புஷ்கினைத் தேடுகிறார்கள்

உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்தும் புஷ்கினின் முதற்பதிப்புகள் திருடு போவதாகச் செய்தி படித்தேன். டார்ட்டு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சமீபமாக இந்தத் திருட்டு நடைபெற்றிருக்கிறது

அரிய நூல்களை இப்படித் திருடிச் சென்றுவிற்கும் கூட்டம் பெருகிவிட்டது என்றும், இந்த முதற்பதிப்புகளுக்கு இன்றைய சந்தையில் விலை பல கோடி ரூபாய் என்றும் சொல்கிறார்கள்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முதற்பதிப்புகளைச் சேகரிக்கும் வசதி படைத்தவர்கள் அதற்காக எவ்வளவு பணமும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள்.

அரிய புத்தங்களைச் சேகரிக்கும் இந்தப் பிப்லியோஃபைல்களின் உலகம் விசித்திரமானது. இதைப்பற்றி ஜீன் கிளாடே கேரியர் விரிவாக எழுதியிருக்கிறார். அவரும் அரிய நூல்களைச் சேகரிப்பவர்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்றால் அதை வாங்குவதற்குப் பெரிய போட்டியே நடக்கும் என்கிறார்கள்.

அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்களைத் திருடிப் போகிறவர்கள் போல நூலகங்களிலிருந்து அரிய புத்தகங்களைத் திருடி விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரிய நூல்களின் மதிபபை பெருபான்மையினர் அறியவில்லை. அதைப் பழைய குப்பை என்று நினைத்து எரித்துவிடுகிறார்கள். இப்படித் தீயிலிட்டும், குப்பையில் எறிந்தும் போனது தமிழ் நூல்கள் ஏராளம்.

ரஷ்ய அரசர் பீட்டர் தி கிரேட் ஆப்ரிக்கா மீது படையெடுத்து அபிசீனிய அரசனைத் தோற்கடித்தார். தோற்ற மன்னரால் ரஷ்ய அரசிற்குப் பெருந்தொகை தர முடியவில்லை. ஆகவே அவரது மகன் ஹனிபாலை பணயக்கைதியாகக் கொண்டு சென்றார்.

ரஷ்யாவிற்கு வந்த ஹனிபால் கிறிஸ்துவச் சமயத்தை ஏற்றுக் கொண்டார். ரஷ்யப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த மகள் ஓசீப் போவ்னா.

அவள் செர்ஜி ல்வோவிச் புஷ்கின் என்ற வசதியான ரஷ்ய பிரபுவை திருமணம் செய்து கொண்டாள். அவர்களது மகன் தான் புஷ்கின். ஆகவே புஷ்கின் தோற்றத்தில் கறுப்பின மக்களின் சாயல் இருக்கும்.

புஷ்கின் பள்ளிவயதிலே கவிதைகள் எழுதத் துவங்கினார். தனது 15வது வயதில் தனது முதல் கவிதையை வெளியிட்டார். 18வது வயதில் வெளியுறவுத்துறையில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார்

பிரபுக்களின் நட்பு காரணமாக. புஷ்கின் விருந்து குடி நடனம் என உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தார்.

தனது 21 வயதில் ரஸலான் அண்ட் லுதுமியா என்ற காவியத்தை எழுதி சாதனை செய்தார் புஷ்கின். அவரது கேலிப்பேச்சும் நையாண்டியான எழுத்தும் ஜார் மன்னருக்கு எதிராக உள்ளதாகப் புகார் அளித்தார்கள். ஆகவே அவர் மிக்லோவ்ஸ்கியா என்ற அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டார். இந்தத் தண்டனைக் காலத்தில் புஷ்கின் நிறைய எழுதினார். படித்தார்.

நடால்யா

நடால்யா என்ற அழகியை காதலித்தார் புஷ்கின். அவளையே திருமணம் செய்து கொண்டார். அவளது அழகில் ஜார் மன்னர் கூட மயங்கிப் போனார் என்கிறார்கள். ஒருமுறை ஜார்ஜ் டி’அந்தேஸ் என்ற பிரெஞ்சு ராணுவ வீரனை தனது வீட்டில் நடந்த விருந்திற்கு அழைத்திருந்தார் புஷ்கின்.

அந்த விருந்தில் ஜார்ஜ் டி’அந்தேஸ் நடாலியாவின் அழகில் மயங்கி மனதைப் பறிகொடுத்தான். அதிலிருந்து அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றான். திருமணமானவள் என்று அறிந்தும் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்தினான். அத்தோடு விருந்து ஒன்றில் புஷ்கினை கேலி செய்து அவமானப்படுத்தினான் இதனால். புஷ்கினின் கோபம் பெரிதாகவே பரோனின் வளர்ப்பு தந்தை தனது மகன் உறவுப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

ஜார்ஜ் டி’அந்தேஸின் காதல்விவகாரம் முடிந்து போனதாகப் புஷ்கின் நினைத்தார். ஆனால் பரோன் பொது இடங்களில் நடாலியாவோடு நெருக்கமாகப் பேசி சிரிப்பதும் கைகோர்த்து நடனமாடுவதையும் கண்ட புஷ்கின் அவனை நேருக்கு நேராகச் சண்டையிட சவால் விடுத்தார்.

டூயல் எனப்படும் அந்தத் துப்பாக்கி சண்டையில் இருவரும் நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொள்வார்கள். இருவரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைக்க முடியும். புஷ்கினின் இந்தச் சவாலை ஜார்ஜ் டி’அந்தேஸ் ஏற்றுக் கொண்டான்.

குறிபிட்ட நாளில் பொதுமனிதர் முன்பாக உறைபனியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது அதில் ஜார்ஜ் டி’அந்தேஸை புஷ்கினைச் சுட்டுவிட்டான. அடிவயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து. தரையில் வீழ்ந்த புஷ்கின் தானும் ஆன்தீவ்ஸைச் சுட்டார். அவனுக்கும் காயம் ஏற்பட்டது.

ரத்தப்பெருக்கில் மயங்கிய புஷ்கினை குதிரை வண்டியில் மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். நடாலியாவிற்கு இந்தச் சவால் பற்றி எதுவும் தெரியாது. அவள் மரணப்படுக்கையில் இருந்த புஷ்கினை காண ஒடோடி வந்தாள். அவளது கௌரவத்தைக் காக்கவே தான் சண்டையிட்டதாகச் சொன்னார் புஷ்கின். மருத்துவர்கள் புஷ்கினைக் காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அதிகமான குருதி இழப்புக் காரணமாக அவர் உயிர் துறந்தார். அப்போது புஷ்கினின் வயது 37

காதலும் சாகசமும் கொண்ட புஷ்கின் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞராகக் கொண்டாடப்படுகிறார். அவரது கவிதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

1881ல் வெளியான அவரது முதற்பதிப்புகளை வாங்குவதற்காகப் பெரும்போட்டியிருக்கிறது. அதன் காரணமாகவே இந்தத் திருட்டு நடைபெறுகிறது என்கிறார்கள். கலைப்பொருட்களை மீட்பதற்காக உருவாக்கபட்ட சிறப்புப் பிரெஞ்சு போலீஸ் பிரிவு புஷ்கின் நூல்களை மீட்பதற்காக “ஆபரேஷன் புஷ்கின்” என்ற விசாரணையைத் துவங்கியிருக்கிறார்கள். நான்கு புத்தகத் திருடர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் புத்தகங்களை கைமாறிப் போய்விட்டது. அதை கண்டறிந்து மீட்பது எளிதானதில்லை என்கிறது காவல் துறை.

நூலகங்களுக்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் இதனுடன் எழுந்திருக்கிறது. புத்தக உலகின் மறுபக்கம் விசித்திரமானது. அது எழுதப்பட்ட எந்த துப்பறியும் கதையினையும் விட மர்மமானது என்கிறார் விமர்சகர் ஜார்ஜ் பீட். அது உண்மையே,.

0Shares
0