எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது.

பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.
மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை

ஆசிரியர்களுக்கான பயிலரங்குகள் மற்றும் சிறுகதை, சிறார் இலக்கியம் சார்ந்த பயிலரங்குகளை வெற்றிகரமாக நடத்தியவர் பி.எம். மூர்த்தி. அவருடன் மலேசியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அவருக்கெனத் தனிமரியாதை இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பி.எம். மூர்த்தி இனிமையாக பழகக்கூடியவர். மலேசியாவின் கல்வி மற்றும் இலக்கியச் சூழல் மேம்பட வேண்டும் என்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை என வெளியாகிறது. விருதுவிழாவில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
சிறந்த கல்வியாளரைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கும் வல்லினம் இலக்கிய அமைப்பிற்கு எனது பாராட்டுகள்.
நவீன் மற்றும் வல்லினம் நண்பர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.
