சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன்.

ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் தலைப்பு ஏ.கே.ராமானுஜன் வைத்தது.

இந்தக் கவிதைகளைப் பற்றி ராமானுஜத்தின் மகன் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்

“1971 ஆகஸ்டில் ஒரு நாள் எனது தந்தை, ஏ.கே. ராமானுஜன், மெஸ்கலின் என்ற போதை மருந்து காப்ஸ்யூலை எடுத்துக் கொண்டார். அதில் மயக்கமாகி உறங்கிவிட்டார். . கண்விழித்த போது குழப்பமான மாயத்தோற்ற விளைவுகள் ஏற்பட்டன. அவர் மிகுந்த உணர்ச்சிகரமான மனநிலையைக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தைத் துண்டு துண்டான கவிதைகளாக எழுதினார். ஆற்றில் கலக்கும் துணை நதிகள் போல அவரது எழுத்து தனக்கான ஒரு ரகசிய பாதையைக் கண்டுபிடித்தது, அப்படித் தான் சோமாவின் கருப்பொருளில் தொடர்ச்சியான கவிதைகளை எழுதத் துவங்கினார் “.

இந்தத் தொகுப்பில் அவரது நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 1982 இல் சிகாகோவில் மலையாளக் கவிஞர் கே. ஐயப்ப பணிக்கருக்கும் ஏ.கே.ராமானுஜனுக்கும் இடையே நடந்த நேர்காணலது. ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணல் நீண்டகாலமாகப் பணிக்கரின் பாதுகாப்பில் இருந்திருக்கிறது. அதைத் தேடி எடுத்து அச்சிட்டிருக்கிறார்கள்.

இந்த நேர்காணலில் இரண்டு மொழிகளில் எழுதுவது குறித்தும் அவரது ஆங்கிலக் கவிதைகள் குறித்தும் ராமானுஜன் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தியாவிலிருந்தபடி ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் வேறுபாடு உள்ளதா என்று பணிக்கர் கேட்கிறார். தான் அப்படி உணரவில்லை எனும் ராமானுஜன் அமெரிக்கா சென்ற பிறகுத் தனது கவிதைகளை நிறையத் திருத்தம் செய்து மேம்படுத்தியதாகச் சொல்கிறார்.

சோமா அவரது பரிசோதனைக் கவிதைகளின் தொகுப்பு. சோமா என்பது வானுலகின் தாவரம். அதிலிருந்தே சோமபானம் தயாரிக்கபடுகிறது. வேத இலக்கியங்கள் அமுதமான சோமாவைக் கொண்டாடுகின்றன சோமா மனதைக் கட்டுப்படுத்தும் மருந்தாக அறியப்படுகிறது. கடவுள்களின் மதுவான சோமா, புலன் மயக்கத்தையும் உச்சநிலை பரவசத்தையும் உருவாக்கக் கூடியது. சோமா அமரத்துவத்தைத் தர வல்லதாகவும் கருதப்படுகிறது

சோம பானம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. அது போலவே ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழுமையும், சோம பானம் தயாரிக்கும் முறையை விவரிக்கிறது/ இது போலவே சோமம் குறித்த பல்வேறு துதிப்பாடல்களையும் காண முடிகிறது.

ஏ.கே.ராமானுஜனின் சோமா கவிதைகள் எழுபதுகளில் எழுதப்பட்டவை . அவர் சோமாவை நவீன வாழ்வின் குறியீடாகக் கொள்கிறார். இதிலுள்ள 22 கவிதைகளும் சோமாவை வெவ்வேறு வழிகளில் அவருடன் தொடர்புபடுத்துகின்றன. குறிப்பாக இக்கவிதைகளில் சோமாவை அவர் அழைக்கும் விதமும் தொடர்பு படுத்தும் புள்ளியும் ஆச்சரியமளிக்கின்றன .நம்மாழ்வார் பாடலை தனது கவிதையுடன் அவர் இணைக்கும் விதம் அபாரமானது.

Soma, I said, is no Siva.

Yet Siva is sometimes Soma,

Soma, I said, is no Visnu

But Visnu can play Soma,

enter the nests of flesh

to make them sing…

தனது கட்டுரை ஒன்றில் இளமைப்பருவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ராமானுஜன் இப்படிக் குறிப்பிடுகிறார்

As we grew up Sanskrit and English were our father-tongues and Tamil and Kannadaour mother-tongues. The father-tongues distanced us from our mothers, from ourchildhoods, and from our villages and many of our neighbours in the cowherd colonynext door. And the mother-tongues united us with them. It now seems appropriate that our house had three levels: a downstairs for the Tamil world, an upstairs for the English and the Sanskrit, and a terrace on top that was open to the sky where our father could show us the stars and tell us their Sanskrit Names.

வெளிநாட்டில் வசிக்கும் போது தாய்மொழியில் எழுதுவதற்கான தூண்டுதலையும் தாய்மொழியில் கற்றத்தின் நினைவுகளையும் எழுப்புவதற்குச் சோமா துணை நிற்பதாக ராமானுஜன் கருதுகிறார். அந்த வகையில் இக்கவிதைகள் அவரது நினைவின் ஆழத்திலிருந்து வெளிப்படும் விசித்திர மலர்களே.

0Shares
0