மனித மனதின் குறியீடு

G. கோபி

சிகரெட் பிடிக்கும் குரங்கு சிறுகதை பல நினைவுகளைக் கிளறிவிட்டது.

எனது ஊர் கழுகுமலை. அங்குள்ள மலையில் உள்ள குரங்குகள் அங்கு வரும் மனிதர்கள் போடும் திண்பண்ட பொட்டலங்கள், கவர், வாட்டர் கேன், இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். பள்ளி படிக்கும் போது நண்பர்களோடு நான் அடிக்கடி போவேன். அப்போது சில நேரங்களில் அந்தக் குரங்குகள் யாரோ புகைத்து விட்டு போட்ட பீடி தூண்டுகளை எடுத்து பற்ற வைப்பது போலப் பாவனைச் செய்யும். ஆனால் காற்று அதிகம் இருப்பதால் அவற்றால் பற்ற வைக்க முடியாது. அது விளையாட்டு போல ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால் சிகரெட் பற்ற வைத்து புகையை ஊதும் குரங்கை இந்தக் கதையைத் தவிர வேறெங்கும் கேள்வி பட்டதே இல்லை. விலங்குகள் மனிதர்கள் உடன் வாழ பழகி மனிதர்கள் செய்யும் அத்தனையும் செய்யப் பழகிக் கொள்கின்றன.

கதையில் ஏன் குரங்கு மனிதர்கள் செய்வதைச் செய்ய விரும்புகிறது? மேலும் மனிதர்கள் ஏன் சிகரெட் புகைப்பதின் மீது இவ்வளவு விருப்பம் கொண்டுள்ளார்கள்? சுற்றியுள்ள சமூகம் செய்யும் செயல்களையே சிறுவர்களும் உள்வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். ? இன்னொன்று ஒரு குரங்கை நாம் ஏன் இப்படி நடந்துகிறோம் என்ற பல கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. சிகரெட் பிடிப்பதற்குப் பதிலாக நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் என்பதுதான் அந்த ஊதுகுழலை சிறுவன் குரங்கிடம் தருவது. மேலும் சிகரெட் பிடிக்கும் குரங்கு என்றதுமே அந்தக் காட்சி கண் முன்னே உடனே மின்னல் வெட்டு போலத் தெரிவது தான். பெரும்பாலும் காற்றில் படார் என்று அடிக்கும் ஜன்னலைப் போலக் குறுங்கதைகள் வாசிக்கும் போது நம்மைத் தாக்குகின்றன. நேரிடையாக நமது வியப்பை கூர்மை கொள்ளச் செய்கின்றன.

மிருகக் காட்சி சாலைகளைப் பார்த்ததும் நாம் ஏன் இப்படி விலங்கு பறவைகளை இப்படிச் சிறைபடுத்திக் காட்சிபடுத்து வைத்திருக்கிறார்கள் மனிதர்களுக்கு என்ன உரிமை உள்ளது? ஆனால் அதே சமயம் அது மனித சுபாவங்களைக் கற்றுக் கொள்ளவதும் வியப்புதான்.

ஒவ்வொரு குரங்கும் மனித மனதின் குறியீடுதான். மரம் விட்டு மரம் தாவுவதும் வித விதமான பழக்கங்களால் அதைச் சுமையேற்றி அசிங்கபடுத்தி வைத்திருப்பதும் நாம் தான். அதற்குப் புற சூழலான சமூகமும் ஒரு காரணம்தான். அப்படியான மனதை ஒழுங்குபடுத்திச் சீரமைக்கச் சிறுவன் குரங்கிடம் கொடுக்கும் பச்சை நிற ஊதுகுழல் ஏனும் கலை சார்ந்த விஷயங்கள் தேவைப் படுகிறது.

மனித துயரங்களையும், குழப்படிகளையும், பணி சுமைகள் மற்றும் நாம் உருவாக்கிக் கொண்ட கற்பிதங்களையும் கலை கொண்டு நாம் புரிந்து கொண்டு கடந்து போக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதுவுமே இன்னொரு பழக்கமே. மனிதர்கள் பழக்கங்களுக்கு உடனே ஆளாகிவிடுகிறர்வர்கள் என்பதும் உண்மை.

இசை, கலை சார்ந்த விஷயங்கள் மனிதனை உருமாற்றி நல்ல பழக்கங்களை உருவாக்கி விடுகின்றன. எளிய குறுங்கதை வாயிலாக நல்ல சிந்தனையைத் தூண்டிய எஸ். ரா சாருக்கு பாராட்டுக்கள் நல்ல கதையை எழுதியுள்ளீர்கள்.

•••

0Shares
0