்மீக தேடலில் ஈடுபடுவார்கள். அந்த உலகம் கௌரவம், ஒழுக்கம், அதிகாரம் பெருமிதம், என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடியது

ஆனால் அதே வீட்டின் பின்வாசல் என்பது பெண்களுக்கானது. எளியோருக்கானது. கிணற்றடியும் பின்கட்டு உலகமும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசும் இடங்கள். அங்கே உலவும் ஆண்கள், பெண்கள் ரகசியங்களைப் பேசிக் கொள்கிறார்கள். உறவுகளை விமர்சனம் செய்கிறார்கள். விலக்கபட்ட, மறைக்கபட்ட விஷயங்கள் உரையாடப்படுகின்றன. ஆகவே பின்கட்டு உலகம் சுதந்திரமானது.

முன்கட்டு உலகம் பெரிதும் பாவனைகளால் நிரம்பியது.. ஆனால் பின்கட்டு உலகம் இதற்கு மாறானது. அங்கே. பொய்யான பாவனைகள் கிடையாது.  மனத்தடைகள் கிடையாது சுதந்திரமான வெளிப்பாடு அதிகம். மறைக்கபட்ட விஷயங்கள் எளிதாகப் பேசப்படும். முன்கட்டு உலகில் கண்ணீருக்கு இடம் கிடையாது. ஆனால் பின்கட்டு உலகிலோ கண்ணீரும் வேதனையும் ரகசியங்களும் இயல்பானது. நான் எப்போதும் பின்கட்டு உலகை சேர்ந்தவன் என்கிறார் அனந்தமூர்த்தி.

இந்தியாவில் எழுதப்படும் ஆங்கில இலக்கியத்தை விடவும் பலமடங்கு சிறப்பாக இந்திய மொழிகளில் எழுதும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அதை ஆங்கில வாசகர்கள், பத்திரிக்கைகள் புரிந்து கொள்வதில்லை. அங்கீகரிப்பதில்லை. இந்தத் தீண்டாமை மனப்பான்மை மாற வேண்டும் என்கிறார் அனந்தமூர்த்தி

1954,ஹசனில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தன்னிடம் படித்த எஸ்தர் என்ற மாணவியைக் காதலித்து 1956 இல் திருமணம் செய்து கொண்டார். இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. அதை மீறி அவர்கள் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குச் சரத் மற்றும் அனுராதா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அனந்தமூர்த்தியின் மருமகன் விவேக் ஷன்பேக் ஒரு முக்கிய எழுத்தாளர்.

அனந்தமூர்த்தியின் படைப்புகள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு பல இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திரைப்படமாகவும் உருவாக்கபட்டுள்ளன.

சம்ஸ்காரா நாவலை வாசிக்கும் கிராமப்புறத்திலுள்ள கன்னட வாசகன் அது மாத்வா பிராமணர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது என்று உணருகிறான். அதே நாவலை வாசிக்கும் பெங்களூர்வாசி அது பிராமணர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது என நினைக்கிறான். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படும் போது அது இந்து சமயத்தின் மீது வைக்கபடும் விமர்சனமாகக் கருதப்படுகிறது. அதே நாவல் சர்வதேச அளவில் வாசிக்கப்படும் போது இந்தியாவின் மரபை, ஞானத்தைக் கேள்விகேட்கும் நாவலாக வாசிக்கபடுகிறது. ஒரே நாவல் தான் ஆனால் அதன் தளம் மாறியதும் அந்த நாவலின் மீதான பார்வைகளும் கோணங்களும் மாறிவிடுகின்றன. இதைப்பற்றி நாம் கவனம் கொள்ள வேண்டும். நமது இலக்கியங்களின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் முற்றாக உணரவில்லை அதை ஆழ்ந்து கற்று உணர வேண்டும் என்கிறார் அனந்தமூர்த்தி

சம்ஸ்காரா நாவல் படமாக வந்த போதும் நிறைய விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் தேசிய விருது பெற்றதுடன் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது

சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் வைதீகமான பிராமணக் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கின்றன அனந்தமூர்த்தியின் படைப்புகள். சாதியக்கட்டுபாடுகளை கடுமையான விமர்சனம் செய்கிறார் அனந்தமூர்த்தி.

இந்த ஆவணப்படத்தில் வயதான அனந்தமூர்த்தி நடக்கவே சிரமப்படுகிறார். அவரது குரலில் உள்ள உற்சாகம் உடலில் இல்லை. முதுமையின் தளர்வை நிறையவே காணமுடிகிறது.

நான் யு, ஆர் அனந்தமூர்த்தியை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். இரண்டும் இலக்கியக் கருத்தரங்குகள். ஒன்று டெல்லியில் நடந்த்து. மற்றது கொச்சியில். டெல்லியில் நடந்த விழாவில் அனந்தமூர்த்தியின் உரை மிகச் செறிவாக இருந்தது. இந்தியப் பண்பாட்டில் எப்படிப் பல்வேறுவகையான மரபுகள் இருக்கின்றன இந்தியத் தொன்மங்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி விரிவாகப் பேசினார். இந்தியர்கள் ஒரே நேரத்தில் வேறுவேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னது இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது

இந்த ஆவணப்படத்திலும் மரபை, வைதீகத்தை, அதன் எதிர்நிலையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனந்தமூர்த்திப் பேசியிருக்கிறார்.

இசைகேட்பதில் தன்னை மறந்து அனந்தமூர்த்தி லயிக்கும் காட்சியும், அவரது மனைவி எஸ்தரின் நேர்காணலும், அவரது பசுமையான ஊரும் மறக்கமுடியாதவை.

யு. ஆர். அனந்தமூர்த்தி தன்னை நவீனத்துவத்தின் பிரதிநிதி என்றே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். அது சரியானதே என்பதை இந்தப்படம் தெளிவாகப் புரியவைக்கிறது

•••

0Shares
0