டோல்கீன் எழுதிய த லார்ட் ஆப் த ரிங்ஸ் (The Lord of the Rings) நாவல் 56 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 250 மில்லியன் பிரதிகள் விற்றுச் சாதனை செய்திருக்கிறது.. கனடாவில் டோல்கீனின் பெயரில் ஒரு வீதியிருக்கிறது. விசித்திரப் புனைவெழுத்தின் சாதனை நாயகராகவே டோல்கீன் கருதப்படுகிறார்.
1993ல் சென்னையிலுள்ள அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் ஒரு நாள் கவிஞர் பிரமீளைச் சந்தித்த போது அவர் The Lord of the Rings நாவலைப் பற்றிச் சொல்லி டோல்கீனைப் படியுங்கள் என்றார். பிரமீளுக்கு டோல்கீனின் விந்தையான புனைவுலகம் மிகவும் பிடித்திருந்ததை அவரது பேச்சில் அறிந்து கொள்ள முடிந்தது. அபூர்வமான புத்தகங்கள் பலவற்றைப் பிரமீள் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
டோல்கீனின் நாவலை பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடி வாங்கினேன். ஆனால் அதை வாசித்த போது எதுவும் புரியவில்லை. வாசிக்கவும் கடினமாகயிருந்தது. மறுபடியும் பிரமீளைச் சந்தித்த போது அவர் அந்த நாவலின் கதாபாத்திரங்கள், கதை நிகழும் மிடில் எர்த் உலகம், அதன் விந்தைகள். நாவலின் கத்தோலிக்கப் பின்புலம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி மறுபடியும் வாசிக்கச் சொன்னார். அப்படித்தான் டோல்கீன் எனக்கு அறிமுகமானார்.
ஜான் ரொனால்ட் ரியுவல் டோல்கீன் எனப்படும் JRR டோல்கீன் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர். அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் டோல்கீன் என்ற படத்தைப் பார்த்தேன். Karukoski இயக்கியுள்ள இப்படத்தில் Nicholas Hoult டோல்கினாக நடித்திருக்கிறார்.
படம் முதல் உலகப்போரில் டோல்கீன் கலந்து கொண்ட அனுபவத்திலிருந்து துவங்கி முன் பின்னாகப் பயணிக்கிறது.
இரண்டாம் நிலை லெப்டினன்ட் ஆக முதல் உலகப் போரில் கலந்து கொள்ளும் டோல்கீன் போரில் காயம்பட்டு விழுகிறார். அந்த நிலையிலும் இறந்த உடல்களுக்குள் தனது நண்பனைத் தேடுகிறார். சாம் இதற்கு உதவி செய்கிறான். கனவுநிலைப்பட்ட டோல்கீன் போர்களத்தில் நெருப்பு கக்கும் டிராகன் உருவத்தைக் காணுகிறார். போரின் அழிவிலிருந்தே அவரது படைப்பின் ஆதாரங்கள் உருக் கொள்கின்றன. டோல்கீன் எவ்வாறு எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
சிறுவயதில் டோல்கினுக்கு அவரது அம்மா மாபெல் விந்தையான கதையொன்றைச் சொல்கிறாள். கதையின் வழியே புதியதொரு உலகிற்குள் பயணிக்க முடியும் என்கிறாள். அந்த அனுபவம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அம்மா சொன்ன கதையைப் போலவே தானும் விந்தையான கதைகளை எழுத வேண்டும் என்று முனைகிறார். தன் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு நோட்டில் சித்திரமாக வரைந்து கொள்கிறார். அந்த நோட்டு தான் அவரது பிந்தைய கால எழுத்துவாழ்விற்கு வரைபடம்.
மாபெல் இறந்துவிடவே டோல்கினும் அவரது சகோதரரும் அநாதைகளாகிறார்கள். அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பினை பாதர் பிரான்சிஸ் மோர்கன் ஏற்றுக் கொள்கிறார், இருவரையும் ஒரு போர்டிங் ஹவுஸில் சேர்த்து விடுகிறார்.
பர்மிங்காமில் உள்ள கிங் எட்வர்ட் பள்ளியில் டோல்கீன் சேருகிறார். அங்கே பயிலும் கிறிஸ்டோபர் வைஸ்மேன், ராபர்ட் கில்சன் மற்றும் ஜெஃப்ரி பேச் ஸ்மித் மூவருடன் டோல்கீன் நட்பு கொள்கிறார்.
அவர்கள் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். கதை பேசுகிறார்கள். கனவு காணுகிறார்கள். தங்கள் நட்புவட்டத்திற்கு T.C.B.S. எனப் பெயரிடுகிறார்கள். அவர்களின் நட்பின் வலிமையைப் படம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது
ஒரு காட்சியில் ராபர்ட் கில்சன் வீட்டில் டோல்கீன் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி குடிக்கிறார்கள். பில்லியர்ட்ஸ் விளையாடுகிறார்கள். கில்சனின தந்தை வந்துவிடுகிறார். அவர் டோல்கீன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்
அவர் கில்சனைக் கண்டிக்கிறார். அவனது நண்பர்களை உடனே வெளியே அனுப்பிவிடும்படி உத்தரவு போடுகிறார். ஆனால் கில்சன் தனது நண்பர்கள் அங்கே தான் தங்குவார்கள். அவர்களை வெளியே அனுப்ப முடியாது, அது கண்ணியக்குறைவான விஷயம் என்று தந்தையின் போராடி வெற்றி பெறுகிறான்
அக்காட்சியில் கில்சனின் தந்தை முகத்தில் வெளிப்படும் இறுக்கமும் மகனைப் புரிந்து கொள்ளும் விதமும் மறக்கமுடியாத காட்சியாகவுள்ளது..
காதலையும் நட்பையும் முதன்மைப்படுத்தியே படம் உருவாக்கப்பட்டுள்ளது. டோல்கினை ஒரு படைப்பாளியாக உருவாக்கியது இந்த இரண்டு காரணிகளே
ஒரு காட்சியில் வகுப்பறையில் கையில் புத்தகமில்லாமலே சாசரின் பாடலை டோல்கீன் மனதிலிருந்து சொல்லும் விதமும், தானாக புதிய மொழியை உருவாக்கிக் கொள்ளும் விஷயமும் தனித்துவமிக்க காட்சிகள்.
போர்டிங் ஹவுஸில் டோல்கீன் தன்னைப் போலவே பெற்றோரை இழந்து தனித்து வாழும் எடித் பிராட்டினைச் சந்திக்கிறார். எடித் பிராட் மிகச்சிறப்பாகப் பியானோ வாசிக்கிறாள். அவளை டோல்கீன் காதலிக்க துவங்குகிறார். இரவில் ரகசியமாக அவர்கள் ஊர் சுற்றுகிறார்கள்.
ஒரு காட்சியில் இருவரும் மொழியைப் பற்றி உரையாடுகிறார்கள். அப்போது தான் ஒரு ரகசிய மொழியை உருவாக்கியுள்ளதாக டோல்கீன் சொல்கிறார். அந்தக் காட்சியில் எடித் ஒரு சொல் எவ்வாறு உயிர்ப்புக் கொள்கிறது என்பதை அழகாக விளக்கிக் காட்டுகிறாள். தனித்துவமிக்கக் காதல் காட்சியது.
ரிச்சர்ட் வாக்னரின் இசை எடித்திற்கு மிகவும் பிடித்தமானது. ஒரு நாள் வாக்னரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை எடித்திடம் காட்டுகிறார் டோல்கீன் . அவர்கள் ஒபரா காணச்செல்கிறார்கள். டிக்கெட் கிடைக்கவில்லை. அரங்கின் பின்புறத்திற்குச் சென்று சிறிய கதவிடுக்கின் வழியே இசையை ரசித்து நடனமாடுகிறாள் எடித். டோல்கினும் கூடவே ஆடுகிறார்.
வாக்னரின் The Ring cycle ஒபராவிலிருந்தே டோல்கீன் தனது படைப்பின் மையப் படிமமான மோதிரத்தைக் கண்டுகொள்கிறார். ஒரு வகையில் இது எடித்தின் காதலுக்கான அடையாளமே.
வறுமையான சூழலில் ஆக்ஸ்போர்டில் சேர்ந்து படிப்பதற்கு டோல்கீன் படும் கஷ்டங்களும், நண்பர்கள் ஒன்று சேர்ந்து காலியான பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டு உரையாடும் காட்சியும், எடித்தை பிரிந்து வாழும் டோல்கீன் அவளுக்குத் திருமணமாகப் போகிறது என அறிந்து குடித்துவிட்டு ரகசிய மொழியில் புலம்பும் காட்சியும் வெகுநேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டின் மொழியியல் பேராசிரியரான ஜோசப் ரைட்டினை சந்திக்கும் டோல்கீன் அவரது மேதமையை அறிந்து அவரது வகுப்பில் இணைந்து மொழியியல் பயிலத் துவங்குகிறார். ஒரு காட்சியில் ஒக் என்ற வார்த்தை குறித்து ஜோசப் ரைட் விளக்கிச் சொல்லும் விதம் வியப்பூட்டுகிறது.
முதல் உலகப்போரில் கலந்து கொள்ளும் டோல்கீன் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு எடித்தை சந்திக்கிறார். அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி பிரிவின் வலியை அழுத்தமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
நீண்ட காலத்தின் பிறகு ஸ்மித்தின் அம்மாவைச் சந்திக்கும் டோல்கீன் தாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி தேநீர் குடித்து மகிழ்ந்த இடத்தைக் காட்டி நெகிழ்கிறார்
ஸ்மித்தின் அம்மா தன் மகன் அவர்களிடம் அன்போடு நடந்து கொண்டானா. நிஜமாகவே சந்தோஷமாக இருந்தானா என ஏக்கத்துடன் கேட்கிறாள். ஸ்மித் ஒரு கவிஞன். வறுமையில் உழன்ற தன்னை அவன் மிகவும் அன்பாக நடத்தினான். அவனது நினைவாக அவனது கவிதைகளை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதற்கு ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். அந்த கவிதை நூலை நீங்கள் வெளியிட வேண்டும் என ஸ்மித்தின் அம்மாவிடம் கையெழுத்துப் பிரதியை ஒப்படைக்கிறார். கண்ணீர் மல்க அந்தக் கையெழுத்து பிரதியைப் பெற்றுக் கொள்கிறாள் ஸ்மித்தின் தாய். படத்தின் மிக முக்கியமான காட்சியது.
1938 ஆம் ஆண்டில் தி ஹாபிட் நாவலை டோல்கீன் எழுத துவங்கி புகழ்பெறுவதுடன் படம் நிறைவு பெறுகிறது. ஒளிப்பதிவாளர் லாஸ் ஃபிராங்க் ஜோஹன்னசெனின் ஒளிப்பதிவு இங்கிலாந்து நிலக்காட்சிகளை மிகவும் கலைநேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறது.
டோல்கீன் பற்றிய படம் அவரது புனைவெழுத்து போல விசித்திரமானதாகயில்லை. மாறாக மிகவும் யதார்த்தமாக, வறுமையின் பிடியிலிருந்த வாழ்க்கையை, காதலின் வழியே தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் டோல்கினின் ஆளுமையை, நட்பின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறுவனாகத் தாயிடம் கதை கேட்கத்துவங்கிய டோல்கீன் கடைசியில் தன்னுடைய மகனுக்குக் கதை சொல்லத் துவங்குகிறார். காலம் மாறியிருக்கிறது. ஆனால் கதைகேட்கும் மனநிலையும் கதைகளும் மாறவில்லை. டோல்கினைப் போலவே அவரது மகன்களும் ஆசையாகக் கதை கேட்கிறார்கள்.
கதைகளின் வழியாகவே காலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆயிரமாயிரம் கதைகள் இருந்தாலும் இந்த உலகிற்கு இன்னும் அதிகக் கதைகள் தேவைப்படுகின்றன. மனித வாழ்க்கை என்பதே ஒரு கதை தானே. அது எவ்விதம் துவங்கி எப்படி முடியும் என யாரால் கண்டறிய முடியும்.
••