இடக்கைக்குள் நீதி

கோபாலகிருஷ்ணன்

நீதி என்பது எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியை போல மனிதர்களைக் கொண்டு செல்கிறது. உணவுக்காகவும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மனிதன் அலைவதை போலவே நீதிக்காகவும் மனிதன் காத்திருக்கிறான், போராடுகிறான். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “இடக்கை ” புத்தகம் வாசித்து முடித்ததும் இந்திய வரலாற்றின் மீது படிந்த கறையைத் தொட்டு பார்த்ததைப் போல உணர முடிந்தது. பின்னர்தான் புரிந்தது அது கறையல்ல தழும்புகள் மறைந்து போகாத நினைவுகள்.

உடலில் காயம் ஏற்பட்டு ஆறிய பின்னர்க் காயம் மறைந்து போய்விடும். தழும்புகளும் அதன் நினைவுகளுமே மிஞ்சியிருக்கும். இந்தப் புத்தகத்திலும் எண்ணற்ற காயங்களின் தழும்புகளைத் தொட்டு உணர முடிந்தது.ஏதோவகையில் சாதாரண மனிதன் அடைந்த வலியும் வேதனையுமான தழும்புகளாகவே இருந்தது இந்தக் கதை.

இடக்கை நாவல் ஆயிரம் கதைகளைக் கொண்ட விசித்திர மரம். ரத்தத் தாலும் வன்மத்தாலும் அதன் கிளைகளும், இலைகளும் இருளில் மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வெனும் அந்த மரத்தின் வேர்கள் சாமான்ய மனிதர்களின் வாழ்வேனும் நரம்புகளைக் கொண்டு வேரூன்றியிருக்கின்றது. புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் என்றோவொரு நாள் கோர்ட் வாசலில் ஏதோவொரு நீதிக்காகக் காத்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.

நாம் அனைவரும் ஒருவகையில் தூமகேதுவின் வெவ்வேறு வடிவங்கள்தானே. விசித்திரங்களும், கதைகளின் நீரரூற்றுகளும், வரலாற்று சாட்சியங்களும் அடங்கிய புத்தகமாக இடக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதி எனும் நுலால் முடிவிலா கதைகளின் புனைவை சிலந்தி வலை பின்னுவதைப் போலப் பின்னிக்கொண்டே போகிறார் எழுத்தாளர் எஸ்.ரா.

நாவலில் மக்பி அரண்மனை இளவரசியாக இருந்தாலும் கவிதை எழுதியதற்காகச் சிறையிலடைத்துக் கொல்லப்படும் கதை துயரமானது. ஆனால் பெண்கள் பூக்களைக் கட்டி மாலையாக அணிந்து கொள்வதைப் போல மக்பி தன்னுடைய வாழ்வை கவிதையாளும் தண்டனைகளாலும் அணிந்துகொண்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. இன்னொரு கதாபாத்திரமான மஞ்சு என்கிற சிறுவன் இறந்துபோனது சொல்ல முடியாத துயரத்தை உண்டுபண்ணியது. பசிக்காகவும், வறுமைக்காகவும் உணவைத் தேடி அலைந்து கடைசியில் விஷக்காய்களைத் தின்றுவிட்டு இறந்து போன மகனை கண்டு நளா துயருற்று புலம்புவது வறுமையின் கொடும் அவலம்.

இன்னொருபுறம் தீண்டாமையின், சாதிக் கொடுமையின் பள்ளத்தாக்குதலில் மனிதர்கள் புதையுண்டு இருப்பதைக் காணமுடிகிறது. பள்ளிப் பாட புத்தகங்களில் தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம் என்றெல்லாம் வாசித்திருப்போம் . ஆனால் வரலாற்றின் பக்கங்களில் தீண்டாமையும் சாதிக்கொடுமையும், மதவெறியும் எப்படிக் கறை படிந்த எழுத்துக்களால் எழுதப் பட்டிருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புத்தகத்தின் விமர்சனமாகப் புனைவுகளும் விசித்திரங்களும் அதிகபடியாக அழுத்துகின்றனவோ என்று கருத்துத் தோன்றுகிறது. ஆனால் எளிய மொழியில் எழுத்து முறை இருப்பதால் அந்தக் குறை பெரிதாகத் தெரியவில்லை.

குறிப்பிடவேண்டிய புனைகதைகளில், புழுவின் கதை, எழும்பின் கதை, கதைகளின் வழியாக மனிதர்களை உருமாற்றுவது என முடிவற்ற கதைகளின் ஆறு பெருக்கேடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. நதியில் குளித்துவிட்டு கரையேறி வந்ததும் உடலோடும் உள்ளதோடும் குளுமையும் ஒட்டிக்கொண்டதை போல எஸ். ராவின் புனைவுகளுக்குள் இருந்து இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின் நம் மீதும் துயர்தரும் நீதியும் புனைவும் ஓட்டிக் கொண்டு விடும்.

மனிதர்களுக்கு நீதி ஏன் அவசியம்? அதிகாரத்தின் மூலம் சாமானிய மனிதனின் வாழ்க்கை ஏன் விளையாட்டுப் பொருளாகிவிடுகிறது? நீதியின் மீது மனிதர்கள் கொண்ட நம்பிக்கை காத்துக் கொண்டே இருக்கும் பொறுமையின் தொடர்ச்சிதானா? ஒரு வகையில் மரணம்தான் அனைத்துத் தரப்பு மனிதர்களின் பொதுவான நீதியாக இருக்கிறது. கொடும் அரசன் ஒளரங்கசீப்பும் மரணமடைந்தான், சாமான்ய மனிதர்களும் மரணமடைகிறார்கள். அப்படியெனில் எதற்கு அதிகாரத்தையே மனிதன் உயர்வாகக் கருதி சாதாரண எளிய மனிதர்களின் துன்புறுத்துகிறான் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

பகலில் பூச்சிகளாகவும் இரவில் மனிதர்களாகவும் உருமாறும் சிகிரியர்களின் கதைகளை வாசிப்பது விசித்திரமாக இருந்தது. மாயத்தின் எண்ணற்ற பக்கங்களில் இந்தப் புத்தகம் மிதந்து கொண்டிருக்கிறது. சம்புவின் இறுதி பயணத்தின் வானமும் கடலும் ஒன்று சேர்ந்து நட்சத்திரங்கள் கடலில் மிதக்கும் காட்சி அபாரமானது. அது மின்மினி பூச்சிகள் கையில் ஊர்ந்து போவது போல நட்சத்திரங்கள் கடலில் மிதப்பது என்று எழுதியிருந்தது புனைவின் உச்சகட்டம். இந்தப் புனைவுகளின் வழியாக மனிதன் என்ன புரிந்து கொண்டான் சிந்திக்கிறான், அதனால் அவன் வாழ்வில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? கதைகளும் புனைவுகளும்தான் மனிதனுக்குச் சிந்தனையைத் தூண்டும் விதமாக முக்கியக் காரணமா? என்று தோன்றும். எஸ். ராவின் எளிய உரைநடையும் வளமான மொழியும் ரயில் பெட்டிகளின் இடைவெளியைப் போல நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.

முன்னரே சொன்னது போல இந்த நாவலில் அநீதி என்கிற வரலாற்று சாட்சியங்களின் கறையை எஸ். ரா துடைத்து சுத்தமாக்கி நினைவுகள் அடங்கிய கதைகளாக உருமாற்றியிருக்கிறார்.

0Shares
0