2019ன் சிறந்த புத்தகங்கள்- 1

2019’ல் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை பரிந்துரை செய்கிறேன்
••
பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும்,  காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.
ஜம்பு என்ற `கவர்ச்சி வில்லன்’ கட்டுரையில் கலைஞர்களுக்கான நியாயத்தை, காலம் தரவே மாட்டேன் என்கிறது  எனச் சொல்கிறார் பாக்கியம் சங்கர்.  அது அறியப்படாத திறமைசாலிகளின் ஒட்டு மொத்தக் குரல் என்றே சொல்வேன் .
கண்பார்வை அற்ற தெருப் பாடகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பாடிமேன், குடிக்கு அடிமையானவர்கள். நாடோடிகள், திரைத்துறை கலைஞர்கள், பிச்சைக்காரர்கள்  என்று பாக்கியம் சங்கர் காட்டும் மனிதர்கள் தங்கள் வேதனைக்களைத் தாண்டி பரிசுத்தமான அன்போடு வாழ முற்படுகிறார்கள்.
நான் வடசென்னைக்காரன் என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார் .
வாழ்த்துகள் பாக்கியம் சங்கர்
0Shares
0