கொலம்பிய இயக்குநர் சைமன் மேசா சோட்டோ இயக்கி 2025 ல் வெளியான A Poet திரைப்படம் ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோ என்ற கவிஞரைப் பற்றியது.

தன் தாயின் ஓய்வூதியத்தில் வாழும் ஐம்பது வயதான கவிஞரும், குடிப்பழக்கம் மற்றும் கசப்புணர்வு கொண்டவருமான ஆஸ்கர், மனைவி, மகளைப் பிரிந்து வாழுகிறார். அவரது தோற்றத்திலே அவரது தற்போதைய நிலை தெளிவாக உணர்த்தப்படுகிறது.
போதுமான வருவாயில்லை. தகுந்த வேலையில்லை. தனது பல இரவுகளை உள்ளூர் மதுக்கடையில் குடித்துக் கழிக்கிறார். அங்கே, தனக்கு விருப்பமான கவிஞரான ஜோஸ் அசுன்சியோன் சில்வாவின்(. José Asunción Silva) கவிதைகளைப் பற்றி உணர்ச்சிப்பூர்வாக உரையாடுகிறார், பாடுகிறார். ஜோஸ் ஏன் தனது முப்பது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என விவரிக்கிறார்.

மதுக்கடையில் அவருடன் உரையாடும் ஒரு இளைஞன் தனது ஆதர்சம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்று குறிப்பிடும் போது மார்க்வெஸின் புகழ் உருவாக்கபட்டது. அவர் அதிகாரத்துடன் நட்பு கொண்டு புகழை அடைந்தவர். கொலம்பியாவின் உண்மையான படைப்பாளி நிகரற்ற கவிஞர். José Asunción Silva தான் என்று ஆஸ்கர் வாதிடுகிறார், அந்த இளைஞன் ரூபாய் நோட்டில் மார்க்வெஸ் படம் அச்சிடப்பட்டிருப்பதை நினைவுபடுத்துகிறான். உடனே அவர் சில்வாவின் படமும் தான் அச்சிடப்பட்டிருக்கிறதே என்கிறார்
கொலம்பியாவில் 10,000 பெசோ நோட்டில் எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உருவமும், ஜோஸ் அசுன்சியோன் சில்வா உருவம் 5,000 பெசோ நோட்டிலும் அச்சிடப்பட்டுள்ளது ; இது போலச் சீலேவில் 5,000 பெசோ நோட்டில் கேப்ரியேலா மிஸ்ட்ரலும், 20,000 பெசோ நோட்டில் பாப்லோ நெரூடாவும் இருக்கிறார்கள். பணத்தாளில் எழுத்தாளர்களின் உருவத்தை இடம்பெறச் செய்வது லத்தீன் அமெரிக்காவின் சிறப்பான கௌவரம்..
ஆஸ்கர் தனது வீட்டில் ஜோஸின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார். பல நாட்கள் மிதமிஞ்சிய போதையில் சாலையில் விழுந்து கிடக்கிறார். அம்மாவின் தயவில் அவரது வாழ்க்கை ஒடுகிறது. ஒரு காட்சியில் தான் ஒரு கவிஞன் என அம்மாவிடம் ஆஸ்கர் சொல்கிறார். இல்லை நீ ஒரு வேலையற்றவன் என அம்மா பதில் தருகிறார்.
ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோவிற்குக் கவிதை தான் வாழ்க்கை. ஆனால் கவிதையை வைத்துப் பிழைக்க முடியாது. வாழ்க்கைத் தேவைக்காகச் சம்பாதிக்கவும் வேண்டியுள்ளது என்பதை உணருகிறார். ஆனால் எந்த வேலையிலும் அவரால் பொருந்திப் போக முடியவில்லை.

இளமைக்காலத்தில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தேசிய அளவில் விருது பெற்ற ஆஸ்கரால் தற்போது கவிதை எழுதவும் முடிவதில்லை. ஆழ்ந்த சோக உணர்வு கொண்டவராக இருக்கிறார். கவிதை மட்டுமே அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
உள்ளூரில் செயல்படும் கவிஞர்கள் அமைப்பு ஒன்றுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்கள் நடத்தும் கவிதை விழாவிற்கான ஆலோசனைகள் சொல்கிறார்..
ஆஸ்கரின் மகள் டேனியலா கல்லூரி சென்று படிக்க விரும்புகிறாள். அதற்கான பணஉதவியைச் செய்ய முடியாத நிலையில் ஆஸ்கர் வேதனைப்படுகிறார். மகளைத் தேடிச் சென்று அவர் உரையாடும் காட்சிகள் சிறப்பானவை. அதில் மகள் தந்தையை வெறுக்கவுமில்லை. விரும்பவுமில்லை. மூன்றாம் மனிதரைப் போலவே நடத்துகிறாள்.
வேலையில்லாமல் திண்டாடும் அவருக்குக் கவிஞர்கள் சங்கம் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைக்க உதவி செயகிறது. மாணவர்களுக்கு இலக்கியப் பாடம் கற்பிக்கிறார். அவரது வகுப்பில் படிக்கும் யுர்லாடி என்ற 15 வயது மாணவி கவிதை எழுதுவதிலும். ஓவியத்திலும் மிகுந்த திறமை கொண்டிருப்பதை அறிந்த ஆஸ்கர் அவளது குறிப்பேட்டினை வாங்கி வாசித்து வியந்து போகிறார்.
புகழ்பெற்ற கவிஞராக உருவாகக் கூடிய படைப்பாற்றல் அந்த மாணவியிடம் இருப்பதாக உணருகிறார். ஆகவே அவளைக் கவிதை விழாவில் பங்கேற்க வைக்க முயற்சி செய்கிறார். அந்த மாணவியின் குடும்பம் மிகவும் வறுமையான சூழலில் இருக்கிறது அவர்களுக்குச் சிறிய அளவில் பொருளாதார உதவி செய்து யுர்லாடி கவிதை விழாவில் கலந்து கொள்ளச் சம்மதம் பெறுகிறார்.
கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்காக யுர்லாடிக்கு புதிய ஆடை வாங்கித் தருகிறார். கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் எனப் பயிற்சி அளிக்கிறார். அடிக்கடி அவளுடன் ஒன்றாகச் சுற்ற வேண்டிய தேவை உருவாகிறது. அதனை வகுப்பு மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள். இதன் காரணமாக வகுப்பில் மாணவர்களுடன் யுர்லாடி சண்டையிடுகிறாள்.
தனது படைப்பாற்றலை அவள் உணரவேயில்லை. வேலை தேடிச் சம்பாதித்துத் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே அவளது ஒரே குறிக்கோள். கவிதை என்பதைத் தனது மனதின் வெளிப்பாடாக மட்டுமே நினைக்கிறாள்.
கவிதை விழாவில் அவள் வாசித்த கவிதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பலரும் பாராட்டுகிறார்கள். இதன் மூலம் அவளுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கக் கூடும் என்ற நிலை ஏற்படுகிறது.

கவிதை விழாவின் இரவு விருந்தில் யுர்லாடி நிறைய குடித்து வாந்தியெடுத்து மயங்கி விடுகிறாள். அவளை ஆஸ்கர் தனது காரிலே வீட்டிற்குக் கொண்டு போய் விடுகிறார். மயங்கிய நிலையில் உள்ள அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மறுநாள் யுர்லாடியின் குடும்பம் அவளை ஆஸ்கர் கெடுத்துவிட்டதாகப் புகார் சொல்கிறார்கள். இதனால் அவரது வேலை பறிபோகிறது.
தனது சகோதரியை போதையில் வல்லுறவு செய்ததாக யுர்லாடியின் அண்ணன் ஆஸ்கரை தேடிவந்து உதைக்கிறான். தன் மீது எந்தத் தவறுமில்லை என ஆஸ்கர். அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி எடுக்கிறார் .ஆனால் பெண்ணின் குடும்பம் அவரைக் குற்றவாளியாக நினைக்கிறது. காவல்துறையில் புகார் அளிக்கத் திட்டமிடுகிறது.
ஆஸ்கர் இதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் பிற்பகுதி. ஆஸ்கரின் மகள் டேனியலாவிற்கும் யுர்லாடிக்கும் இடையில் ஏற்படும் சந்திப்பு. மற்றும் அவளது நாட்குறிப்பை டேனியலா வாசிக்கும் காட்சிகள் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளன.
கவிதை விழாவின் இரவில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த முழு உண்மையையும் யுர்லாடி விளக்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அதை டேனியலா வாசிக்கிறாள். அதன் பிறகு தான் தந்தையின் மனதை, அன்பைப் புரிந்து கொள்கிறாள். அவர் புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என விரும்புகிறாள்.
ஆஸ்கரின் சகோதரி யோலண்டா தனித்துவமான கதாபாத்திரம். அவர் தனது சகோதரனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவற்றைத் தன்னைச் சிறுமைப்படுத்துவதாக ஆஸ்கர் உணருகிறார். எதிர்க்கிறார் இது போலக் குறுகிய காலத்தில் பெரிய செல்வத்தை அடைவதற்கான வழிகாட்டுவதாக இருவர் தொடர்ந்து ஆஸ்கருடன் உரையாடுகிறார்கள். பணம் கேட்கிறார்கள்.
இளவயதில் கிடைத்த புகழ் ஆஸ்கருக்கு தொந்தரவாகவே இருக்கிறது. அவர் கவிதை எழுத மட்டும் விரும்பவில்லை. கவிஞனாகவே வாழ விரும்புகிறார். அதனைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அந்தக் கோபத்தில் குடிக்கிறார். தனது கருத்துகளை உரத்து வெளிப்படுத்துகிறார். அவரைப் புரிந்து கொண்ட ஒரே நபர் அவரது அன்னை மட்டுமே.
படம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகம் போலவே படத்தையும் நாம் அணுகுகிறோம். ஜுவான் சர்மியென்டோவின் ஒளிப்பதிவு அபாரம். சூப்பர் 16mm ஃபிலிமில் படமாக்கியிருக்கிறார்கள். இருவருக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தை ஒரு ஆவணப்படம் போல நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோவாக நடித்துள்ள உபைமர் ரியோஸ் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிக்கிறார் என்ற உணர்வேயில்லை. குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் பேசும் முறை நிஜமாகவுள்ளது. அவரது முகத்தில் நிரந்தரமான வருத்தம் படர்ந்திருக்கிறது.
படம் ஒரு முக்கியமான அரசியலைப் பேசுகிறது. நம் காலத்தில் கவிதை என்பதும் ஒரு வகை வணிகப்பொருளே. இலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லி நிதி திரட்டும் அமைப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்புவதைக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழியாக வெளிப்படுத்த நினைக்கிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். யுர்லாடியின் எந்தக் கவிதையை வாசித்தால் நிதி அளிப்பவர்களுக்குப் பிடிக்கும் என அமைப்பாளர் முடிவு செய்கிறார். அதனை வாசிக்கும்படி வற்புறுத்துகிறார். அதுவும் அடித்தட்டு வாழ்வில் இருந்து உருவாகும் கவிஞர்களைத் தங்களின் பகடை காய்களாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அதிகாரமும் அமைப்பும் விரும்புகிறது. அதனை ஆஸ்கர் எதிர்க்கிறார். கண்டிக்கிறார்.
கலைவட்டாரங்கள் யுர்லாடிவின் ஏழ்மை நிலை காரணமாகவே அவளைக் கொண்டாடுகின்றன. அது ஒருவகைச் சுரண்டல்.

கவிஞர் José Asunción Silvaவை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது ஆதர்சம் மற்றும் லட்சியம் எதுவென ஆஸ்கர் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.
தன் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, தனது சகோதரர்களின் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருக்கும் பதினைந்து வயது யுர்லாடிக்கு, ஆஸ்கரின் வழிகாட்டுதல் தந்தையின் அன்பைப் போலிருக்கிறது. அதை ஆஸ்கரும் உணருகிறார். ஆனால் பொய் குற்றச்சாட்டின் போது குடும்பச் சூழல் அவளை வீட்டின் குரலாக மாற்றிவிடுகிறது, முடிவில் அவள் நடந்த உண்மைகளை வெளிப்படுத்தி ஆஸ்கர் மீதான உண்மையான அன்பைக் காட்டுகிறாள்.
தந்தையை மன்னிக்கும் மகளின் கதை இருவேறு பார்வைகளில் வெளிப்படுகிறது. தந்தை, கவிஞன் என்பது ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போல படத்தில் சித்தரிக்கபடுகிறது. நிறைவேறாத ஆசைகளுடன், கொந்தளிக்கும் கவித்துவ மனநிலையுடன் அலையும் ஆஸ்கரைப் போன்ற கவிஞர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் எவர் வாழ்க்கையும் இதுவரை இப்படி படமாக்கப்படவில்லை.
••