நூலகம் என்பது

போஜே போஜன்

நூலக மனிதர்கள் குறித்த வாசிப்பனுபவம்.

நூலக மனிதர்கள் : இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்வதை விட வாசிப்பு குறித்த அனுபவங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும்

புத்தகத்திற்குச் செல்வதற்கு முன்னாள் இந்தப் புத்தகம் பேசும் நூலகம் பற்றிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது . தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நூலகம் என்பது ஒரு வெற்றுச் செலவு என்கிற மனநிலை உள்ளது குறிப்பாகச் சில எல்லாம் தெரிந்த அறிவு ராமன்கள் ட்விட்டர் மற்றும் முக நூலில் வந்து இந்தச் சென்னை நூலகம் எதற்கு மதுரை நூலகம் எதற்கு டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் ஈபுக் போதுமே இது வீண்செலவு எதற்கு என்பது போல் பேசுகிறார்கள்

ஆனால் அவர்கள் ஒரு முறை கூடச் சென்னை அண்ணா நூலகம் பக்கமோ இல்லை கன்னிமாரா நூலகம் பக்கமாகக் கூடச் சென்று இருக்க மாட்டார்கள். அப்படிப் பட்ட மனிதர்களுக்கு இந்தப் புத்தகம் நூலகத்தின் அவசியத்தைப் புரிய வைக்கும்.

மொத்தம் 32 தலைப்புகளும் 208 பக்கங்களும் கொண்ட இந்தப் புத்தகம் நான் மேலே குறிப்பிட்டது போலவே இது ஒரு அனுபவ தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். முதல் கட்டுரையான படிப்பதற்குப் பரிசு தொடங்கிக் கடைசித் தலைப்பான ரகசிய விளையாட்டு வரை ஒரு ஒரு கட்டுரையும் ஒரு அனுபவம் என்றே சொல்லலாம்.

உண்மையில் நூலகம் என்றாலே ஒரு சாதாரண மக்களுக்குத் தோன்றுவது ஒரு குடிமைப் பணி சார்ந்த தேர்வுகளுக்குப் படிக்கும் இடம் ஆகவும் , எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கும் இடமாகவும் மட்டுமே தெரியும் .உண்மையில் இதற்கு அப்பால் நூலகம் எத்தனை பரிமாணங்கள் கொண்டது என்பதற்கான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

இந்தக் கட்டுரைகளில் வரும் சம்பவங்கள் 60களில் இருந்து தொடங்கித் தற்போது வரை நடைபெறும் கால நிகழ்வாக இருக்கிறது குறிப்பாகப் படிக்கும் புத்தகத்தில் பணம் வைக்கும் நபர் , லா .சா ராவின் தீவிர வாசகி , புத்தகத்தைத் திருடும் புத்தகத் திருடன் , புத்தகத்தின் முடிவு பிடிக்காமல் பக்கத்தைக் கிழிக்கும் வாசகர் , சமையல் குறிப்புகளுக்காகப் புத்தகத்தைத் தேடி வரும் காவல் அதிகாரி , புத்தகம் கிடைக்க வேண்டும் என்று திண்டுக்கல் வரை சென்று வாங்கி வந்த வாசகர் , தமிழ்ப் புத்தகம் மற்றும் கவிதைகளைக் கற்றுத் தேர்ந்த மலையாளி , புத்தகமே துணை என வாழும் ஒரு மனிதர் , முதல் பாகத்தைப் படிக்காமல் இரண்டாம் பாகத்தைப் படிக்கும் வாசகர் , நூலகத்தில் அடி வாங்கிய வாசகன் , இலங்கைத் தமிழர்கள் புத்தகத்தைப் படிக்கப் பட்ட கஷ்டங்கள் , ஒரு நாவல் போன்றே மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் , சிறுவன் செய்த சேட்டைகள் அதனால் அவனுக்குக் கிடைத்த தண்டனை போன்றவை தவிர மேலும் தலைப்புகளும் இதில் இருக்கின்றன.

தமிழில் நூலகம் சம்பந்தமான கட்டுரைகள் மிகவும் குறைவு அதை இந்தப் புத்தகம் தீர்த்து வைக்கிறது என்றே சொல்லலாம். கண்டிப்பாக இந்தப் புத்தகம் ஒரு புதுமையான வாசிப்பு அனுபவம்

••

0Shares
0