தான் எழுதிக் கொண்டிருந்த நாவலின் கதைப்போக்கு மற்றும் முக்கியச் சம்பவங்கள் குறித்த விபரங்களைத் தனது படுக்கை அறையின் சுவரில் எழுதி ஒட்டிவிடுவது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வில்லியம் பாக்னரின் (William Faulkner ) வழக்கம்.
1954ல் அவர் எழுதிய A Fable நாவலுக்கான குறிப்புகள் அவரது படுக்கையில் ஒட்டப்பட்டிருக்கின்றன, இந்தப் புகைப்படத்தையும் செய்தியும் வாசித்த போது எனக்கு அசோகமித்ரன் எழுதிய ஒற்றன் நாவல் நினைவில் வந்து போனது
••
வில்லியம் பாக்னர் தனக்கு வரும் கடிதங்களில் பதிப்பாளரிடம் இருந்து செக் அனுப்பபட்ட கடிதம் தவிர வேறு எதையும் பிரித்துப் படிக்க மாட்டாராம், இப்படி அவர் படிக்காமல் போன வாசகர்களின் கடிதங்கள் மூட்டை மூட்டையாகக் கண்டு எடுத்திருக்கிறார்கள், நாடகம் பார்ப்பதிலும் அவருக்கு விருப்பம் கிடையாது, தன் வாழ்நாளில் மொத்தம் ஐந்து முறை நாடகம் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார் பாக்னர்
••
பாக்னர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை விலை உயர்ந்த உடைகள் வாங்குவதற்கும் குடிப்பதற்கும் செலவு செய்திருக்கிறார், குதிரைகளின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டவர், விலை உயர்ந்த குதிரைகள் அவரிடமிருந்தன. குதிரையில் இருந்து தடுமாறி கிழே விழுந்து அடிபட்ட காயத்துடன் தான் முடிவில் அவர் இறந்தும் போனார். Yoknapatawpha County என இவர் உருவாக்கிய கற்பனை நிலப்பரப்பே கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் மகோந்தா என்ற கற்பனை பிரதேசத்தை எழுத தூண்டுகோலாக இருந்தது
••
ஹாலிவுட்டில் பிரவேசித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கதில் பங்குபெற்ற போதும் பாக்னரின் பெயர் ஆறு திரைப்படங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
பிரபல இயக்குனர் ஹோவேர்ட் ஹாக்ஸ் அழைப்பின் பெயரில் ஹாலிவுட்டில் எழுத்தாளராகப் பணியாற்ற சென்ற வில்லியம் பாக்னர் 22 வருஷங்கள் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார். To Have and Have Not . The Big Sleep இரண்டும் அவரது முக்கியமான திரைப்படங்கள்.